Tuesday, December 31, 2013

எனக்குப் பிடித்த டிவிட்டர்கள்:)



எனக்குப் பிடித்த டிவிட்டர்கள் என சில டிராப்ட் கிடக்கு:)  ஆனால் எதையும் 
முழுமைப் படுத்தாமல் வெளியிட மனம் வரவில்லை.அதே சமயம் இப்படி 
ஒரே பதிவில் இயன்றவரை பிடித்தவற்றைச் சொல்ல வேண்டும் எனத் 
தோன்றியதால் திடீரென இந்த உப்புமா பதிவு :)

ஆத்மார்த்தமாக உணர்ந்ததை இனி :

நிஜமாகவே நன்றாக எழுதக் கூடிய ஆனால் டிவிட்டரில் அதை அவ்வளவாக 
காட்டிக் கொள்ளாத நல்ல பதிவர் @Poopoonga
எதிர்பாராவிதமாக கை முறிந்து ட்விட்டர் பக்கம் சற்று இளைப்பாற வந்த 
பொழுது கலகலவென பேசிக் கொண்டிருந்த @KirukkanJagu  வைப் பார்த்ததும் 
சட்டெனத் தெளிவு வந்தது..சிறந்த தன்னம்பிக்கையாளன் 

எந்த ஒரு கோபத்தையும்,வேதனையையும்,மோசமான கலாய்த்தல்களையும் 
சாதாரண புலம்பலாகவும் கண்ணியமான தத்துவமாகவும் மாற்றுகின்ற 
வல்லமை (நிச்சயம் பெரிய விஷயம் தான் எனக்கெல்லாம் வார்த்தைகள் 
கூர்மையா வந்து விழும் :) ) கொண்ட @Sricalifornia இவ்வருடத்தில் நல்ல 
ட்விட்டர் என்பதைத் தாண்டி எனக்கு நல்ல தோழி என்ற பதவியும் 
ஏற்றிருக்கிறார் (அவ்வளவு சீக்கிரம் யாரையும் என் நட்பு வட்டத்தில் நுழைய 
விட மாட்டேன் :)மருத்துவ ரீதியாக எவ்வித சந்தேகங்களும் எந்த நேரத்திலும் 
கேட்டுத்  தெளிந்து கொள்ள முடிவது இன்னுமொரு சிறப்பு

ஒவ்வொரு ட்வீட்டும் அட இது நம்மள  போலவே இருக்கே என புருவம்
உயர்த்த வைத்த @RenugaRain  மனத்திற்கினிய பெண்களின் பட்டியலில்
மானசீகமாக வந்தமர்ந்து கொண்டிருக்கிறார் .அதற்கான எவ்வித
மெனக்கெடலும் இல்லாமலேயே .

புத்திசாலித்தனம் இருந்தாலும் கூடவே குழந்தைத் தனம் வெகு இயல்பாய்
அமைவது எல்லாம் வரம் .லேடி தெனாலி @subaangi ஒருமுறையேனும்
பார்த்து கன்னம் கிள்ளி காதைத் திருகி வைக்க வேண்டும் எனத் தூண்டி
வைத்திருக்கிறார் :)நான் அதிகம் ரசித்த , ரசிக்கின்ற பெண் .

சாய் சித்ரா என்றாலே மொக்கை என்பது மட்டும் தான் எல்லாருக்கும்
நினைவுக்கு வரும்.ஆனால் அவர் அட்டகாசமாகவும் எழுதுவார்.ஆனால் அது
 ரொம்பக் குறைவு.ஆர்வம் அந்த ஏரியாவில் அவருக்கு இல்லை
என்பதால்.என்றேனும் சோகம் இழையோட மெலிதாய் ஒரு தத்துவம்
விழும்..நிச்சயம் அந்த நேரத்தில் நம் மனதை பிரதிபலிப்பதாகவும்
அமையும்.எவரையும் காயப் படுத்த விரும்பாத,பெண்ணியம்
பேசாத,இயன்றவரை சுற்றி உள்ளவர்களில் ஒருவரேனும் நம்மால்
மகிழ்ந்தால் அது வரம் என்ற எண்ணம் கொண்ட பெண்..கற்றுக் கொள்ள
நிறைய இருக்கிறது இவரிடம் :)

சிறந்த மகளதிகாரம் இம்முறை எனை அதிகம் ரசிக்க வைத்தவர்கள் காயத்ரி 
(முகநூல்),ஜனனி அம்மா,கீதா .காயத்ரியின் மயக்குறு மகள் பதிவுகள்
அனைத்தும் அட்டகாசம்.தவறவிடாமல் படியுங்கள் 
என்னை கவனித்துப் பார்த்திருந்தால் தெரியும்.எவ்ளோ பேர் இருந்தாலும் 
குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே திரும்பத் திரும்ப இயல்பாக 
கலாட்டா,கேலி,என சகஜமாய்ப் பேசிக் கொண்டிருப்பேன்.பட்டெனப் பழகுவது வெகு சிரமம்.அதனாலேயே இங்கு பலருடன்  நிறைய 
இடைவெளியும்,புரிதலற்ற தன்மையும். ஆனா இந்த ஸ்வீட் சுதா மட்டும் 
எப்படி பட்டுன்னு எல்லார்கிட்டயும் ஒட்டிக்கிறாங்க என ஆச்சர்யமும் 
பொறாமையும் உண்டு :)ஆனால் நல்ல பழக்கம்.கொஞ்சம் சுரண்டி 
எடுத்துக்குவோம்:)

இவ்வருடத்தில் எனக்கு மிகப் பிடித்த ட்வீட்கள் அதிகம் @Alexxious 
உடையது.ஒவ்வொன்றும் இன்னொன்றுக்கு இளைப்பில்லை ரகம் :)செம
கிரியேட்டிவ்.

நவீனுக்குப் பிறகு நான் ஏற்றுக் கொண்ட   நல்லதொரு தம்பி  


நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய நல்ல ட்விட்டர் @Im_sme 

 இவங்களாம் பெரிய ஆளு நம்ம கிட்ட பேசவா போறாங்க என நமக்கு நாமே 
ஒரு திரை போட்டு வெளியே உட்கார்ந்து இருப்போம்.ஆனால் ஏதேனும் ஒரு 
தருணத்தில் திரை  விலக்கி சன்னமாய்க் கவனித்து பேச ஆரம்பித்தால் 
அவர்களும் சகஜமான ஆட்கள் தான் என ஓர்  ஆசுவாசம் வரும் அப்படி நான் 
வியந்தும்,விலகியும் மரியாதைக்குரியவர்கள் பட்டியலில் இணைத்து 

வைத்திருப்பது @Skpkaruna
தமிழில் ஒரு தகவல் பக்கம் @Tamilfacts பல கேலி கிண்டல்களையும் தாண்டி 
ஆச்சர்யமான தகவல்களை வெகு சுவராசியமாக தொகுத்து வழங்கும் முயற்சி போற்றுதலுக்குரியது.வரும் புது டிவிட்டர்கள் ஒவ்வொருவரும் 
தவறாமல் follow  செய்தே ஆக வேண்டும் என்பதற்கான என் உறுதியான 
பரிந்துரை
பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு இல்லை என்று பொதுவாய்க் குற்றச் 
சாட்டு வைப்பவர்கள் சற்றே @Jen_guru @Shanthhi  .பெரிய 
ஊமைக் குசும்பிகள் :) போற போக்குல நறுக்குன்னு நையாண்டி செய்வாங்க 
பாருங்க இப்படி ஸ்மைலி போடலாம் :)))))))))))))))

என்னதான் நாம கவித எழுத முயற்சி செய்தாலும் அதை முழுமைப் படுத்த
படுற பாடு..ஆனால் போடுகின்ற ஒவ்வொரு ட்வீட்டிலும் ரசிக்க வைக்கின்ற
நபராக @raajaacs 
சிறந்த #365ப்ராஜெக்ட்  ராஜா க்விஸ் ஒரு துளி கூட பிறரை மட்டம் தட்டாது
 உள்ளதை அழகுபடச் சொல்லி சுவராசியமாய் ஒற்றை ஆளாய் மெனக்கெட்ட 

@Rexarul   மாஸ்டரின் உழைப்புக்கு வந்தனங்கள்.இவர் போன்ற ரசிகர்கள் தான் ராஜாவுக்கு பலம்:)



நண்பர்கள் பழக இனிமையான கலகலப்பான சகாக்கள் முசகுட்டி @vrsaran 
@Tparavai 

இவ்வருடத்தில் சிறந்த மாஸ் எண்டெர்டைனெர் என எனக்குத்

 தோன்றுவது @Kattathora @Thirutukumaran @Sathi_ya_priyAn


கட்டதொர ஒரு டாபிக் டேக் வைத்து எழுதும் அத்தனையும் அட்டகாச ரகம் :) 
நையாண்டியும் நக்கலும் அவ்வப்பொழுது புலம்பலுமாக ,அன்பாலோ செய்த 
பிறகும் ஈர்த்து எனைத் திரும்ப பாலோ செய்ய வைத்த பெருமை திருட்டுக் 
குமரனுக்கு..ஒரு சிறிய இடைவெளியில் அவ்வப்பொழுது வம்பிழுத்து நான் 
ரசிக்கும் நபர்:)ட்விட்டரில் இது புதுசு:)அன்பாலோ செய்தவர்களை அடடா மிஸ் செய்கிறோமோ எனத் தோன்ற வைப்பது அவ்வளவு இலகுவான 
காரியமில்லை:)ஆனால் அன்பாலோ செய்தது எவ்வளவு பெரிய ஆசுவாசம் 
எனத் தோன்ற வைப்பது வெகு எளிது .பிடிக்காவிடில் சத்தமே இல்லாமல் 
அன்பாலோவும் பிடித்ததற்கு ஆர்ப்பாட்டமே இன்றி சகஜமாகவும் இருந்து 
பார்த்தால் மட்டுமே நிச்சயம் இது சாத்தியம்:) எனது ஆல் டைம் ஃபேவ் லிஸ்டில்  இணைந்திருக்கிறார் திகு :)

@sathi_ya_priyan விளையாட்டாய் ஹூ டு ஃபாலொ கொடுத்த சிபாரிசில் செக் 
செய்த . ..ஒரு அரை நாள் முழுக்க ரசித்துச் சிரிக்க வைத்தது இவரது 
பக்கம்..இன்றும் டைம் லைனில் எத்தனைத் தக்காளிச் சட்னி இருந்தாலும் 
தான் உண்டு தன் கமெண்ட் உண்டு என அனைவரின் கவனத்தையும் 
ஈர்த்தவர்..எழுத்துப் பிழைகளை மட்டும் சரி செய்து விட்டால் இன்னும் சூப்பர் :)


சில சமயம் குதர்க்கம் எனத் தோன்றினாலும் இவரைப் போன்று அப்படியே 
எதையும் ஏற்றுக் கொள்ளாமல் மாற்றுச் சிந்தனையாளர்கள் அவசியம் தேவை என்பேன்  @GVhere  விவாதத்தை வேறு ஒரு களத்திற்கு எடுத்துச் 
செல்ல ஏதுவாக இருக்கும்.கூத்தாடி (ட்விட்டர் தான்:) ) க்கும் இவருக்கும்
 நடக்கும் விவாதங்கள் வெகுவாகவே ரசிக்க வைத்திருக்கிறது என்னை:)

அறவே பிடிக்காத சந்தானத்தை பிடிக்க வைத்ததில் இவர் @Razkolu  பங்குண்டு:)எதிர் கருத்துக்களை எவனா இருந்தா எனக்கென்ன என்ற தொனியில் இவர் சொல்லும் பாங்கு பிடிக்கும்.பல புது டிவிட்டர்கள் எனக்கு அறிமுகம் ஆவது இவரது பாரபட்சமற்ற RT யினால் தான்.

இந்தப் பெண் கொடுத்து வைத்தவள் இவன் கிடைக்க எனத் தோன்ற வைப்பது 
ஒரு ஆடவனுக்குக் கிடைத்த வெற்றி.வெகுமானம்.ஒரேயடியா பாசத்துல
பொங்க வைக்கிறாரோ எனத் தோன்ற வைத்தாலும் நான் ரசிக்கும் 
எமோசனல் இடியட் இந்த @Rasanai

அவரின் மகள் மீது இனம்புரியா அன்பும்,அவளைப் பெற்ற இவர் மீது ஒரு வித 
பொறாமையும் இன்றி எந்த ஒரு டிவிட்டரும் இருக்க முடியாது என்றே 
அவதானிக்கிறேன்..நான் நேரடியாகக் காணாமல் நேசிக்கும் பெண் 

குழந்தைகளில் குஷியும் ஒருத்தி:)

படிக்க போரடிக்காத சின்னச் சின்ன டிட்பிட்ஸ் களினாலும் வெகு 


எளிமையான பேச்சினாலும் தனியே கவர்ந்து நிற்கிறார் @Nvaanathi

எனை எப்பொழுதுமே எழுத ஊக்குவிக்கும் நண்பர்களில் புதியதாகச் 
சேர்ந்திருப்பவர் @RagavanG  ஜிரா .பல தகவல்களின் தொகுப்பும் கூட :)

இவ்வருடத்தில் நான் மிகவும் ரசித்த பெண் ட்விட்டர் எழுத்துக்கள் 
மிருதுளாவும் ,யமுனாவும்.வார்த்தைகள் நன்கு வசப்படுகின்றன 
இவர்களுக்கு 


அதிகம் பேசி கூட இருக்க மாட்டேன்.ஆனால் அத்திப் பூத்தாற் போல அந்த 
நபர்கள் நம் மீது வைத்திருக்கும் மரியாதை தெரிய வரும் தருணம் 
நெகிழ்வானது.அது போல ஒரு அழகான தருணத்தைக் 
கொடுத்தவர்கள் @RavikumarMGR @Piliral நீங்க பாடல்களை நன்றாக 
கவனித்துக் கேட்பவர் என என்னை கவனிச்சு பாலா தன் பாடலுக்குக் கருத்து 
கேட்டப்போ எனக்கு கண்ல வேர்த்திடுச்சு :))

எனக்கு மிகப் பிடித்த பதிவுகள் 
என் அமெரிக்கப் பயணமும் அதன் சாரமும் :-)

மிகப் பிடித்த குறும்படம் குட்டிம்மா (நிச்சயம்  நீங்க இடம் பிடிக்கும் என்பது என் துணிபு)


இவ்வருடம் நான் ரசித்த அடக்க முடியாமல் சிரித்த மரண கலாய் பொதுவாய் 

பெண்களை முகம் சுளிக்க வைக்கும் டாபிக் ஆனால் காரண கர்த்தாக்களால் 

கலகலப்பானது @ThirutuKumaran @Kanapraba


பிறரைக் கேலி செய்ய விட்டு இயல்பாய் ஒதுங்கியதில் இருவரின் ஆடிட்யூட் 
பாராட்டத் தக்கது..:)

இவ்வருடத்தின் மிக மோசமான கலாய்த்தல்கள்  என நான் நினைப்பது 
தலைவா படத்திற்கு கலந்து கட்டி அதிகப்படியாகவே போனது மட்டுமின்றி 
தனக்கு அறவே பிடிக்காத விஜய் ரசிகை/ரசிகர்களை கடுமையாகத் தாக்கியது.

வருடத்திற்கு இப்படி ஒரு பஞ்சாயத்து, ஒரு மோசமான சூழலை உருவாக்கி 
விடுகிறது.உண்மையில் அந்த நேரத்தில் , நான் அதிகம் பேசாவிட்டாலும் 
 சிலர் மீது நல்லதாய் இருந்த பிம்பம் அசைந்து விட்டது உண்மை.இவ்வளவு 
இறங்கி இருக்க வேணாம் என்பது என் தாழ்மையான கருத்து.

திடீர்னு சவுண்ட் க்ளவுடே ஒரே அமளி துமளி..அம்புட்டுப் பேரும் பாட 
ஆரம்பிச்சுட்டாங்க ஆனால் சிறந்த குரல் என்பது எவ்வித விவாதங்களுக்கும் 
இடமின்றி இந்தச் சுட்டி @NangaiN உடையதுதான் வந்தாளே ராக்கம்மா 

இவ்வருடத்தின் சிறந்த டேக் ஆக நான் கருதுவது #IFPoliceEnterintoTwitter

மனம் விட்டுச் சிரிக்க வைத்த அட்டகாசமான டேக்.பிறிதொரு தருணத்தில் 
தொகுக்க உத்தேசம்:)


எனது ட்விட்டர் டைம் லைனை அழகாகவும்,அர்த்தமுள்ளதாகவும் ஆக்கும் 
அத்தனை நபர்களுக்கும் என் நன்றி :) ஆக்கப்பூர்வமாக ஆக்கியதில் நிச்சயம் 
இருவருக்கு அதிக பங்குண்டு.அது நம்ம சூப்பர் ஜோடி @N_shekar @amas32
என்னை எவ்வித ஆதாரமும் இன்றி நம்பி ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பணம் உதவி செய்தது.அதையெல்லாம் தாண்டி  இணையம் ஊடாகவே பழகியும் ஒரு அபரிமிதமான அன்பைப் 
பொழிவது..என்ன தவம் செய்தனை இங்கிதை யான் பெறவே:)

இந்த மூன்று வருடத்தில் வெகு நிதானமான பயணம் என்னுடையது.முக்காவாசிப் பேரு ஆக்டிவாக இல்லாததாலேயே ஃபாலொவர்ஸ் எண்ணிக்கை அதிகம் என்ற யதார்த்தம் ஒத்துக் கொள்ள வேண்டிய அதே தருணத்தில் , நம் எழுத்தையும் வாசிக்க மூவாயிரம் பேர் இருக்கிறார்கள் என்பதை நினைச்சா..:)



Thursday, December 12, 2013

கூண்டுக்குள்ள என்ன வச்சு..

படம்                    : சின்ன கவுண்டர்
பாடல்                 : கூண்டுக்குள்ள என்ன வச்சு 
இசை                   : இளையராஜா 
பாடலாசிரியர் :  R .V .உதயகுமார் 

பொதுவாக இந்தப் படத்தில் முத்துமணி மாலை தான் நான் விரும்பிக்கேட்பது.
இந்த கூண்டுக்குள்ள என்ன வச்சு பாடல் சோகமானது என்பதால் உடனே 
சானல் மாத்திடுவேன்.சமீபத்தில் தான் எதற்கும் கேட்போமே என்று வரிகளும் 
ஊன்றிக் கேட்டதில் மிகவும் பிடித்துப் போய் விட்டது. ஒவ்வொரு வரிகளிலும் 
சின்னச் சின்ன சேதிகள்.வெகு இயல்பான பேச்சு வழக்கில் அமைந்தது 
இன்னும் பாடலுக்கு அழகைச் சேர்த்திருக்கின்றது .
கிராமத்து வாழ்க்கை என்றால் என்னவென்றே அறியாமல் வளர்ந்தவர்களுக்கு இந்தப் பாடல் பல சேதிகளைச் சொல்லும்.

சினிமா தாண்டி எவ்வளவோ பொழுது போக்கு
அம்சங்கள் வந்து விட்ட போதிலும் ,படத்தைப் பார்ப்பதுவும் முன்பு போல
வெகு சிரமமின்றி மலிந்து விட்ட போதிலும், சினிமா என்ற பொழுது போக்கு 
அம்சத்திற்கான அவசியம் என்னவென்று ஆராய்ந்தோமானால் வருங்காலச் 
சந்ததிக்கு , முந்தைய காலம் ,அக்கால மனிதர்கள் எப்படி 
இருந்தார்கள் என்பதை எல்லாம் அறிந்து கொள்ள ,அற்புதமான ஒரு ஊடகம் 
இது. ஆவணப் படுத்துதல் என்பது அவசியமான ஒன்று. அப்படி ஒவ்வொரு கால கட்டத்தையும் 60,70,80,90 ,2000 கள் எப்படி அக்காலத்திய மனிதர்கள் எப்படி 
அக்கால கட்ட கிராமம் எப்படி , அக்காலத்திய நாகரிகம் என அழகாய் ஆவணப் 
படுத்தியதில் சினிமாவின் பங்கு பெரிது என்றால் அது மிகை ஆகாது.
வெறுமனே ஏட்டில் படிப்பது வேறு காணொளியாகப் பார்ப்பது வேறு.ஒரு 
காமராஜர் ,பெரியார் வாழ்ந்தார்கள்  என்பதெல்லாம் பின்னாளில் அதிசயத் தக்க ஒன்றாகவே இருக்கும்.அதை  மூன்று மணி நேரமாகப் பதிவு செய்ததில் நிச்சயம் இந்த மனிதர்கள் எப்படி என வரும் தலைமுறை அறிய ஒரு வாய்ப்பாகவே அமையும்.திரை இசை மட்டும் இல்லாவிட்டால் இசையை 
இத்தனை பேர் ரசித்திருப்போமா என்பதே கேள்விக் குறி தான்.
அது போலத் தான் கிராமத்துப் படங்களும் பாடல்களும்..அத்தைகைய ஒரு பாடலாகவே இதையும் நான் பார்க்கிறேன்.

"கூண்டுக் குள்ள என்ன(னை ) வச்சு 
கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக் கிளியே.."

இதுல கோலக் கிளியே வா இல்ல (கோழைக்  கிளியே )வா என்றொரு 
சந்தேகம் என் காதுக்கு வந்ததுண்டு. சுகன்யா தைரியமா கொலை செய்து 
விட்டுச் சென்றிருந்தாலும் பேச்சு வழக்கில் ஏதோ செல்லமா கோபிச்சுத் 
திட்டறாரோன்னு நினைச்சதுண்டு.

"கண்ணு   வலது கண்ணு தானா துடிச்சதுன்னா ஏதோ நடக்குமின்னு 
பேச்சு "

நல்ல சகுனம் கெட்ட சகுனம் என நம் மக்களின் வாழ்வோடு கலந்துவிட்ட சில நம்பிக்கைகள் உண்டு. அதில் இந்த வலது கண் துடிப்பதுவும் ஒன்று.
என் அம்மா சொல்வதுண்டு வாழப் போற பொண்ணுக்கு வலது கண்ணு துடிக்கக் கூடாது ன்னு..ஏதோ கெட்ட சகுனமாம்..அந்தக் கெட்ட சகுனதிற்குத் தகுந்தார் போலவே

"மானம் கொறையுமின்னு மாசு படியுமின்னு வீணா கத முடிஞ்சு போச்சு "

நடந்த நிகழ்வைச் சொல்லி விடுகிறார்.

" ஈசான மூலையில லேசான பல்லிச் சத்தம் மாமன் பேரைச் சொல்லிப்
 பேசுது"

இந்த ஈசான மூலை  என்பது வட கிழக்கு (நம் வீட்டு அடுப்படி இருக்கும் இடம் வாஸ்து படி ) பல்லி கத்தும் சத்தம் கொண்டும் பலன் சொல்வாங்க அம்மா .
சின்னச் சின்ன நம்பிக்கைகள் :)

"ஆறாத சோகம் தன்னைத் தீராம சேர்த்து வச்சு ஊரும் சேர்ந்து என்ன ஏசுது "

இந்த ஏசுவது என்பதும் வெகு இயல்பான கிராமத்து வழக்கு தான்.திட்டுவதை அப்படிச் சொல்வார்கள்.

"தென்னங்கிளையும் தென்றல் காற்றும் குயிலும் அடி மானே ஒன்ன தினம்
பாடும்
கஞ்சி மடிப்பும் கரை வேட்டி துணியும்
இந்த மாமன் கதையை தெனம் பேசும்"

கிராமத்து வீடுகள் தோப்பு,தோட்டம் சூழப் பார்த்திருக்கின்றீர்களா?ஒரு விதத்தில் அப்பேர்ப்பட்ட சூழலையும் சொல்லிச் செல்கிறது பாடல்.
இந்தக் கஞ்சி மடிப்பு என்பது பருத்தி ஆடைகளுக்கு விறைப்பைக் கொடுக்க
பானையில் ஆக்கிய சோறை வடிச்ச கஞ்சில சற்றே நீர் சேர்த்து அலசிக் காயப் போடுவார்கள்.இந்தக் கஞ்சிக்கு ஜவ்வரிசியை உடைச்சு வேக வச்சு அதிலும் நீர் கலந்து அலசுவதுண்டு.

"பொள்ளாச்சி சந்தையில கொண்டாந்த சேலையில சாயம் இன்னும் 
விட்டுப் போகல "


கட்டிய கணவர் உடனே இறந்து விட்டால் தாலியில் உள்ள மஞ்சளின் ஈரம்
கூடக் காயல என்பதுண்டு.உள்ள சோகத்தை பளிச்சென எடுத்துச் சொல்லும் .
எந்த ஒரு பருத்தி ஆடையும் முதல் சலவையில் சாயம் போகும்..அப்படிக் கூடப் பயன் படுத்தப் படாம கிடக்கு என்ற இயல்பான ஆதங்கம் ஒரு பக்கம்

"பண்ணாரி கோவிலுக்கு முந்தானை ஓரத்துல நேந்து முடிச்ச கடன் தீரல"

பண்ணாரி கோவில் பற்றி கோவை வாசிகளுக்குச் அறிமுகமே தேவையில்லை. இவ்விடத்தில், இந்த முந்தானை முடிச்சு தான் நான் ரசித்த
வார்த்தைகள் .. என் அம்மா அது போல நேந்து கொண்டு பார்த்திருக்கேன்.
பல சமயம் ஒரு வெள்ளைத் துணியில் முழுக்க மஞ்சள் நீரில் நனைத்து
அதிலே ஒன்னேகால் (அது என்ன கணக்கோ காலணா)ரூபாயை முடிந்து
வச்சிருப்பாங்க. நாம் நினைச்ச உடனே கோவிலுக்குப் போக முடியாது
என்பதால் ஏதேனும் சோதனைக் காலத்திலோ அல்லது ஒரு காரியம்
ஈடேறவோ சட்டென வீட்டில் இப்படிச் செய்து காணிக்கை எடுத்து வச்சு
காரியம் ஈடேறவும் அக்கோவிலுக்கு செல்லும் தருணத்தில் காணிக்கை
செலுத்துவது உண்டு.

எவ்வளவு சேதிகள் பாருங்கள் இந்தப் பாடலில் :-)

நவீன காதலில் ஆயிரம் டா ,லூசு என இருந்தாலும் இந்த "மாமா"என்ற
அழைப்பிற்கு ஈடாகா :))

(மாமா மாமா  ஒன்னத் தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே ")

எங்கள் வீட்டில் வழி வழியாக அம்மாச்சி,அம்மா,அண்ணி என அனைவரும்
தங்கள் கணவரை மாமா என்றே அழைப்பதுண்டு.பல வீடுகளில் இன்னமும்
இந்த அழைப்பைக் கேட்கலாம் .
ஒவ்வொரு ஊருக்குமான வட்டார வழக்கு என்பது ஒரு வகை சிறப்பம்சம்
ஆனால் நாகரிக வட்டத்தில் (?!) இருப்பவர்கள் அதை கௌரவக்
குறைச்சலாகக் கருதி "பண்ணித் தமிழுக்கு"மாறிவிட்டது வருந்தத் தக்க
ஒன்று.

பாட்டுக்கு மெட்டமைப்பது இசையமைப்பாளர்களுக்கு சவால்.மெட்டுக்குப்
பாட்டெழுதுவது பாடலாசிரியர்களுக்கான சவால்.இது எப்படி அமைக்கப்பட்ட
பாடலோ யான் அறியேன்.ஆனால் இரண்டும் இலகுவாகப் பொருந்தி காதுக்கு
இனிமை சேர்த்திருக்கின்றன..

மண்வாசனையுடன் எடுக்க பாரதி ராஜா மட்டுமே என்ற பிம்பத்தைத் தாண்டி இயக்குநர் R .V .உதயகுமார் தானும் உண்டு என நிரூபித்த படமாகவே இதைப்
 பார்க்கிறேன்.

தற்பொழுது டிவிட்டரிலும் கூட பேச்சு வழக்கில் எழுதுவது ஒரு இலகுவையும் ஆசுவாசத்தையும் கொடுக்கிறது.போலவே இந்தப் பாடலும் மனதிற்கு மிக நெருக்கமாக வந்தமர்ந்து கொள்கின்றது:)



Sunday, July 28, 2013

#365RAJAQUIZ ஒரு நினைவலைகள் ..!

ட்விட்டர் @Rexarul

நடத்திய #365RajaQuiz ஐ கௌரவிக்கும் பொருட்டு என்னாலான  என் மனம் திறந்த பதிவு .இந்த நெடிய பயணத்தில் அவ்வப்பொழுது நானும் உடன் வந்திருக்கிறேன் என்பதே எனக்குப் பெருமையாக இருக்கின்றது .என்ன ஒரு சமர்ப்பணம் மாஸ்டர்… மாஸ்டர் என்ற வார்த்தைக்கு முழுக்க பொருள் சேர்த்திருக்கின்றார் . நிச்சயம் ராஜா மட்டும் இவரின்  இந்த அர்ப்பணிப்பான அவருக்கு ஒரு பைசா பிரயோசனம் இல்லாத பொழுதும் காரியத்தை செய்ததை அறிய நேர்ந்தால் மனிதர் புல்லரித்துப் போகக் கூடும் இப்படி ஒரு ரசிகரை நினைத்து.. எத்தனையோ ராஜா ரஹ்மான் சண்டைகளை இந்த ட்விட்டர் பார்த்து இருக்கின்றது. ஆனால் மாஸ்டரைப்  போன்ற ஒரு ரசிகனை பார்ப்பது அபூர்வம் என்று எந்த இசையமைப்பாளரை ரசிக்கும் இதயம் சொல்லும்.. நிச்சயம் ஒரு பொறாமை கூட வரும்..

பலரின் ரசிகர்கள் அவர்கள் ரசிக்கின்ற விதத்தில் குருட்டுத் தனமான பற்றுதலில் அவர்களின் ரசனை,ரசிப்பவர்கள் மீதே வெறுப்பே வரும்.அதில் நடிகர்களுக்கோ அல்லது இசையமைப்பாளர் ரசிகளுக்கோ இருக்கும் ரசிகர்கள் பெரும்பாலோனோர் விதிவிலக்கே அல்ல.ஆனால் மாஸ்டர் அவர்களில் இருந்து முற்றிலும் வேறுபடுகின்றார். ஒரு பாடலை ரசிப்பதற்கு அவர் வைக்கும் ஆழ்ந்த காரணங்கள் அதை அவர் ரசித்துச் சொல்கின்ற விதம் நிச்சயம் பலரை அவர் வசப்படுத்தி வைத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

இலவசம் அவர்கள் குறிப்பிட்டது போல எவ்வளவு விஷயங்கள் எத்தனைப் பாடல்கள் ..நான் நிறைய பாடல்கள் டௌன்லோட் செய்து வைத்திருக்கிறேன் ஆனால் அவர்  இசைத்துணுக்கில் இருக்கும் க்ளாரிட்டி சத்தியமாய் இராது..அவ்வளவு அருமையாக ஒலிக்கும். ஆச்சர்யமாக இருக்கும்..எனக்கு பல நேரத்தில் ஒரு ஆகச் சிறந்த மன அழுத்த விடுதலை செய்யும் அம்சமாக இந்த #365RajaQuiz இருந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.அதனால் தான் நிறைவு தினத்தில் எந் த ஒரு திட்டமிடலும் இன்றி வந்தவுடன் மனதில் இருப்பதை படபடவென எழுதுகின்றேன்.@vrsaran . @RagavanG போன்ற நல்ல நண்பர்களைப் பெற்றுத் தந்ததுவும் இந்த #365RajaQuiz  தான் .

நீண்ட நாட்களுக்குக் பிறகு , ஒரு கண்டிப்பான அதே சமயம் தெரியாமல் முழிக்கின்ற நேரத்தில் தட்டிக் கொடுத்து கண்டுபிடிக்க வைக்கும் அருமையான வாத்தியாரும் , நான் திருதிருவென விழிக்கும் பொழுதெல்லாம் . எக்ஸ்ட்ராவாக க்ளூ கொடுத்து எனக்கு உதவி செய்யும் நண்பர்களுமாய் ஒரு பள்ளிக் காலத்தை கழித்தது போன்ற உணர்வு..திரும்ப ஒரு பயணத்தில் இணைவேனா தெரியாது.ஆனால் நிச்சயம் இதை மறக்கவே மாட்டேன் :) மாஸ்டரின் பதிவுக்கு அருமையாய் ரசித்து பின்னூட்டமிடும் பிரசன்னா போன்றோர் இன்னும் இதை அழகாக்கி இருக்கின்றார்கள்.

தெரியாத பாடல் என்றால் விட்டு விடுவதுண்டு.தெரிந்த பாடல் என்றால் திரும்பி அவர்  அடுத்த பதிவு போடும் வரை மண்டை காய்ச்சல் தான் . பல நல்ல பாடல்களை அறிமுகம் செய்ததற்கு நன்றி :) (ஒரு போக்கிரி ராத்திரி , ஒரு கானம் அரங்கேறும் இப்படி பல..அதே போல பல பாடல்கள் பிடித்திருந்தாலும் கேட்டு நெடு நாளாகி இருக்கும்.அவை அவர் அறிமுகம் செய்கின்ற விதத்தில் இன்னும் மெருகேறி இன்னமும் இன்னமும் பிடிக்கும். உதாரணமாக மேகம் மேகம் போகும் போகும் மேஜிக் ஜர்னி , வானமென்ன கீழிருக்கு ,அள்ளித் தந்த வானம் அன்னை அல்லவா ,,மலேசியா ,சொர்ணலதா போன்ற பாடகர்களின் தனித்திறன் அறியப் பெற்றது மாஸ்டரைப்  போன்றோர் இங்கே பாடல் அறிமுகப் படுத்தி அதை ஒரு விவாதமாக்கும் பொழுதில் தான் .சொக்கன் சார் சொன்னது போல இதில் ராஜாவே பங்கு பெற்றிருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்ததுண்டு.ஆனால் அவர் மாஸ்டர் கொடுக்கிற க்ளூவை வச்சுப் பார்த்தா நிச்சயம் குழம்பிடுவார் என்னைப் போலவே :)

தலைப்பிலேயே க்ளூ வைக்கின்றார்  என்பதே ராமன் அப்துல்லா படப் பாடலை புதிரில் வச்சப்போ தான் தெரிஞ்சுது என்றால் நான் எவ்ளோ ட்யூப்லைட் என்று நீங்களே ஊகித்துக் கொள்ளவும் :) அப்புறம் அவர்  சொல்லும் வானொலி க்ளூ மண்டை காயும் .நேரில் கிடைத்தார் என்றால் எத்தனை பாட்டு சார் வானொலி ல கேட்டீங்க என்று ஒரு உலுக்கு உலுக்கனும் போல தோணும் :) தப்பிச்சுட்டார் :) 
வாய்ப்பே இல்லை மாஸ்டரைப் போன்ற ஒருவர்..

எப்பவும் அண்ணனிடம் திட்டு வாங்குவேன்..ஆனால் அவர்  இசைத் துணுக்கை ஓட விட்டு எங்க அண்ணனையும் யோசிக்க விட்டு மண்டை காய விடுவதில் ஒரு தனி ஆனந்தம் :) )

மானுத் தோலு ஒண்ணு மஞ்சக் கிழங்கு ஒண்ணு பாடலுக்கு அவர்  கொடுத்த இசைத்துணுக்கு அம்மன் கோவில் வாசலிலே பாடலுக்கும் கொஞ்சம் ஒத்து வரும் ..அதே போல பாரி சாத பூவே,நான் சிரித்தால் தீபாவளி இரண்டு பாடல்களில் interludes ..வாவ் இந்த ராஜா என்ன என்ன மேஜிக் செய்திருக்கிறார் என்று மாஸ்டர் மூலமாக இன்னும் அறிந்தேன்.அதே போல ஷெனாய்க்கும் நாதஸ்வரத்துக்கும் வித்தியாசமே தெரியாது.ஆனால் மாஸ்டர் கொடுக்கிற க்ளூ வச்சு இது இன்ன இன்ஸ்ட்ருமென்ட் என்று தெரியும்…ரியலி ஹேட்ஸ் ஆஃப் மாஸ்டர் :)

அள்ளித் தந்த வானம் பாடல் என்ன படம் என்றே கண்டுபிடிக்க முடியாமல் ட்விட்டர் டைம் லைனில் நான் திணற கானாபிரபா sundar 140 என்று பலரும் க்ளூ கொடுத்தும் அந்த "கடல் நண்டு"எனக்கு சிக்கவே இல்லை :) இறுதியில் ஒரு இருபது பேராவது என்னோடு மண்டை காய்ந்து அந்தப் பாடல் என்னவென்று எனக்கு சொல்லித் தந்து விட்டுப் போனார்கள் :)ஆனால் பொதுவில் க்ளூ வைத்து விவாதிப்பது புதிரை நீர்க்கச் செய்யும் என மாஸ்டர் மென்மையாக கண்டித்ததால் அத்தோடு டைம் லைனில் விவாதிப்பது கிடையாது. 

மாஸ்டர் முதல் நாள் கொடுத்த பாடலையே கண்டுபிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்போம் நானும் @amas32 அம்மாவும்..ஆனால் மிஸ்டர் முசகுட்டி @vrsaran அடுத்த பாடலுக்கு மாஸ்டர் ப்ளீஸ் செக் டிம் என் விடை சரிதானா பார்த்துச் சொல்லுங்கள் எனும் பொழுது முதல் பெஞ்ச் ல உட்கார்ந்து முந்திகிட்டு பதில் சொல்வோர் மீது ஒரு ஆதங்கம் வருமே அது போல வரும்.
அதுக்குள்ள என்ன அவசரம் என்று தலையில் கொட்டி விடத் தோன்றும் :) ஆனால் அவரை விட @yezhara இன்னும் சிலர் பல பதில்களை மிகச் சரியாக ஊகித்து முதல் இடத்தில் இருப்பதைப் பார்த்தால் மலைப்பாகவே இருக்கும்.

எந்த ஒரு விசயத்தையும் வெறும் நுனிப்புல்லாக மேயாமல் மனதிற்குப் பிடித்த விசயத்தை ஆழ்ந்து அதில் தேர்ந்த அறிவு பெறுவது எப்படி என்று இங்கே மாஸ்டர் @rexarul ,@nchokkan ,@kryes @kanapraba இன்னும் சிலரிடமும் கற்றுக் கொள்ளலாம்..விரல் நுனியில் வைத்திருப்பார்கள் சேதிகளை.
எத்தனை பஞ்சாயத்துகள் ட்விட்டரில் ஓடினாலும் #365Rajaquiz இந்த ஒரு வருடத்தில் ஏற்படுத்திய தாக்கம் மிக அதிகம் என்றே நினைக்கின்றேன்.

ஊரடங்கும் சாமத்திலே ,காதல் மயக்கம்  இன்னும் பல பாடல்கள் இந்த #365Rajaquiz ஆல் மறக்க முடியாத ஒன்றாகிப் போனது.

மொத்தத்தில் ஒரு அருமையான சுகானுபவம் இனிமையான பயணம் இந்த #365Rajaquiz .
மாஸ்டர் @rexarul -ன் அர்ப்பணிப்புக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !!!

Wednesday, July 17, 2013

தமிழிசை ஆய்வு மையத் துவக்க விழா !

நம்ம ட்விட்டர் @RavikumarMGR புதன் மாலை 5 மணிக்கு தியாகராஜா கலைக் கல்லூரிக்கு இளைய ராஜா வருகை தருகிறார் அவசியம் செல்லுங்கள் என்று மென்சன் போட்டார். விஷயம் ஆச்சர்யம் என்றாலும் உள்ளே விடுவார்களா என்று அசுவராசியம்.ஆனால் எளிதாக பார்க்கலாம் என்றும் சொல்லவே சரி போகலாம் என்று ஒரு சபலம். ஆனால் நான் ஒரு மறதி கேஸு தயவு செய்து அந்த நேரத்தில் நினைவு படுத்துங்க என்றதும் மொபைல் ரிமைன்டர் வைக்கச் சொன்னதும் வைத்திருந்தேன்.(இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல என்று சொக்கன் தன் மைண்ட் வாய்ஸ் பதிவும் செய்து விட்டார் :) ) அதே போல மறந்தும் விட்டு தூங்கி எழுந்ததும் ரிமைன்டர் NOTIFICATION காட்டியது.சுத்தம் ..

அரக்க பறக்க ஒரு கலர் சுடு தண்ணியை அதான் காப்பி (நானே போட்டா அப்படித்தான் இருக்கும்)விழுங்கிட்டு அந்த டம்ளரை தூக்கி எறியாத குறையா வச்சுட்டு இரண்டு ஷேர் ஆட்டோ மாறிப் பயணித்தேன்.  எப்படியும் நம் தமிழ்க் குல வழக்கப்படி 5 மணி விழா ஆரம்பம் என்றால் 6 மணிக்குத் தான் ஆரம்பிப்பாங்க.காலம் காலமா அதானே சம்பிரதாயம்.அந்த நம்பிக்கையில் அங்கே சென்றடைந்தேன்.என்னை ஏமாற்றவில்லை.  5.50 க்குத் தான் ஆரம்பித்தார்களாம்.பத்து நிமிடம் தான் ஆகுதுன்னு பக்கத்துல இருக்கிற பொண்ணு சொல்லவும் தான் நிம்மதி :)

ஒரு கல்லூரியின் தனிப்பட்ட விழா என்பதாலோ என்னவோ மதுரையில் எந்த இடத்திலும் ஏன் கல்லூரிக்கு அருகில் கூட வரவேற்பு பேனரைக் காணோம். முழுக்க கல்லூரி மாணவர்களால் மட்டுமே அரங்கம் நிறைந்து வழிந்தது.அதிலே ஒருவராக சத்தமில்லாமல் உள்ளே சென்று அமர்ந்தேன்..(ஹி ஹி ..இப்பவும் காலேஜ் படிக்கிற பொண்ணு மாதிரிதான் இருப்பேன் என நான் சொல்லாமலே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்   என்பதற்காகவே   இது :) 

 பேராசிரியர் ஞான சம்பந்தர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார் .அவர் பேசுவதில் என் கவனம் செல்லவே இல்லை .  பல அடிகள் தூரத்தில் இருந்து ராஜாவை மட்டுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்..  மெலிந்த தேகம் தும்பைப் பூவாய் வெள்ளை வேட்டி சட்டை கழுத்தில் பெரிய ருத்திராட்ச மாலையுடன் மைக்கில் பேசுபவர்களை புன்னகையுடன் கவனித்துக் கொண்டிருந்தார்.. மேடையையும் அருகே வைக்கப் பட்டிருந்த தொலைக்காட்சி நேரலையையும் மாறி மாறி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.  எழுத்தாளர் சுகா அவர்கள் மூலமாக ராஜாவை இந்நிகழ்ச்சிக்கு வரவழைத்திருந்தார்கள் .தமிழிசை ஆய்வு மையத் துவக்க விழா . ராஜா சிறப்பு விருந்தினர் .

என்ன ஒரு ஆச்சர்யம் அரங்கத்தில் இந்த மாணவ மணிகள் அமைதியா உட்கார்ந்து இருக்கே என்று .  நான் வேடிக்கை பார்ப்பதற்கும் உலை வைப்பது போன்று நடு மத்தியில் ஒருவர் நின்று கொண்டார்.அருகே சென்று சார் தெரியல என்றேன்.  அதுக்கென்ன செய்யறது நான் இங்கிருந்து நகர்ந்துட்டா பசங்க ரொம்ப கத்துவாங்க என்றார் .  வேறு வழியின்றி வேறு பக்கம் நகர்ந்து அமர்ந்தேன்.ஆனால் அவர் என்ன நினைத்தாரோ தெரியல அங்கிருந்து வெளியேறி அடுத்த பக்கம் போயிட்டார்.  அப்பத் தான் அவர் சொன்னது எவ்வளவு நிஜம் என்று புரிந்தது.  ஏகப்பட்ட சலசலப்பு.அவர்களுக்கு சினிமாத் துறையைச் சார்ந்த ஒருவரைப் பார்க்கிறோம் என்ற பெருமை தானே தவிர அங்கே இருக்கும் சுகா பற்றியோ இளையராஜா பற்றியோமுழுவதும் அறிந்தவர்கள் இல்லை.  மேலும் அவர்கள் வயது அதற்கு அனுமதிக்கவும் இல்லை.  ஆனால் இளையராஜா பற்றி ஆச்சர்யத் தகவல்கள் அங்கே பேசுபவர்கள் பகிர்ந்த பொழுது எவரும் சொல்லாமலே உற்சாகத்துடன் கை தட்டினர் .

சுகா பேசும் பொழுது மட்டும் அந்த சலசலப்புக்கு இடையே முடிந்தவரை கூர்ந்து கவனித்தேன். மிகத் தெளிவான பேச்சு, அருமையான தமிழ் உச்சரிப்பு அழிந்துவரும் நாட்டுப்புற இசை,வாத்தியங்கள் பற்றி நியாயமான ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். "நிகழ்ச்சிக்கு வருகிறேன் ஆனால் இசை பற்றி எனக்கென்னயா தெரியும்?"   என்றாராம் ராஜா (ஙே ..அவருக்கு தன்னடக்கம்ன்னா என்னன்னே தெரியாதுன்னாங்க யாரோ) எழுபதுகளில் தமிழ் நாட்டில் இந்திப் பாடல்கள் படங்கள் மீதான மோகம் அதிகம் இருந்தது எனவும் அது அத்தனையையும் உடைத்து தமிழிசை கேட்க வைத்தவர் ராஜா என்பதை சுகாவும் ஞான சம்பந்தரும் நினைவு கூர்ந்தனர். இந்திப் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களைத் தமிழ்ப் பாடல் கேட்க வைத்தவர் ராஜா இந்திக் காரர்களையே கேட்க வைத்தவர் ரகுமான் (அடக் கிரகமே ட்விட்டர் புத்தி அங்கயும் இப்படி யோசிக்க வைத்தது :) ) சுகாவை அறிமுகம் செய்த பொழுது எழுத்தாளர் ,படித்துறை என்ற படத்தின் இயக்குனர் என்று சொன்னார் ஞான சம்பந்தன். (படித்துறை படம் ரிலீஸ் எப்போ?நிறுத்தப்பட்டது என்று சொன்னாங்களே )இளைய தலைமுறை தொலைக் காட்சிகளில் அடங்கி விட்டீர்கள் .  இயன்றவரை அழிந்துவரும் நாட்டுப் புறக் கலைகளை மீட்டெடுக்க நம்மால் ஆன முயற்சிகள் எடுக்க வேண்டும்  நாதஸ்வரம் கச்சேரி போன்றவற்றை நம் வீட்டில் வைத்து அக்கலையை வளர்க்க இயன்ற அளவு உதவ வேண்டும் என்று வேண்டுகோளும் ஆதங்கமுமாக முடித்தார் சுகா .  சிறுவயதில் எங்கள் கிராமத்தில் கல்யாண வீட்டிலும் சரி ,கருமாதி வீட்டிலும் சரி நிச்சயம் நாதஸ்வரம் இருக்கும்.தமிழ் சினிமாப் பாடல்களை மிக அழகாக வாசிப்பார்கள்.அதையெல்லாம் பார்க்கும் கொடுப்பினை வரும் தலைமுறைக்கு இல்லை என்று சுகா கவலைப்பட்டதிலும் ஒரு அர்த்தம் இருக்கின்றது.

இந்த பேச்சுக்கிடையில் எங்கெல்லாம் எனக்கு முன்பு இடம் காலியாகிறதோ அங்கெல்லாம் நகர்ந்து நகர்ந்து முன்னே உட்கார்ந்தேன்.  இறுதியில் ராஜா பேச வருகிறார் எனும் பொழுதே ஒரே கைதட்டல் தான். காலையில் மீனாட்சியை தரிசித்து விட்டு வந்ததும் இப்பொழுது கோவில் சுத்தமாக இருப்பதையும் சொன்னார்.  சிறு வயதில் தியாகராஜா கல்லூரி எதிரே இல்ல தெப்பக்குளத்தில் சுற்றிய நாட்களையும்  .கல்லூரி நாடகத்திற்கு இசை அமைத்தது உட்பட சின்னச் சின்ன விசயங்களை நகைச்சுவையோடு நினைவு கூர்ந்தார். இயன்றவரை முன்னிருப்பவர்கள் அமைதி காக்க பின்னாடி இருக்கும் மாப்பிள்ளை பெஞ்ச் அட்டகாசம் தாங்க முடியல. அதிலும் பெண்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு அருகே உள்ள கூட்டத்தில் இருந்து வார்த்தைக்கு வார்த்தை கமெண்ட் பறந்தது. ராஜா பேசுவதைக் கேட்க மிகப் பெரிய இடைஞ்சலாக இருந்தது.  பெண்களைக் கவர அவர்கள் கமெண்ட் அடிக்க இங்க பெண்கள் பக்கம் இருந்து அவர்கள் எதிர்பார்த்தது போன்றே கிக்கிக்கி ரெஸ்பான்ஸ். பொறுமையை இழுத்துப் பிடிப்பது மிகச் சிரமமாக இருந்தது எனக்கு.  வேறு வழியின்றி எனக்கு அருகே அந்த பக்கம் அமர்ந்திருந்தவன் கமெண்ட் அடிச்சுட்டு இந்தப் பக்கம் பார்க்கும் பொழுது ஒரு அருவெறுப்பான பார்வையை உமிழ்ந்தேன்.அவன் காதுக்கு மட்டும் கேட்கும் படி லூசா நீ என்றேன்.அத்தோடு அடங்கினான்.(யார்ரா இந்தப் பக்கின்னு நினைச்சிருப்பானோ ?:) 

நேரலையில் அருகில் இருந்த டிவியில் யாரோ ஒரு அம்மணியைக் காட்ட ஒரு கூட்டம் மட்டும் திடீர் கைதட்டல்.  ராஜாவுக்கே குழம்பி இருக்கும் , 
இசையின் மகத்துவத்தை சுருக்கமாக விளக்கி இசையை ஒரு கட்டாயப் பாடமாக வைக்க வேண்டும் என்று வேண்டுகோளை முன்வைத்தார் .  கல்லூரி முதல்வர் தமிழக அரசுடன் பேசி இதற்கு தக்க ஆவண செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.. இசையால் லயித்த மனத்தில் வன்முறை குறையும் என்பதையும் சொல்லி இறுதியாக இதயம் ஒரு கோவில் என்று ஆரம்பித்ததும் ஹே என்று கூட்டத்தோடு கூட்டமாக கத்தியதில் உற்சாகம் தொற்றிக் கொண்டது :) எனது ஜீவன் நீதான் என்று முன்னிருந்த கூட்டம் நோக்கிப் பாட அரங்கமே அதிர்ந்தது கைதட்டலிலும் உற்சாக கூச்சலிலும் :) அவர் பேசியதும் கிளம்ப யத்தனித்தவர்களை நன்றியுரை மற்றும் தேசிய கீதம் ஒலித்த பின்பே நகர வேண்டும் என்று ஞான சம்பந்தர் கேட்டுக் கொண்டார்.

நன்றியுரையில் பேசியவர் தமிழிசை பத்தி  என்ன தெரியும் என்று ராஜா கேட்டது ஏழு பிள்ளை பெத்தவ ஒத்த பிள்ளை பெத்தவளிடம் அனுபவம் கேட்பது போல .இசையே நீங்கள் தான் ஐயா என்று பேசி கோவையைச் சேர்ந்த முத்துச் சாமி என்பவர் DTS தரத்தில் ராஜா இசையைத் தருவதாக பகிர்ந்து அமர்ந்தார் .  தேசிய கீதம் ஆரம்பித்ததும் நான் ஒரு நொடி கூடத் தாமதிக்காமல் மேடையில் இருந்து ராஜா இறங்கிச் செல்லும் வழியில் அவரின் கார் அருகே சென்று நின்று கொண்டேன் .  எப்படியும் அருகில் பார்க்க வேண்டும் என்று.தேசிய கீதம் பாடும் பொழுது அசையவே கூடாது என்று பள்ளி சொல்லிக் கொடுத்த பாடமெல்லாம் போயே போச்சு. இறுதியில் சுகா அழைத்து அவரை காரில் ஏறும் வரை கண்ணிமையாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.  சுகாவையும் ராஜாவையும் அவ்வளவு அருகில் பார்த்தும் கூட ஒரு வார்த்தை கூட வாயில் இருந்து வரல . கம் போட்டு ஒட்டிக் கொண்டது போல் ஆகி விட்டது :)

நடிகர் நடிகைகள் மீதிருந்த ஈர்ப்பு இசையமைப்பாளர்கள் மீது சிறு வயதில் இருந்ததே இல்லை . இசை எவரேன்றே தெரியாமல் நான் கேட்ட பாடல்கள் இன்றளவும் எனக்கு இனிக்கவே செய்கின்றன.நினைத்த மாத்திரத்தில் அழவும் சிரிக்கவும் செய்த பால்யத்தைக் கடந்த நாளில் இருந்து எனக்குள் ஒரு தனிமையை உருவாக்கிக் கொண்ட நாள் முதல் இசை மட்டுமே எனக்கு அதிகம் துணையாய் இருந்திருக்கின்றது.  அதில் அதிகம் ராஜாவின் பாடல் கலந்தே இருக்கின்றது.  அவ்வளவே எனக்கும் அவருக்குமான தொடர்பு.

இளையராஜாவைப் பார்ப்பேன் என்று கனவிலும் நினைத்ததே இல்லை.  இசை நிகழ்ச்சியை நேரலையாக ட்விட்டரில் நேரலையாக ட்விட்டர் நண்பர்கள் ஒளிபரப்பும் பொழுது உள்ளே எப்பொழுது இதையெல்லாம் நேரில் பார்க்கப் போகிறோம் என்றொரு ஏக்கம் வந்ததுண்டு.   எதிர்பாராத விதமாய் இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த நண்பர் ரவிக்குமார் MGR க்கு நன்றி :))

ஒரு பூரண மன நிறைவோடு கல்லூரியை விட்டு வெளியே வந்து ஷேர் ஆட்டோவில் அமர்ந்த பொழுது பண்பலையில் இருந்து "கற்பூர முல்லை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று" பாடல். கலந்தாடக் கைகோர்க்கும் நேரம் கண்ணோரம் ஆனந்த ஈரம் என சுசீலா பாடியதும் கண்களில் ஈரம் எவருமறியாமல்.  அந்த ஆட்டோ ஓட்டுநர் உட்பட அங்கே பரபரப்புடன் சென்று கொண்டிருந்த மக்களுக்கு ராஜா எங்கிருக்கிறார் என்று தெரியாது.  அவர் வந்து போனதையும் அறிந்திருக்க முடியாது. ஆனாலும் அம்மாமனிதர் அம்மக்களோடு வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார் .  இசையை மலராய் நாளும் சூட்டிக் கொண்டு .

மானே உன் வார்த்தை ரீங்காரம் மலரே என் நெஞ்சில் நின்றாடும் முத்தே என் முத்தாரமே சபையேறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா ... பின்னாளில் எனக்குப் பிறக்கப் போகும் என் செல்ல மகளுக்கு கருவிலேயே இப்பாடலை அறிமுகம் செய்து வைப்பேன்.

இதயம் ஒரு கோவில் பாடி முடித்ததும் "இதை நான்  பாடி இப்பவே மறந்துடுவேன் ஆனால் உங்க காதுகளில் ஒலித்துக் கொண்டே தானிருக்கும் உங்கள் நெஞ்சத்தை விட்டு நீங்காது " என்று ராஜா உறுதியாகச் சொன்னது  இப்பொழுது நிஜமாகியது .ஆட்டோ என்னை இறக்கி விட்டுச் சென்று வெகு நேரம் ஆகியும் இதோ இந்த நொடி வரை "கற்பூர முல்லை ஒன்று "


Thursday, May 2, 2013

சுந்தரி..கண்ணால் ஒரு சேதி ..

சம்பிரதாய வார்த்தைகளாக இருப்பினும் சொல்லியே ஆகவேண்டும் .மிகப் பிடித்த பாடல்களில் ஒன்று..:)

சிவகாமியின் சபதம் முதன் முதலில் படித்த பொழுது அதிலே ஒவ்வொரு சூழலுக்கும் ஒவ்வொரு பாடலைப் பொருத்திப் பார்த்ததுண்டு..அதிலே மாமல்லர் ஒரு சின்ன போருக்கு செல்ல வேண்டி வரும்..செல்கின்ற வழியில் சிவகாமியைப் பார்க்க வேண்டி வரும். ஓரமாய்ப் பார்த்துவிட்டு கோபமும் தாபமுமாக குதிரையை ஓங்கி ஒரு உதைத்து முன்னேறிச் செல்வார். பாழும் பெண் மனம் மன்னவன் திரும்பி வரும் வரை தவிப்பில் ஆழ்ந்து இருக்கும். 


அப்பொழுது இந்தப் பாடல் பொருந்தும் என நினைக்கிறேன். போருக்குப் பின் இருவரும் இறுதியாய் ஒரு இடத்தில மகிழ்ச்சியும் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற கலக்கமுமாக லயித்திருப்பார்கள்.அவ்விடத்திலும் இதைப் பொருத்தலாம்.மிக சமீபத்தில் தான் படித்தேன் அந்தப் பாடல் பொன்னியின் செல்வன் தாக்கத்தில் படமாக்கப் பட்டதாக . ஆனால் எதற்கு ரஜினிக்கு அந்த கருப்பு உடையும் கொண்டையும் தான் என்பது புரியவில்லை. வழக்கமாக மன்னன் உடை வேண்டாம் என்று மணி  இப்படிசெய்தாரோ என்னவோ ?


நான் ரஜினியை வேறெந்த படத்திலும் இவ்வளவு ரசித்ததே இல்லை :) 

ரஜினியின் வேகம் மட்டுமே இருக்கும் படம் முழுவதும். எவ்விடத்திலும் ரஜினியின் தனி முத்திரையான ஸ்டைல் எதுவும் இராது. ரஜினியை ரஜினியாய் பயன்படுத்தாமல் தான் நினைத்த ஒரு கதாபாத்திரமாக மட்டுமே உலவவிட்டிருப்பார் மணி. 
ஒரு சூப்பர்ஸ்டார் என்றெல்லாம் அதீத மரியாதை கொடுத்து அந்நியமாக்காமல் வெகு இயல்பான கோபக்கார இளைஞனாக காட்டியதில் மணிக்கு ஒரு ஜே. கர்ணன் படத்தின் ரீமிக்ஸ் என்றாலும் தன் பாணி தனி முத்திரை .

இந்தப் பாடல் பதிவு செய்யப்பட்டது மும்பையில். பாடலை எழுதியவர் வாலி. பாடலைப் பதிவு செய்த தினத்தில் மும்பை இசைக் கலைஞர்கள் வாய் பிளந்து அதிசயித்தார்களாம் . நிச்சயம் மிகையிருக்காது செய்தியில். அவ்வளவு பிரம்மாண்டம் பாடலில் கொடுத்திருக்கிறார் ராஜா . 

பொதுவாக  ஒரு நல்ல சேதி எதிர்பார்க்கும் பொழுது எங்கேனும் மணியடிக்கும் சத்தம் கேட்டால் அதை மங்களகரமாக நினைப்பது வழக்கம். ரஜினிக்கு தன் கோபம் உள்ளூர நம்மையெல்லாம் இவளுக்குப் பிடிக்குமா என்ற பரிதவிப்பு , மனசுக்குப் பிடிச்சிருந்தாலும் திருதிருன்னு விழிச்சுகிட்டு பயமும் தயக்கமுமாக ஷோபனா பிடிச்சிருக்குன்னு சொன்னவுடன் அடிக்கும் மங்கள மணியோசையில் ஆரம்பிக்கும் பாட்டு ..டாப் கியரில் தூக்கும்னு சொல்வாங்களே அப்படி இருக்கும் ஆரம்ப இசையே :)


சுந்தரி கண்ணால் ஒரு சேதி என்றதும் ஒரு மிக மெல்லிய புல்லாங்குழல் வரும் .
சுந்தரி கண்ணால் ஒரு சேதி (புல்லாங்குழல் )
சொல்லடி இந்நாள் நல்ல தேதி ((புல்லாங்குழல் )
என்னையே தந்தேன் உனக்காக (புல்லாங்குழல் )
ஜென்மமே கண்டேன் உனக்காக (புல்லாங்குழல் )


சில வருடங்களுக்கு முன்பு ஒரு வலைத்தளத்தில் CALL& RESPONSE  பத்திப் படித்தேன் .அதாவது இசையினாலே அழைப்பும் அதே இசையிலேயே அதற்கு மறுமொழியும்.அதற்கு உதாரணமாக சில பாடல்கள் சொல்லிருந்தாங்க கீரவாணி என SPB அழைத்ததும் அடுத்து வரும் சிதார் இசை பல்லவியை அழகு படுத்தி இருக்கும் அந்த சிதார் இசை ஒவ்வொரு அழைப்பிற்கும் மறுமொழியாக .
அதே போல பாடும் வானம் பாடி ஹாங்....என்றதும் அடுத்து டொய் டொய் டொய்ங் என்று வருமே வீணை அவ்வளவு அழகாய் SPB க்கு ஈடு கொடுத்திருக்கும்.

பாடல் ஆரம்பத்தில் மட்டுமல்ல சரணத்திலும் பயன்படுத்தப் பட்ட பாடல்களும் உண்டு .
ஒரு பொன் மாலைப் பொழுது பாட்டின் சரணத்தில் ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் வரிகளுக்கு அடுத்து வரும் புல்லாங்குழல்

இது பற்றி அறிந்த பொழுது ஒரு புது அனுபவமாக இருந்தது. ஆர்வத்தில் நான் கேட்ட சில பாடல்களை ஆய்ந்தேன். எதுவுமே அறியாமல் ப்ல்யாஂக் ஆக ஒரு பாடல் கேட்பது ஒரு சுகம் என்றால் ஏதேனும் அதில் உள்ள நுணுக்கம் அறிந்து கேட்கும் பொழுது அது இன்னமும் அழகாகிவிடுவதும் நிஜம்.

என் உதாரணங்கள் மிகச் சரிதானா என்று தெரியாது.ஆனால் இவை அந்த CALL &RESPONSE க்குப் பொருந்துவது போல ஒரு பிரம்மை. இசை நுட்பம் அறிந்தவர்கள் பிழை என்றால் திருத்தவும். 

1.கண்ணா உனைத் தேடுகிறேன் வா என்று ஜானகி சொன்னதும் அடுத்து வரும் வயலின் கொஞ்சிக் குழைந்து அந்த அழைப்பை ஏற்கின்றது.உன்னோடுதான் வாழ்க்கை(புல்லாங்குழல்) உள்ளே ஒருவேட்கை (புல்லாங்குழல்)செல்லம் கொஞ்சி ம்ம் என்பது மறுமொழி செய்கின்றது.
2. மஞ்சப் பொடி தேய்க்கையிலே என்றதும் அடுத்து வரும் புல்லாங்குழல் விசிலடித்து செய்யும் ரெஸ்பான்ஸ் கிளாஸ் :) 

3.பொன் மானே (புல்லாங்குழல்)கோபம் ( (புல்லாங்குழல்)
ஏனோ ( (புல்லாங்குழல்)
4.பூந்தளிர் ஆட (ஹம்மிங் ரெஸ்பான்ஸ் )
5.காதல் கவிதைகள் படித்திடும் நேரம் ஆடியோ வெர்சனில் பாடல் இறுதியில் வரும் இதயம்ம்ம் இடம் மாறும் (ம்)  இளமை பரிமாறும் அமுதும் வழிந்தோடும் (ம்) இடையில் வரும் இந்த இரண்டு ம் களும் வெகு நேர்த்தியான கொஞ்சல்கள் :)

வாலிக்கு கேக்கணுமா?சுருங்கச் சொல்லி நிறைய விளங்க வைப்பது என்பது இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியிலும் காணலாம். ரைமிங்காக எங்கிருந்துதான் வந்து விழுகின்றதோ வார்த்தைகள் :)
"சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி "
காதலைச் சொன்ன அன்றே பதில் சொல்லிடனும் என்னால வெயிட் பண்ண முடியாது செல்லம் :))

உடனே பதில் எப்படி வந்து விழுது பாருங்க "என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக " அடுத்த உத்தரவாதம் ஆணிடமிருந்து "நானுனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் சேர்ந்ததே நம் ஜீவனே "

எப்படி எல்லாம் ப்ராமிஸ் பண்ணின ஆனா இப்போ ரெஸ்பான்ஸ் பண்ணவே மாட்டேன்ற என்ற இக்கால ஊடல் நிமித்த சண்டைகள் நிறைய பார்த்திருப்போம்.
"வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா "

சில பாடல் வரிகள் எனக்குப் புரியாத பட்சத்தில் பாடியவர்தான் பிழை செய்திருக்கிறார் என்று உறுதியாய் நம்புவேன் :) 
எனைத்தான் அன்பே மறந்தாயோ என்ற கேள்விக்கு . மறப்பேன் என்றே நிலைத்தாயோ என்று முடிப்பார்..

நியாயமா நினைத்தாயோ என்று தானே வரணும் ஏன் SPB தப்பா பாடறார் ? ஒருவேளை நம்ம காது தான் சரியில்லையோ அவர் சொன்ன நினைத்தாயோ தான் நமக்கு காதுல அப்படி விழுதோன்னு ஒவ்வொரு முறையும் கூர்ந்து கவனிச்சிருக்கேன்..ம்ஹ்ம்ம் ..:) இறுதியாக SPB மறந்தார்போல தவறு செய்திருக்கிறார் என்று ஒரு முடிவுக்கு வர வேண்டி இருந்தது..கோபமா நான் மறப்பேன்னு நீ நினைச்சிட்டியோ ன்னு தானே கேப்பாங்க என்ற எண்ணம். இப்பொழுதுநான் மறப்பேன் என்பதை அப்படியே நம்பி அதே நிலைப்பாட்டில் இருந்துட்ட அதான் இப்படில்லாம் கேள்வி கேக்குற அப்படின்னு  நானாக புரிஞ்சுகிட்டேன் (வேற வழி :) )

அதே போல தேன் நிலவு நான் வாழ என்பது பொருந்தாமல் காண என்றிருந்தால் நன்றாக இருந்திருக்குமோன்னு வாலிக்கே எடுத்துச் சொல்லிருக்கேன் அந்த வயசுல :)
ஆ...வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சின் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்
தேன் நிலவு நான் வாழ ஏன் இந்த சோதனை
வான் நிலவை நீ கேளு கூறும் என் வேதனை



இரண்டாம் சரணம் சில வரிகள் காதல் தேசம் படத்தில் என்னைக் காணவில்லையே நேற்றோடு பாட்டிலும் வரும் .மிக வழக்கமான வரிகளே எனினும் அவ்விடத்தில் ஆகப் பொருத்தம் .






DISCLAIMER : இந்தப் பதிவை நீளம் கருதி சற்றே எடிட் செய்து #4வரி நோட் க்கு அனுப்பியிருந்தேன் .முதன் முதலாய் #4varinote இல் நான்அனுப்பியவாறே எடிட் செய்யப்படாமல் என் பதிவு இடம் பெற்றது மகிழ்ச்சி. அதற்கான சுட்டி :) 

Wednesday, February 13, 2013

காதலர்களுக்கு சில வேண்டுகோள்கள்


காதல் என்ற வார்த்தையும் காதலர்களும் அனைவரையும் படுத்தும் பாடு இருக்கே..சொல்லி மாளாது..தப்பித் தவறி காதலித்துக் கொண்டிருக்கும் தோழமை உங்கள் அருகில் இருந்தால் "சாவு பயம்னா என்னன்னு காட்டிடுவாங்க "


என் தோழிக்கு பிடிக்காத (அப்படித்தான் என்கிட்டே சொன்னா ) நபர் பிறந்தநாளுக்கு பரிசு கொடுத்து இதில் உள்ள எழுத்துகளை ஒன்று சேர் "என்று சொல்லிட்டு போயிட்டார்.அதிலே "I LOVE YO" எழுத்துகள் கிடைத்தன.அதில் U மட்டும் மிஸ்ஸிங். விடிய விடிய தூங்காம அதைத் தேடி அதை மட்டும் காணோம்னு வருத்தமா சொன்னப்போ தான் அந்தப் பக்கியும் அவனை லவ் பண்றான்னே தெரிஞ்சுது. அவனும்(பெரிய ஷாருக் கான்னு நினைப்பு) நீ தேடணும்னு தான் அந்த U மட்டும் வைக்கலன்னு வந்து சிரிச்சான் :)


அதே போல தன்னைச் சுற்றி சுற்றி வந்த ஒரு பையனிடம் எந்த பதிலும் சொல்லாமல் இருந்தாள் இன்னொருத்தி. ஆனால் பள்ளி முழுக்க அவன் அவளைத் தான் காதலிக்கிறான் என்பது தெரியும். அவளும் பதிலுக்கு காதலிக்கிறாள் எனத் தெரியவே நீண்ட நாட்கள் ஆச்சு. அப்போ தான் தோனுச்சு .


 பொண்ணு காதலிச்சா அந்தப் பொண்ணைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனா பையன் காதலிச்சா அந்தப் பொண்ணைத் தவிர   எல்லாருக்கும் தெரியும் 

இப்படி காதலிப்பவர்களால் பட்ட அவஸ்தைகள் அதிகம்.நாம காதலிச்சிருந்தா கூட இவ்ளோ சிரமப் பட்டிருப்போமான்னு தெரியல


ஆகையினால் அன்பார்ந்த காதலர் பெருமக்களே !

காதலிப்போர் அருகிலிருந்து பாதிக்கப்பட்டோர் மதுரை கிளை சார்பாக சில வேண்டுகோள்களை முன்  வைக்க இருக்கிறேன்

1. காதலுக்கு கண்ணு இல்ல சரி காதலிக்கிறவங்களுக்கும் கண்ணில்லாம கூட போகட்டும் . ஆனா உங்களை சுத்தி இருக்கிறவங்களுக்கு கண்ணு  இருக்கு . அதனால் அக்கம் பக்கம் பார்த்து  தனியா போய் காதலிங்க .உங்க சேட்டையெல்லாம் பொதுவுல பண்ணி எரியிற தீயில எண்ணையை ஊத்தாதீங்க :)

2.  உங்களுக்குப் பிடிச்சிருந்தா நீங்களே போய் லவ்வைச் சொல்லிக்கோங்க . நீங்க காதலிக்கிற பொண்ணுக்கு இருக்கிற தம்பி /தங்கச்சியை கரெக்ட் பண்றேன்னு கண்டதையும் வாங்கிக் கொடுத்து அவங்க வயிறையும் கெடுத்து மனசையும் கெடுத்து அவங்க பிஞ்சு மனசு நஞ்சு போகாத அளவுக்கு நடந்துக்கோங்க

3. ஈ மெயில் சாட் ,பேஸ் புக்,ஸ்கைப் இப்படி எத்தனையோ அட்வான்ஸ் வசதிகள் வந்தாலும்  ஆதிவாசி மாதிரி பச்சபுள்ளைங்க கிட்ட லவ் லெட்டரை கொடுத்து பாலகர்கள் வன் கொடுமை பண்ணாதீங்க
 
4.எங்கயாவது இருட்டுக்குள்ள கிசுகிசுன்னு பேசிட்டு பளீர்னு பல்லு தெரியற மாதிரி சிரிச்சு அந்தப் பக்கமா போற பச்சபுள்ளைங்க பயமுறுத்தாதீங்க:)


5. ராமராஜன் எஃபெக்ட் ல சுடிதார் , சாயம் போன கலர்ல பேன்ட் போட்டுக்கிட்டு வந்து அவ (ன்) கொடுத்தா(ன்)  சொல்றதோட நிக்காம எப்படி இருக்குன்னு எங்ககிட்ட வேற கேக்காதீங்க . நீங்க ரசிக்கணும் உங்க தலையெழுத்து எங்களுக்கென்ன வந்தது ?

 
6.அரட்டை,சினிமா ,கேலி ,பாட்டு ,டிவி இதுக்கு நடுவுல எப்பவாவது தான் படிக்க உட்காருவோம் அந்த நேரம் வந்து அவன் இருக்கானேன்னு சுதியோட ஆரம்பிச்சு எசகுபிசகா கதை சொல்றதை நிறுத்த்த்துங்க.
7.  ஏதோ புள்ள நாசமா போயிடக் கூடாதேன்னு நாலு அட்வைஸு பண்ணினா "உனக்கென்ன தெரியும் காதலைப் பத்தி"ன்னு ஒரு நீண்ட சொற்பொழிவு ஆத்து ஆத்துன்னு ஆத்தறீங்களே அதை தயவு செய்து நிறுத்துங்கப்பா :)

 
8. நீங்க உங்க ஆளை டா போட்டு பேசுங்க டி போட்டும் பேசுங்க ஆனா உங்க அம்மா அப்பாகிட்ட இருந்து தப்பிக்க எங்ககிட்ட பேசுற மாதிரி ஸீன் போடாதீங்க . திடீர்னு அந்த நேரம் நாங்க நேர்ல வந்து எங்ககிட்ட நீங்க பேசுறத நாங்களே தேமேன்னு வேடிக்கை பார்க்க வேண்டியதாயிடும்.

9. எங்ககூடதான் வெளியே சுத்தறதா சொல்லிட்டு போற பொய்யை எங்களுக்கும் முன்கூட்டியே சொன்னா அனாவசியமா உங்க வீட்ல மாட்டிகிட்டு நாங்க திருதிருன்னு முழிக்கிறதுல இருந்து எஸ் ஆகலாம்


10.மத்த நேரமெல்லாம் நேர்ல பேசுற effect ல ஹெல்ல்லோஓ.ஓ.ஓ.ஓ.ஓ..ன்னு கத்தி பேசிட்டு உங்க ஆளுகூட பேசறப்போ மட்டும் (ரேவதி குரலில் ) ஹ்ம்ம்.ஹ்ம்ம்... வெறும் காத்துதான் வருது ங்கற effect ல பேசறீங்களே அப்படி போனுக்கேகூட தெரியாம என்னதாம்ல பேசுவீங்க?

11.  அப்புறம் உங்க ஆளுகூட பேச எங்க மொபைல் ல இருந்து SMS அனுப்பறது , மிஸ்ஸுடு கால் கொடுக்கிறது ப்ளீஸ் ப்ளீஸ் இதோ உடனே பேசிட்டு வந்துடறேன் பா சொல்லிட்டு மணிக்கணக்கா பேசி எங்களையும் எங்க மொபைலையும் சேர்த்து சூடாக்குறதை நிறுத்துங்க

12.பீச் , சினிமா தியேட்டர் ஒன்னுவிடாம ஊர் சுத்தறீங்க அதுக்காக குழந்தைங்க பார்க்ல கூடவா கூடிக் கூடிப் பேசணும் ? தாங்கலங்க

13. காதல்ங்கறதுன்னு ஆரம்பிச்சு நீங்க சொல்ற விக்ரமன் டைப் விளக்கம் #சத்தியமா கேக்க முடியலங்க :-O

14.ஏதோ வேற்றுக் கிரக வாசி மாதிரி திரியறீங்க சரி அதுக்காக நாங்க சொல்ற முக்கியமான விசயத்தைக் கூட மறந்துட்டு மெடுல்லா  ஆப்ங்கேட்டாவுல  அடிபட்ட மாதிரி கொடுக்கறீங்களே ஒரு ரியாக்ஷன் போதும்டா ஸ்ஸ்ஸ் ஸாமி...


(முன்பு இதே பதிவை வேறு ஒரு தளத்தில் , கவிதை என்கிற பெயரில் எதையேனும் எழுதி எங்கள வாசிக்க சொல்லிக் கொல்லாதீங்க என்றும் ஒரு பாயிண்ட் சேர்த்து எழுதி இருந்தேன்  ஹி ..ஹி ..இப்ப அது  ரிமூவ்ட் :P ) 

பெப்ரவரி 14 இல்லையா அதான் 14 -ட நிறுத்திட்டேன் வருஷம் முழுக்க நீங்க பண்ற அலும்புகளை சொல்ல சில பல ட்விட் லாங்கர் போட்டாலும் பத்தாது :))


யூ லவ் ..யூ கிவ் ப்ளட் ...பட்  ஒய் மீ ? :))

Friday, February 1, 2013

இது செம்ம ஹாட்டு மச்சி :)

ரேடியோ மிர்ச்சியில் RJ hunt நடக்கவிருப்பதாக அறிவிப்பு செய்யவும் விண்ணப்பிக்கலாமா என்ற யோசனையை ட்விட்டரில் பகிர்ந்தேன்.உடனே விண்ணப்பியுங்கள் என நண்பர்கள் தூண்டி விட்டதில் அவர்களுக்கு போன் செய்து என் பெயரை பதிவுசெய்தேன் . பதிவு செய்யப் பெயர் வாங்கிய விதத்தில் திரும்ப அழைக்க மாட்டார்கள் என்றே தோன்றியது.
ஆனால் 26 ஜனவரி சனிக்கிழமை நன்றாய்த் தூங்கிக் கொண்டிருந்த மதிய நேரத்தில் அழைப்பு.நாளை நேரடித் தேர்வு இன்ன இடத்திற்கு வாருங்கள் என்று. என்னைச் சமனப் படுத்த சிறிது நேரம் எடுத்துக் கொண்டு ஏதும் கலாய்க்கிறீர்களா ?என்றதும் சிரித்துவிட்டு நிஜம்தான் நேரிலே வாங்க என்றார்:) 

நிஜமாகவே நம்பமுடியவில்லை.படித்து முடித்த புதிதில் ஆறு மாதம் வேலை பார்த்ததோடுசரி.வெளியே வேலைக்கு சென்று பழக்கமே இல்லை . . HCL காக பாண்டிச் சேரி சென்றதுண்டு .நண்பர்களின் வாழ்த்துரைகள் கொடுத்த பலத்தில் செல்வது என முடிவெடுத்து நான்கு ட்ரெஸ்ல அஞ்சாவதா பேபி பிங்க் (வாட் டு டூ அதை விட பெஸ்ட் வேற இல்ல :P )தேர்ந்தெடுத்து அழகாய் 3/4 டாப்ஸ் வித் செமி பாட்டியாலா காட்டன் சுடி எனக்கே திருப்திகரமாய்த் தோன்றியது :) பனிரெண்டு மணிக்கு வரச் சொன்னதால் மிகச் சரியாக 12:10 க்கு (ஹி ...ஹி ...எவ்ளோ பெரிய தேர்வாக இருந்தாலும் இப்படித்தான் போறது:)) )  என் வண்டி அந்த வளாகத்தினுள் சீறிப் பாய்ந்தது:)ஆனால் எனக்கு முன்னாடியே 215 வந்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆடிஷன் போய்க் கொண்டிருந்தது..ஆகா இவ்ளோ பேர்ல நாம எங்கே தேரப் போறோம் வந்ததுக்கு சும்மா ஹாய் சொல்லி வைப்போம் என்று முடிவெடுத்து ஒரு ஓரமாய் விண்ணப்பம் நிரப்ப ஆரம்பித்தேன்.சாதாரணக் கேள்விகள்தான் எனக்குத் தெரிந்தை மட்டும் குறிப்பிட்டேன். பாடல்கள் விரும்பிக் கேட்பதுவும், அதை ரசித்தும் சின்ன தகவல்களுடன் எழுதுவது, FM பாடல் கேட்பது மிகப் பிடிக்கும் ,எனது ரிபீடெட் ப்ளே லிஸ்டை விட அது பல பாடல்களை திரும்ப கேட்கவும் புதிதாய் கேட்கவும் வசதியாய் இருப்பதால்,  .கவிதை வரும் எனவும் blogger என்றும் குறிப்பிட்டு இருந்தேன் .தேடித் பிடித்து என் blog படிக்க மாட்டார்கள் என்று அப்படி ஒரு நம்பிக்கை :)

அப்புறம் வேடிக்கை பார்க்கிற பழக்கம் இருக்கே அது கூடவே பிறந்தது :) அதனால் வந்திருந்த பிற பெண்கள் ஆடிஷனில் நடப்பவை நடக்கின்ற இடம் என ஒவ்வொன்றாக கவனிக்க ஆரம்பித்தேன்.வந்திருந்த நபர்களின் உடையில் தான் முதல் கவனம் (பழக்க தோஷம் :) )
சென்னை அளவுக்கு மதுரை மாற இன்னும் பத்து வருடம் ஆகும் என நினைக்கிறேன் . அரிதாய் சில ஜீன்ஸ் ,படிய வாரிய தலை , ஜிகுஜிகு மசக்கலி,பொருந்தாத லெக்கின்ஸ் ,தலை நிறைய மல்லிப்பூ,எதுவும் பண்ணிடுவாங்களோ என்ற பயந்தார் போல துணைக்கு அம்மா ,அப்பா,அண்ணன் , போர்வையாய் போர்த்தப் பட்ட ஷால்,ஜீன்சுக்கு பொருந்தாத டாப் இருந்தாலும் முகத்தில் ஒரு இன்னொசன்சி அதான் மதுரைப் பொண்ணுங்க :)


அப்புறம் பசங்க மெடிகல் ரெப் மாதிரி சில formals மீதி காதுல ஒரு தோடு மாதிரி வைட் ஸ்டோன் காட்டன் ஷர்ட் ,ஜீன்ஸ் என கேசுவல் ஆடைகள்தான்.அங்கும் இங்குமாக அலைந்த ஒரு சில ரேடியோ மிர்ச்சி RJ களை பார்க்க நேர்ந்தது எங்கே ஒரு நபரின் ஜீன்ஸ் எந்த நேரம் கழண்டு விழுந்து விடுமோ என்று கழுத்தையும் கவனத்தையும் வேறு பக்கம் திருப்ப நேர்ந்தது.(இவங்க தோளோடு இறுக்கிப் பிடிச்ச பெல்ட் குட்டீஸ் பாபா சூட் மாதிரி ஒரு ஜீன்ஸ் வாங்கினாத் தேவல பாவம் இடுப்புல நிக்க மாட்டிக்கு )
மெலிதாய் ஆனால் நீளமாய் கிருதா வேறு ஏதோ வேற்று கிரக வாசிகள் மாதிரி தெரிந்தார்கள் :) 

ஆடிஷன் நடக்கின்ற இடத்தில் மிர்ச்சியை சேர்ந்த இரண்டு பெண்கள் அழகாய் இருந்தாலும் ஏனோ சிரிக்காமல் கஞ்சத்தனம். இயல்பான அமைதியாக அல்லாமல் இறுக்கமாக அமர்ந்திருந்தனர்.ஆனால் ஆண் RJ கள் அரங்கையே கலகலப்பாக்கி வெகு இயல்பாக வந்தவர்களை வரவேற்று பேச வைத்துக் கொண்டிருந்தனர்.அவ்ளோ பெரிய அரங்கத்தினுள் ஒரு கடிகாரம் கூட இல்லாதது வியப்பாக இருந்தது.முதலில் வந்தவர்களை ஸ்டேஜ் performance  செய்ய வைத்துக் கொண்டிருந்தார்கள்.அதிலே என்னைக் கவர்ந்தது ஒரே ஒரு ஆண் மட்டுமே அவரும் தயார் செய்து வைத்திருந்ததை ஏற்ற இறக்கங்களுடன் சொல்லிய விதம் பிடித்திருந்தது .

நன்றாய் பேச வேண்டும் என வந்தவர்களையும் சரியாய்ப் பேச விடாமல் அவர்கள் பேசுவதையும் சரியாய்க் கேட்க விடாமல் பின்னால் இருந்து மாப்பிள்ளை பெஞ்ச் வழக்கம் போல சவுண்ட்.அந்த நேரம் பார்த்து ஒரு பெண் பிடிக்காட்டி கத்திடாதீங்க என்ற வேண்டுகோளோடு பேச வந்தார் அரைமணி நேரம் மேலாக விவேகானந்தர் பற்றி பின்னால் இருப்பவர்களின் கத்தலையும் பொருட்படுத்தாது பேசி முடித்துவிட்டே அமர்ந்தார் :) எங்கே இந்த விவேகானந்தர் தேர்வாகிவிடுவாரோ என்று எனக்கு திகிலாகவே இருந்தது

.எனக்கு அருகில் இருந்த பெண் tvs wego test drive வேண்டுமானால் போய்வாருங்கள் அவங்கதான் ஸ்பான்சர் போல எனவும் சரிதான் என்று கிளம்பிவிட்டேன் அந்த வளாகத்தின் கேட் வரைக்கும் தான் டெஸ்ட் டிரைவ் அனுமதி. ஆசையாய் இருமுறை சென்று வந்தேன் :)வண்டியில் ஒரே மைனஸ் என நான் நினைப்பது அவசரத்திற்கு நிறுத்தும் பொழுது இரண்டு பக்கமும் காலைத் தரையில் ஊன்றி பேலன்ஸ் செய்வது வெகு சிரமம் ஒரு பக்கம் சாய்த்து நிறுத்த வேண்டும்.பழகினால் ஒழிய சட்டென்று அப்படி வராது.

மதியம் வரை 110 நபர்கள் மட்டுமே நேரடியாக ஸ்டேஜ் performance செய்தது ஒருமணி நேர உணவு இடைவேளைக்குப் பின்பு மற்ற அனைவருமே முதல் லேவலான ஸ்டேஜ் performance க்கு அனுமதிக்கப் படவில்லை நேரடியாக சில RJ களின் நேர்முகத் தேர்வுக்கு மிக மிக குறைவான நிமிடங்களில் மட்டுமே பேச அனுமதிக்கப் பட்டார்கள்.மொத்தம் ஐநூறு பேரையும் ஒரே நாளில் ஸ்டேஜில் perform செய்ய வைத்து அதன் பின்பு நேரடிக் கேள்விகள் கேட்பது சிரமமே எனினும் முதலில் வந்த நூறு பேருக்கு மட்டும் அப்படி அனுமதித்து விட்டு பின்னால் வந்தவர்களுக்கான நேரத்தை குறைத்தது எவ்விதத்தில் நியாயம் ?அனைவர்க்கும் அதே போல  சமமாக ஸ்டேஜ் performance செய்ய வாய்ப்பளித்திருக்க வேண்டும் அப்படி என்றால் நிச்சயம் ஒரு நாள் போதாது தொடர்ச்சியாக இரண்டு நாள் எவரும் ஸ்பான்சர் செய்ய மாட்டார்கள் . முடியாதென்றால் காலையில் இருந்தே ஒவ்வொருவரையுமே நேர்முகத் தேர்வு மட்டுமே வைத்திருக்கலாம்.இது பெரிய சொதப்பலாக பட்டது எனக்கு.
நான் ஒரு நிகழ்ச்சி நடத்தினால் என்ன பெயர் வைத்து அதை எப்படி நடத்துவேன் என்று யோசித்து வைத்திருந்தேன் . என்னைப் போன்றே பிறரும் இருந்திருக்கலாம்.எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு வழங்கப் படாதது எனக்கு மிகவும் வருத்தமாக பட்டது இறுதிவரை கொடுப்பார்கள் என்றே நினைத்திருந்தேன்.காலையில் இருந்து interview செய்து அவர்களும் களைத்துவிட்டார்கள் என்ற சமாதானம் சரியா?

மதியத்திற்கு மேல் ஏற்கனவே performance செய்தவர்களை அவர்களின் அனுபவத்தை பகிரச் சொன்னார்கள் .பின்பு ஸ்பான்சர் செய்த டிவிஎஸ் வேகோ மற்றும் இதயம் நல்லெண்ணெய் நிறுவனம் சார்ந்தவர்கள் சில நிமிடங்கள் பேச அனுமதி அளிக்கப் பட்டது.போன RJ hunt இல் final வரை வந்த நபர் அங்கே வந்து சின்னதாய் ஒரு performance கொடுத்தார்.வழக்கமான மிமிக்ரி (நம்ம ட்விட்டர் பலகுரல் மன்னன் timing இன்னும் நன்றாக இருக்குமே :) ) எனினும் அதை அவர் ப்ரெசெண்டஷன் செய்த விதம் நன்றாக இருந்தது.

வெகு இயல்பாக துறுதுறுவென கவர்ந்தவர் RJ தமயந்தி.போன வருடம் 850 பேர் கலந்து கொண்டதில் பதில் ஒருவராக தேர்ந்தெடுக்கப் பட்டு ஒருவார ட்ரைனிங், வோட்டிங் ப்ராசஸ் க்குப் பின் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றார்.தன் அனுபவங்களை சுவையாக பகிர்ந்து கொண்டு உபயோகமான டிப்ஸ்-ம் கொடுத்தார்.கோலிசோடா என்ற நிகழ்ச்சி இவர் நடத்துவதுதான் ஆச்சர்யம் அந்த தமயந்திக்கும் இந்த தமயந்திக்கும் நிறைய வித்தியாசம். ஏன் என்றால் அந்த நிகழ்ச்சியில் காட்டு கத்தலாய்க் கத்துவார் எனக்கு அறவே பிடிக்காது நேரில் அப்படிஇல்லை.

அடுத்தது அபிஷேக் இவரும் வெகு நன்றாகப் பேசினார்.RJ -யின் பவர் என்ன என்பதை ஒரு மும்பை நிகழ்வைச் சொல்லி சொன்னார்.மும்பை குண்டுவெடிப்பின் பொழுது பாதிக்கப்பட்ட இடத்தில இருந்து ஒரு சிறுமி அந்த ஊர் RJ க்கு போன் செய்து பாதுகாப்பு வேண்டியதாகவும் அதன்பின் அந்தப் பெண் காப்பாற்றப் பட்டதாகவும் சொன்னார்.
RJ ஆவதில் உள்ள ப்ளஸ் மைனஸ்,பெரிய ஆட்களைப் பேட்டி எப்படி எடுக்க வேண்டி வரும்,சாமான்யர்களின் அன்பு இப்படி சுவராசியமாகச் சொன்னார்.

விகடன் அவார்ட் சமீபத்தில் சிறந்த FM என விருது கொடுத்திருக்கு காசு கொடுத்து வாங்கல (உன்னைக் கேட்டாங்களா முருகேஷா?:) )  என்றார்.விகடன் சுவராசியமான பத்திரிகை ஆனால் நடுநிலையானது அல்ல என்பது என் கருத்து  . பிரபலமான சரவணன் மீனாட்சி,கல்லூரிச்சாலை கனா காணும் காலங்கள் என்று விஜய் டிவி நல்ல சீரியல்கள் இருக்க அழகி ,தென்றல்,திருமதி செல்வம் என்று அவங்க ப்ரொடெக்ஷன் சீரியல்களுக்கு மட்டுமே இதுவரை விருது கொடுத்த்திருப்பதால் ..ஹி ..ஹி .. :)) சரி அதையும் மீறி ரேடியோ மிர்ச்சி ஒரு நல்ல fm என்பதை ஒத்துக் கொள்கிறேன் .ஆனால் 25 லட்ச மதுரை மக்கள் தொகையில் 15 லட்ச மக்கள் ரேடியோ மிர்ச்சி தான் கேட்பார்கள் என்றதை மட்டும் நம்பல ஏனென்றால் மதுரை மக்களுக்கு FM கேட்கும் பழக்கத்தையே உருவாக்கியது கோடை FM பத்து வருடங்களுக்கு முன்பு இவங்க சத்தமில்லாமல் வந்தபொழுதே ஆரவாரமான வரவேற்பு.வானவில் என்று ஒரு நிகழ்ச்சி போடுவாங்க பொதுமக்கள் ஒரு பொது விஷயம் எடுத்து நல்ல கருத்துகளை முன் வைக்க வழி வகுத்தது கோடை FM இது போன்ற நிறைய நல்ல நிகழ்சிகளைச் சொல்லலாம்.24 மாவட்டங்கள் 2.5 கோடி மக்களைக் கவர் செய்யும் பண்பலை .இன்று என் மொபைலில் சரியாக கிடைக்க மாட்டேன்குது:( 


RJ  ,ஸ்பான்சர்ஸ் பேசியவை தவிர அனுபவம் சொல்லுங்க ஏதாவது perform பண்ணுங்க என காலையில் ஏற்கனவே பேசியவர்களைச் சொன்னதற்கு மீதி இருப்பவர்களை பேசச் சொல்லி இருக்கலாம்.


காலை 12 மணிக்கு போனதுக்கு மாலை ஐந்து மணிக்கு அழைக்கப்பட்டேன்.எனக்கு முன்பு சென்றவர் போன வேகத்தில் திரும்பி வந்தது  சற்று கலக்கத்தை ஏற்படுத்தியது.



உள்ளே நுழைந்ததும் 30 செகன்ட்டுக்குள் உங்களைப் பற்றி சொல்லுங்கள் எனச் சொன்னதை ஜீரணிக்கவே எனக்கு 30 செகண்ட் மேலாகியது.சுருக்கமாச் சொல்லனும்னா எனக்கு சுருக்கமாச் சொல்லத் தெரியாது என்ற ராஜா சந்திரசேகரின் ட்வீட்  வாய் வரை வந்து மென்று விழுங்கினேன்.சீக்கிரமே துரத்திவிடுவார்கள் கிடைத்த நேரத்தை எப்படியும் அதிகப்படுத்திவிடுவது  என்ற நோக்கத்தோடு பேச ஆரம்பித்தேன்.பெயர் படிப்பு ஆர்வம் உள்ள விஷயங்கள் மட்டும் முதலில் சொன்னேன்.என்னை அதிகம் சிரமப்படுத்தாமல் நான் பிடித்த விஷயங்கள் எனக் குறிப்பிட்டதைப் பற்றியே கேள்வி கேட்டார்கள்.பிடித்த இசையமைப்பாளர் என்றதும் இளையராஜா என்றேன் அடுத்த கேள்வி அப்போ அவருடைய நூறாவது படம் என்ன?(மூடுபனி என்பது அந்த நேரத்தில் நினைவு வராமல் முரண்டு பண்ணியது.ஒரு முசகுட்டி (@vrsaran )இருந்திருந்தா ஈசியா க்ளூ கொடுத்திருப்பாரே என நொந்து கொண்டு )நேரத்தை வீணடிக்காமல் நான் அதிகம் கேட்டது ராஜாவின் பாடல்கள்.பாடல்கள் பரிச்சயமே அன்றி அவரைப் பற்றிய விசயங்களைத் தேடி தெரிந்துகொண்டதில்லை என்று உண்மையைச் சொன்னேன்.ஏதேனும் பிடித்த பாடலைப் பற்றிப் பேச முடியுமா என்றார்கள் ஆகா பறவை எடுத்துக் கொடுத்தது நினைவுக்கு வர மாலையில் யாரோ மனதோடு பேச பாடலைப் பற்றி முக்கியமான சில வரிகளை மட்டும் பகிர்ந்தேன்.கைகளைக் கட்டிக் கொண்டு புன்னகைத்துக் கொண்டே அவர் ரசித்துக் கேட்டது இன்னும் கண்களுக்குள் :))


சொல்ல மறந்துட்டேனே கவிதை வரும் எனக் குறிப்பிட்டு இருந்ததால் கவிதை சொல்லச் சொன்னார் கேட்பார்கள் என்ற யூகம் இருந்ததால் யோசித்து வைத்திருந்ததைசொன்னேன்.

"தோல்வியே வெற்றிக்கு முதல் படியாம் திரும்பிப் பார்த்தேன் படிகளுக்கொன்றும் குறைச்சலில்லை" tweet link


நிஜமாகவே நீங்க எழுதினது தானா ரொம்ப நல்லாருக்கே என சந்தேகத்துடன்
கேட்டார். நிதானமாக நிஜம் தான் ஸார் இமயமலை ஏறும் அளவுக்கு படிக்கட்டுகள் இருக்கு என்றதும் சரி என்றுவிட்டார் .


fm கேட்கும் பழக்கம் உண்டா எது மிகப் பிடிக்கும் எனக் கேட்டார். .என் வேலை காரணமாக பகல் பொழுதில் (ட்விட்டர் சேவை பற்றி சொல்லாமல் விடுத்தேன் :P ) கேட்பது சிரமம்.அப்படியே கேட்க நேர்ந்தாலும் சார் ஜெனூயினாச் சொல்லனும்னா பகலில் படபடவென கத்திப் பேசுவது ,அதிக விளம்பரம் இடைவேளை,பாடல் போட்டுக் கொண்டிருக்கும் பொழுதே பாதியில் நிறுத்திவிட்டுப் பேசுவது பிடிக்காது.அதனால் இரவு நேரங்களில் செந்திலின் NNR (நீங்க நான் ராஜா சார் )மிகப் பிடிக்கும்.தகவல்களோடு அவர் பேசுவதும் சுவராசியம் இயக்குனர் வசந்த் பேட்டி எடுத்தது கூட அருமை என்றேன்.பிற FM சமீபத்தில் கவர்ந்தது சூரியன் FM -இல் யாழ் சுதாகர் உச்சரிப்பே தனி காற்று மண்டலத்தைக் கற்கண்டு மண்டலமாக்க பூக்களான பாடல் தெரிவில் ய்யாழ்ழ்ழ் சுதாகர் என அவர் சொல்வதே அழகு என்றேன் உடனே அவர் நாதகாலா ஜ்ஜோத்தி இளையராஜ்ஜாவின் என நானும் இணைந்தே இசை வார்ப்பில் என முடித்தேன்:) . அப்புறம் 12 மணிக்கு மேல் ஹெலோ fm  வாடாத ரோசா வாடிப் பட்டி ராசா பிரபு கலக்குறார் சார் எனச் சொன்னேன்.அவர் கவனித்ததாகவே தெரியவில்லை. ம்ம் கொடுக்காததால் நம் சிட்னி fm பற்றி அறியும் அரிய வாய்ப்பை இழந்துவிட்டார்:)நீங்கள் கேட்க வ்வ்வேண்டும் என்று இதோ உங்களுக்கான பாஆடல் வழங்குவது உங்கள் கானாஆ ப்ரபா என்று சொல்லிருப்பேன் :))


ரேடியோ மிர்ச்சியில் NNR தவிர பிடித்த ஒன்று ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு பாடல் மெட்டில் ரேடியோ மிர்ச்சி இது செம ஹாட் மச்சி என்பதை விதம் விதமாக பாடுவார்கள் அது ரொம்ப பிடிக்கும் என்பதைச் சொன்னேன்.ஒருவேளை இந்த வேலை கிடைத்தால் எப்படி உணர்வீர்கள் என்றார் .RJ ஆக வேண்டும் பெரிய கனவு இருந்ததில்லை நட்பு வட்டம் உங்களால் முடியும் எனச் சொல்லி அனுப்பினார்கள்.எனக்கு சின்ன வயதில் இருந்து இசை ஒரு நல்ல நண்பன்.எங்களுக்கு ஒரு கம்பெனி இருக்கு இருப்பினும் இங்கே வந்தது மனதிற்குப் பிடித்த விசயமே வேலையாக கிடைப்பது ஒரு வரம் என்பதை உணர்ந்த காரணத்தினால்தான்IF I GET IT I ll DO MY BEST என்றேன்.சரி இன்னும் நிறைய levels இருக்கு இன்னும் நாங்க நிறைய பேரை interview செய்ய வேண்டி இருக்கின்றது நேரம் ஆகிவிட்டதால் (மாலை ஐந்து மணிக்கு மேல் )நீங்கள் இப்பொழுது கிளம்பலாம் நாங்கள் மொத்தமாக முடித்துவிட்டு பிடித்திருந்தால் call செய்வோம் என்றார்.


கிளம்புகின்ற நேரத்தில் RJ தமயந்தி வந்து நீங்கள் இவ்வளவு நேரம் பேசியது யாரிடம் தெரியுமா?எனக் கேட்டார்.தெரியாது என்றேன்.அதற்கு அவர் அவங்க பகலில் FM கேட்கவே மாட்டாங்களாம் செந்திலின் NNR மட்டும் தான் கேட்பாங்களாம் என்றபோது அந்தக் குரலில் இருந்த ஏதோ ஒன்று உறுத்தியது.அவர் சொன்ன முக பாவத்தில் சிரிப்பே வந்துவிட்டது.(நல்ல குழந்தை மாதிரி அழகு :))சைக்கிள் கேப்பில் சைட்டடிச்சேன் :) ) நிச்சயம் பகல் நேரத்தில் அவர் செய்யும் நிகழ்ச்சிக்கு போன் செய்து உங்களை ரொம்ப பிடிக்கும் சார் என்று சொல்ல வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டேன் :))

அவர் பெயரைச் சொல்ல மறுத்துவிட்டார்.பின் அந்தப் பெண்தான் ரமணா என்றார் விளம்பரம் கூட கேட்க மாட்டீங்களா என கேட்க அவங்களுக்கு விளம்பரமும் பிடிக்காதாம் என்றார் :) மிகச் சிரமப்பட்டு பெயர் கேட்டிருக்கிறேன் என்றேன் நிச்சயம் நம்பி இருக்க மாட்டார் :)) கதவை மூடி விட்டு வெளியே வந்த பொழுது மூடு பனி நினைவுக்கு வந்து தொலைத்தது.ஆனால் திரும்பப் போய்ச் சொல்ல மனம்வரல



இதன் மூலம் நான் தெரிந்து கொண்டவை :


1.அபிஷேக் சொன்னது போல திருவள்ளுவர் தான் திருக்குறளை எழுதினார் என அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் ரஜினி தான் எழுதினார் என்று பொய்யைக் கூட சுவராசியமா சொல்லத் தெரியனும் .


2.எந்த வேலைக்குச் செல்கிறோமோ அதன் மீது முதலில் இருந்து ஈடுபாடு இருந்திராவிட்டாலும் ஈடுபாடு மிக்க ஒன்று எனச் சொல்லத் தெரியனும் 


3. fm interview என்ற பட்சத்தில் முதல் நாள் அந்த சம்பந்தப்பட்ட FM நிகழ்ச்சிகளை ஒன்றுவிடாமல் கேட்டு அதில் சுவராசியமான பகுதிகளை ரசித்துச் சொல்ல வேண்டும்.பிடிக்காததை தவிர்க்கலாம்.

4. RJ தானே நல்ல லூசு மாதிரி பேசினாப் போதும்பா என்று என அண்ணன் அறிவுரை கொடுத்தது போலவே தான் பொதுவாக RJ பற்றி பரவலான கருத்து.ஆனால் அவர்களைத் தேர்ந்தெடுக்க எவ்வளவு டெஸ்ட் வைக்கிறாங்க அதில் எவ்வளவு திறமையுடன் அவங்க செயல்பட்டு பல நூறு பேரில் ஒன்றாக வருகிறார்கள் என்பது தெரிந்தபின் மலைப்பு.நிச்சயம் அவர்கள் திறமைசாலிகளே.கலகலவென கூட்டத்தில் முன்பின் அறியாதவர்களிடம் சமயோசித புத்தியுடனும் நகைச்சுவை உணர்வுடன் பேசுவது என்பது அசாத்திய திறமையே .நம்ம ட்விட்டரில் கௌண்டர் கொடுத்து உடனுக்குடன் நுட்ப மொக்கை போடும் கார்க்கி போன்றோர்  இதற்கு முழுத் தகுதியானோர் :)


5. 60 செகண்ட்ஸ் என்பது எவ்வளவு நீளம் என்பது நீங்கள் ஒரு RJ ஆனபின்பே தெரியும் என்று அபிஷேக் சொன்னார்.சொல்லாமலே புரிந்து கொண்டது ஏதோ படபடவென வேகமாப் பேசுறாங்க என்பது மட்டுமே நம் பக்கம் தெரியும்.உண்மையில் அவர்கள் கொடுக்கின்ற நேரத்திற்குள் ஒவ்வொரு விளம்பர இடைவேளைக்குள்ளும் சீக்கிரம் பேசி முடிக்க வேண்டும் என்பது டார்கெட் அதில் அப்படித்தான் பேச முடியும்

இரவு நேரங்களில் விளம்பர இடைவேளை இல்லாததால் தான் அவ்வளவு நிதானமும் இலகுத் தன்மையும் என கணிக்கிறேன் 

6.
அத்தனை பேருக்கும் நேரம் குறைக்கப்பட்டாலும் வெறும் கண் துடைப்பு நேர்முகத் தேர்வு எனச் சொல்ல முடியாது வேறு பிரபலங்களின் தெரிந்தவர்களின் reference பற்றிக் கேட்கவில்லை ஏதேனும் மீடியாவில் முன் அனுபவம் உண்டா என்பதைத் தவிர .இறுதியாக ஒருவாரம் சென்னையில் பயிற்சி அதன்பின்பு மக்களிடம் ஓட்டெடுப்பு என நிறைய நிறைய levels உண்டு.பார்த்து filter பண்ணிதான் தேர்ந்தெடுக்கிறார்கள்.


 7.பெரிய எதிரி தயக்கம்.சரியோ தவறோ அதை வெளிப்படுத்தும் விதம்தான் முக்கியம்.இலகுவாக பிறரிடம் பழகும் தன்மை நல்லது.


8. பெரிதாக வெளித்தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை பேசுகின்ற திறன் மட்டுமே கவனத்தில் கொள்ளப் படுகின்றது 


9. RJ என்றால் ஏதோ படபடவென பேசிவிட்டு ஜாலியாக பார்ட் டைம் ஜாப் சம்பளம் வாங்கிட்டு இருக்கலாம் என்பதல்லவாம் .தீபாவளி,பொங்கல் என்று விடுமுறை எல்லாம் கிடையாது அந்த நாட்களிலும் ஒலிபரப்பு இருக்கும் என்பதால் (அபிஷேக் சொன்னது)


10. ஆதலால் பொறுப்பை உணர்ந்தே இருக்க வேண்டும் ஏனோ தானோவென சும்மா அட்டெண்ட் பண்ணப் போன எனக்கு இது ஒரு நல்ல அனுபவம் :)


 சொக்கன் #4varinote -இல் நண்பர் @RagavanG விஸ்வநாதன் பற்றிய ஒரு பதிவு போடவும் உடனே ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா என MSV பாடியதை உடனே கேட்க வேண்டும் எனத் தோன்றியது.அந்த நேரத்தில் சூரியன் FM RJ யும்  அழகி சீரியலில் நடிப்பவருமான குருவி கோபால் இந்தப் பாடலை நீங்கள் RJ ஆக இருந்து ஒரு காதல் நிகழ்ச்சிக்காகவோ காமெடி நிகழ்ச்சிக்காகவோ வழங்க வேண்டி வந்தால் எப்படிப் பேசுவீர்கள் எனக் கேட்டார் .எனக்கு பதில் சொல்லத் தெரியல அவரே சொன்னார் அவரது timing ஆன சட்டென மனதில் உதித்து அவர் சொன்ன விதத்தை ரொம்ப ரசிச்சேன் RJ என்றால் என்ன என அபிஷேக் கொடுத்த விளக்கத்திற்கு வெகு பொருத்தமாக இருந்தது :))

நீங்களும் ரசிக்க கீழே :

காதல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி என்றால் :

உங்கள் உமா கிரிஷ் உடன் நீங்க கேட்டுகிட்டு இருக்கீங்க காதல் காதல் ..தினமும் நான் ஏங்குகிறேனே..உனக்காகஒரு சில நிமிடமாவது

 என்னை நினைப்பாயா அன்பே எனக்காக...ஒரு காதலினின் காத்திருப்பு இது ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் தான் 
இருக்காங்கிறதசிலர் ஒத்துக்க மாட்டாங்க .. ஆனா அவங்களுக்கேதெரியாமல் இருக்கும் அவ்ளோதான் .காதலுக்காக போராடுறவங்க அதற்கான வெற்றி கிடைக்கும் போது கிடைக்கும் சந்தோஷத்துக்கு நிகர் வேறேதும் இல்ல
 காதல் போட்டி வரலாம் காதலர்களுக்கிடையே போட்டி வந்துச்சுன்னா 
ஆனா அதையும் தனக்கு சாதகமாக்கி வெற்றி பெறுபவர்கள் தான் வாழ்க்கையிலும் வெற்றி அடையிறாங்க அதுக்கு உதாரணம் இந்த பாடல் .." ... " உங்கள் உமா கிரிஷ் உடன் நீங்க கேட்டுகிட்டு இருக்கீங்க காதல் காதல்..  
உங்கள் உமா கிரிஷ் உடன்  
என்னை நினைப்பாயா 
ஒவ்வொரு ஆணின்  
அவ்ளோதான் 
காதலுக்காக போராடுறவங்க 
 அதுக்கு உதாரணம் ஆனா அதையும்  
காதல் போட்டி  
காதலுக்காக போராடுறவங்க 

காமெடி நிகழ்ச்சி என்றால் :


காமெடி ஷோ ன்னா.. ஏம்பா ..அப்பா அம்மா சொல்பேச்ச கேளுங்கன்னா கேக்குறாங்களா இந்த காலத்து பசங்க

இதே ஒரு பொண்ணு சொன்னா உடனே கேட்பாங்க ..என்னங்க நான் சொல்றதுல நம்பிக்கை இல்லையா / இந்த பாட்டுல பாருங்க மகனே வா மகனே வா ன்னு எத்தன தடவ அப்பா கூப்பிற்றாரு.திரும்பி பார்த்தாரா ? இதே ஒரு பொண்ணு பார்த்தேலே பின்னாடியே போவாங்கஇன்னும் நம்பிக்கை இல்லான்னா இந்த பாட்டகேளுங்க " ஆலாலகண்டா. " 2/4 நீங்க கேட்டுகிட்டுஇருக்கீங்கஉங்கள் உமாகிருஷ் உடன் தமாஷ் நேரம் 

காமெடி ஷோ ன்னா 
இதே ஒரு பொண்ணு  
மகனே வா மகனே 
இன்னும் நம்பிக்கை இல்லான்னா  


ஒருவேளை நான் RJ ஆகி தமிழ் நாட்டின் தலை எழுத்து மாறிவிட்டால் எனது முதல் பாடல் நண்பர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாலையில் யாரோ வும் என் மரியாதைக்குரிய சொக்கன் அவர்களுக்காகவென்று பாடலாசிரியர் கங்கை அமரன் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று செய்வேன் என்றும் உறுதி அளிக்கிறேன் :))

அப்படி எந்த அசம்பாவிதமும் நடக்காத பட்சத்தில் வழக்கம் போல ட்விட்டர் ஜாக்கியாக நீங்கள் கேட்காமலே பாடல்களை டைம் லைனில் வாரி வழங்கி உங்களை வெறுப்பேற்றுவேன் என்றும் என் செல்லம் ஜான் சேனாவின் மீது ஆணையிட்டு கூறுகிறேன் :))