Saturday, April 9, 2011

யவன ராணி !

நான் முதன் முதலில் படித்த சரித்திர நாவல் இது.படிப்பவர்களுக்கு மனதிருப்தி உத்தரவாதம்.காட்சியை அப்படியே ஒளிப்பதிவு செய்தது போன்ற வர்ணனை,ஒவ்வொரு அத்தியாயம் முடிவிலும் வைக்கின்ற திருப்புமுனை இறுதிவரை அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகம் செய்யவே முடியாத அளவுக்கு காட்சியமைப்புகள் என்று அற்புதமாக அமைத்ததற்கு சாண்டில்யனுக்கு ஒரு சபாஷ்.நிச்சயம் இந்த கதையை படமாக எடுப்பது என்பது மிகக்கடினமான ஒன்று.அதுவும் அதன் உண்மைத்தன்மை மாறாமல்.காதலும் ஆக்சனும் கலந்து கொடுத்திருக்கின்றார் ரசிக்கும்படியாக. கதை என்னவோ கரிகாற் சோழனை பற்றியது என்றாலும் "இளஞ்செழியனே" முக்கியக்கதாபாத்திரம்.மனதில் இன்றுவரை நீங்கா இடம் உண்டு இந்த இளஞ்செழியனுக்கு.விடாக்கன்டனும் கொடாக்கண்டனுமாக டைபீரியசும் இளஞ்செழியனும் சந்திக்கின்ற தருணங்கள் சுவராசியம் மிகுந்தவை.இரண்டாம் அத்தியாயத்தில் பிடிக்கின்ற வேகம் செல்ல செல்ல மேலேறி இறுதிவரை குறையாமல் இருக்கும்.டாப் கியரில் தூக்கும் என்பார்களே அதுபோல.ஒரு காலத்தில் வணிகத்தில் தமிழகம் தலைசிறந்து விளங்கியது கிரேக்கர்களை அச்சமூட்டியிருக்கின்றது என்ற தகவல் ஆச்சர்யமளிக்கின்றது.அறம் சார்ந்த மறம் நம்மவர்களுடையது.அனைத்து மதத்தினரையும் அரவணைத்து சண்டையின்றி அக்காலத்தில் கொண்டாடிஇருக்கின்றார்கள்.படங்களில் காட்டுகின்ற சண்டைக்காட்சிகளை விட இவர் விவரிக்கும் காட்சிகள் மிக அருமையாக இருகின்றது.சாம்பிராணி தீவில் இருந்து இளஞ் செழியன் தப்பிக்கும் விதமும் "வெண்ணிப்போர்"க்கு வியூகம் வகுக்கும் காட்சியும் சிறப்பு.இறுதியில் அந்த வெண்ணிப்போரும் அதை தொடர்ந்து நடக்கும் புகார் போரும் கண்டிப்பாக இதுவரை எந்த திரையிலும் பார்த்திருக்க முடியாது.அவ்வளவு பிரம்மாண்டம்.கி.பி.இருநூறிற்கே சென்றுவிடுவீர்கள்.உண்மையில் என் மனம் கவர்ந்த நாவல் பற்றி நிறைய சொல்ல வேண்டும்.ஒவ்வொரு கதாபாத்திரம் பற்றியும் நிறைய பேசவேண்டும்.ரசித்த காட்சிகள் பகிர வேண்டும் என்ற ஆவல் எனக்கிருக்கிறது.ஆனால் அது படிப்பவர்களை சோதிக்க வேண்டாமே என நிறைய எழுதவில்லை.யவன ராணியை விட நம்வீட்டுப்பெண்ணாக வரும் பூவழகியே என் மனதில் இடம் பிடிக்கின்றாள்.டைபீரியசின் தேசபக்தி வில்லன் என்றாலும் ரசிக்கவைத்து விடுகின்றது.உண்மை விசுவாசி ஹிப்பலாஸ்,ராக்காயி ,அல்லி என்று கதாபாத்திரங்கள் இன்னமும் மனதில் வாழுகின்றன.
எத்தனை முறை படித்தாலும் புதியதாய் படிப்பது போன்றே உணர்வு எனக்கு.
யவன ராணி -அழகானவள் 

No comments: