Saturday, September 18, 2010

பெருமூச்சு...1!

எனது கற்பனைக்காதலனுக்கு சமர்ப்பணம் 

உன் 
பார்வையால் 
உணர்ந்தேன் என்னை 
முழுமையான பெண்ணாக !
*********************************************

உன் கனவுகளின்
நான் வருவேனோ
அறியேன்
என் கனவுகள்
உனையன்றி
பிற அறியா...!
**************
பெண்ணாக பிறந்தது
பிழையென கருதுகிறேன்
பெண்மை மீறி
மழையென என்
காதலை
பொழிவதற்கு இயலாத போது ...!
*********************************
பிறர்
அறியா வண்ணம்
உன்னை காண்கிறேன்
அங்கே என் வெட்கம்
சத்தமிட்டு கேலி
செய்வதை அறிந்தே ..!
***********************
தவிப்புகளோடு
வேடிக்கை பார்கின்றது
என் மனம்
உன் மௌனத்தை..!
********************
அத்தனை சப்தத்தையும்
அடக்கி விடுகின்றது
உன் கண்களின்
சீண்டல்...
**********
எனை பிரிந்து
நீ செல்கையில்
வார்த்தைகள் மௌனிக்க நாணம் பின்னிழுத்தும் 
ஆசை அத்து மீறி 

கண்கள் அணைக்கின்றன 
***************************
 என்னை உன்னில்
முழுவதுமாக
தொலைத்திடவே
விரும்புகிறேன்..
யாரேனும்
எனை தேடினால்
உன் (அ)முகமே
என் முகவரியாகட்டும்
*************************
நமக்குள் நாமே
ஒன்றான பொழுதுதான்
தெரிந்து கொண்டேன்
ஒன்றும் ஒன்றும்
ஒன்றே எனும்
காதல் சூத்திரத்தை...
**********************
இன்று நீ 
வெகு அழகு 
என்கிறார்கள் என் 
முகத்தைப்  பூசி மொழுகிய 
உன் முத்தங்கள் காட்டிக்கொடுத்ததோ??
************************************
என் தலையில் முட்டி விட்டதே
அடடா அதிகம் வலித்ததோ
உன் கண்களில் 
ஈரம் பார்த்தேனே ..!
 **************************
தெய்வத்திடம் தானே 
முணுமுணுக்கிறேன்
என் வேண்டுதல்களை 
எப்படி நீ நிறைவேற்றுகிறாய் 
தெய்வம் உனக்கு 
ஒற்று வேலை பார்க்கின்றதா?
**************************************************
உன் உதடுகள் 
தீண்டியதால் என் நாமமும்
உன் கைகள்
தீண்டியதால் என் நாணமும் 
அழகாகின !
**************************************
பஞ்சும் நெருப்பும் 
அருகில் இருந்தால்
பற்றிக் கொள்ளுமாமே
இல்லையே 
எனக்கு உன் அருகாமை
கதகதப்பாகத்தானே இருக்கின்றது
*********************************************************
அண்ணனிடமே வேண்டிய பொருட்களை
கேட்கிறாய் 
ஏன் நான் இல்லையா என ஆதங்கப்படுகிறாய் 
அடப்பைத்தியக்காரா 
 உயிரற்ற பொருட்கள் வேண்டுமானால் 
அண்ணன் வாங்கித்தரக்கூடும்
உயிரும் சதையுமாக
என்னவன் 
உன் தோளிலும் மார்பிலும் 
சாய்கின்ற சுகத்தை 
விட வேறு சொர்க்கம் 
தந்து விட முடியுமா நீ எனக்கு ..?
*********************************************
நாட்கள் தள்ளிச்சென்ற 
வேளையில்
நாட்கள் தள்ளிப்போடாமல்
உன்னிடமே முதலில் 
சொல்ல வேண்டும் எனக்கு..!
அவ்வேளையில் 
உன் ஆனந்தத் தழுவலும்
ஒரு நெற்றி முத்தமும் 
அழுத்தமாக 
வேண்டும் எனக்கு....!
*****************************
சத்தமில்லாமல் 
பல முத்தங்கள்
அரங்கேறும் வேளையில்
உன்னில் பாதியாக அல்ல
முழுவதுமே நானாக உணர்கிறேன் 
************************************************
பயந்தால்
அணைத்துக் கொள்வாய் 
என அறிந்தே
பயம் கொள்கிறேன் நான்! 
************************************
எப்படியேனும்
உன்னை கவர்ந்துவிட
வேண்டும் என எண்ணி
நான் என்னவாக இருந்தால்
உனக்கு பிடிக்கும் சொல்
அப்படியே மாறி விடுகிறேன் 
என கண்கள் படபடக்க
உன் பதிலே எதிர்நோக்கி 
இருந்த பொழுது
என் கன்னங்களை 
உன்னிரு கைகளில் ஏந்தி
நேராக 
"நீ நீயாக இரு"
என்கிறாய்..!
கண்கள் நிலை குத்திப் போயின
கள்வா
என்னைக் கவர்ந்தாயடா!
***********************************
எனைச் சுற்றுவதென்னவோ
நீயாக இருந்தாலும்
சட்டென்று நிறுத்தி விட்டால்
கிறுகிறுப்பு எனக்குத்தான்
*******************************************
என் தனிமைப்பொழுதுகள் 
உனது கைகளுக்கிடையேயும்
உஷ்ணக்காற்றின் வீச்சுகளுக்கிடையேயுமான 
கனவுகளிலேயே 
கழிகின்றன 
என்பதை அறிவாயா?
*****************************
முதுகைக் கூசித் 
துளைத்தெடுக்கும் 
உன் பார்வைகள் என்
 பின் நீ இருப்பதை கண் 
முன் பறைசாற்றுகின்றன
************************************