Saturday, November 7, 2015

மழை நின்ற பின்பும்..

பாடல் : மழை நின்ற பின்பும் தூறல் போல
படம் : ராமன் தேடிய சீதை
இசை : வித்யாசாகர்
பாடலாசிரியர் :கபிலன்
பாடியவர் : கல்யாணி

வித்யாசாகரின் தரமான ஆல்பங்களில் ஒன்று "ராமன் தேடிய சீதை " ஒவ்வொரு பாடல்களுமே முத்து.. என்ன புள்ள செஞ்ச நீ பாடலில் ஒரு பாமரனின் குரலில் உருகி இருப்பார் வித்யாசாகர்.. பெற்றவனுக்குத் தானே தெரியும் புள்ளையோட அருமை .உணர்ந்து பாடி இருப்பார்..அந்த வலியை அப்படியே நம்மிடம் சேர்த்திருப்பார். இப்பவே இப்பவே இன்னுமொரு முத்து..
இதிலே மழை நின்ற பின்பும் தூறல் போல தான் என்னோட most favorite .
இந்தப் பாடலைப் பிடிக்கக் காரணம் இது பெண்ணின் மனக் குரலாக வருவது தான்..இந்தப் பாடலை எழுதியவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் :) நல்ல உவமை வரிகளில் ..

அடர்த்தியான பெண் குரலை விட மெலிதான குரல் வெகுவாக ஈர்த்து விடுகிறது.. பாடலானது ஒரு  ரமணிச்சந்திரன் சிறுகதை படித்த உணர்வைக் கொடுத்து விடுகிறது :) தனக்கு வந்த காதலை அவ்வளவு எளிதாக எந்தப் பெண்ணும் சொல்லி விடுவதில்லை.. ஆணுக்கு அந்த உணர்வு பெரும் பாரம் உடனே இறக்கி வைத்து விட வேண்டும்..ஆனால் பெண்களுக்கு அது வாழ்க்கை , யோசித்தே தான் முடிவு எடுப்பார்கள்..சட்டென உணர்வின் வசம் செல்லாம  நாலையும் யோசிப்பதும், அப்படியே சென்றாலும் யாசிக்கச் சிரமப்பட்டு நிற்பதும் நான் பார்த்த பெண்களுக்கான குணம்..இதை அப்படியே பதிவு செய்திருக்கும் இந்தப் பாடல்.. எத்தனையோ பாடல் வரிகள் இசை நன்றாக இல்லாமல் நம்மை வந்தடையாமல் குப்பைக்குள் முத்தாகக் கிடக்கின்றன..நல்ல இசை என்பது தனியாக ஹிட் ஆகலாம்..ஆனால் பாடல் வரிகள் மனதில் பதிவது என்பது இசை ஒத்துழையாமல் நிகழாது.. இப்பாடலிலும் இசை தன் பணியைச்  செவ்வனே செய்கின்றது..
மெலிதான ஹம்மிங்ல ஆரம்பிக்குது பாடல்..
மழை நின்ற பின்பும் தூறல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல் ..
ஒரு பாடலை ரசிக்க வைப்பதில்  எப்படி இசை மற்றும் வரிகளுக்குப் பங்கிருக்கிறதோ அதே போல பாடலைப் பாடியவரும் .
அதிலும் சில சொற்களை உச்சரிக்கும்போது அதிலே கொடுக்கும் அழுத்தம் ,கிறக்கம் ,மென்மை இப்படிப் பல உணர்வுகள் பாடல் வரிகளுக்கு அர்த்தமூட்டுகின்றன.. இதை இந்தப் பாடலைப் பாடிய பாடகியும் உணர்ந்து செய்தது சிறப்பு..ஆங்காங்கே பாடலின் இடையே மூச்சு விட்டிருப்பார் அதுவும் இந்தப் பாடலுக்கு அழகு சேர்க்கவே செய்கின்றது..
இந்தப் பாடலில் இரண்டாம் சரணம் தான் எனக்கு மிகப் பிடித்தமானது :)
கண்ணிமைகள் கைத் தட்டியே உன்னை மெல்ல அழைக்கிறதே
உன் செவியில் விழ வில்லையா..  உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே
உன்னருகே நானிருந்தும் உண்மை சொல்லத் துணிவு இல்லை
கைகளிலே விரல் இருந்தும் கைகள் கோர்க்க முடியவில்லை"

இந்தப் பாடலுக்கு முத்தாய்ப்பான வரிகளாக நான் நினைப்பவை
"உன்னை எனக்குப் பிடிக்கும்
அதைச் சொல்வதில் தானே தயக்கம்
நீயே சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்துக் கிடக்கும் "
அடிக்கடி இந்தப் பாடலைக் கேட்க நேரிடும்போது இந்த வரிகளில் வழியும் பெண்மையை  வெகுவாக ரசிப்பேன் :))
இந்தக் குரல் கொடுத்த உணர்வை , காட்சியமைப்பில் கோட்டை விட்டு விட்டதாகவே தோன்றும்..அதனால் இந்தப் பாடல் கேட்க மட்டுமே..
பாடல் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை காதல் வந்த பெண்ணின் மனதை ,மெதுவான துள்ளலோடு (அது என்ன துள்ளல் என்று சொல்லிட்டு மெதுவா ன்னு யோசிக்காதீங்க.. பெண்ணின் மலர்ப்பாதம் எவ்வளவு துள்ளினாலும் மென்மை தான் ) இசையால் படம் பிடித்திருப்பார் வித்யாசாகர்..என்றும் இனியவைப் பட்டியலில் ஒரு தரமான மெலடி..மழை நின்ற பின்பும் தூறல் போல  பாடல் முடிந்த பின்பும் பாடலின் ஆலாபனை மனத்தில்..