Tuesday, March 8, 2011

எனக்கு பிடித்த பாடல்கள்


"இன்று நீ நாளை நான்"என்ற படத்தில் வரும் "பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்" என்ற பாடல் ஒரு அருமையான கம்போசிங்.மோகம் என்பது ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானது.ஆண்களுக்கு வெளிக்காடிகொள்ள நிறைய வாய்ப்புகள் இருக்கின்றது.பெண்களுக்கு அவ்வாறு இல்லை.காட்டிக்கொண்டாலும் எற்றுக்கொள்ளபடுவதில்லை.இந்த பாட்டிலே கணவனை இழந்த பெண்ணின் மன உணர்வுகளை அவளின் மோகத்தின் தாக்கத்தை நம்மை இசையிலே உணர வைத்திருக்கின்றார் இளையராஜா.நம்புவீர்களோ இல்லையோ இங்கே பதிவுடுவதற்கு முன் வரை இந்த பாடலை நான் காட்சி வடிவில் கண்டதில்லை.இருப்பினும் பாட்டினை கேட்கின்ற பொழுதே தோன்றுகின்ற கற்பனை அப்படியே இந்த பாட்டை பார்க்கும் பொழுது பொருந்தி வந்தது.அது தான் இளையராஜா.
ஆரம்பத்தில் மெதுவாக ஆ என்று ஆரம்பித்து அப்படியே உச்சஸ்தாயில் கூடி செல்லும் ஜானகி அவர்களின் ஹம்மிங்.ஜானகிஅவர்கள் பற்றி ஒருமுறை அனுராதா ஸ்ரீராம் சொன்னது நினைவுக்கு வருகின்றது."சங்கதிகளின் ராணி"என்று.அது முழுக்க முழுக்க ஜானகி அவர்களுக்கு ஏற்புடைய பட்டம்.இளையராஜாவே ஜானகி அவர்களிடம் கொடுக்காத ஒரு சில பாடல்கள் எனக்கு நிறைவு தரவில்லை என்று சொல்லி இருக்கின்றார்.பல வித சங்கதிகளை போடுவதில் ஜானகி வல்லவர்.இந்த பாடல் கூட இவரின் பெருமை பறைசாற்றும் பாடல்தான்.பெண்ணின் தாபத்தை அப்படியே குரலில் குழைத்து கொண்டு வந்திருப்பார்.
கொட்டுகின்ற மழையில் ஆட்டம் போடுவார் லக்ஷ்மி.அந்த துள்ளலை பாடலின் ஆரம்ப புல்லாங்குழல் பதிவு செய்து இருக்கும். பாடலில் இடியும் மழையும் காற்றும் வீசும்.அந்த புயல் காற்றில் பாடினால் எப்படி இருக்கும் என்று ஒருமுறை கற்பனை செய்துகொண்டே கேளுங்கள் அவருடையஹம்மிங்கை.மிக பொருத்தமாக இருக்கும்.
"பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம் 
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம் 


மழைப்பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
மலரம்புகள் உயிர்வரைக்கும் தாக்குதே
மழை செய்யும் கோளாறு 
கொதிக்குதே பாலாறு
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
இது கா..தல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
இரு ஜோடி வண்டுகள் கோடு தாண்டிடுமா..?
மனதின் கொண்டாட்டத்தை மெலிதான புல்லாங்குழலால் சத்தமாக சொல்ல இயலுமா?
சொல்லி இருப்பார்.மெல்லிய தட்டலுடன் புல்லாங்குழலை இணைத்து விட்டுருப்பார்.அது சொல்லும் பல நூறு மகிழ்ச்சியை.
தங்கத்தாமரை மலர்ந்த பின்பு மூடுமோ
பட்டுப்பூங்கொடி படர இடம் தேடுமோ
மலர்கணை பாயாதோ மதுக்குடம் சாயாதோ
இந்த வெள்ளை மல்லிகை தேவகன்னிகை தானம்மா
இந்த வெள்..ளை மல்லிகை தேவகன்னிகை தானம்மா
மழை காமன் காட்டில் பெய்யும் காலமம்மா 
கண்களிலும் மனத்திலும் ஏறிவிடும் பாடலின் தாக்கம்

எனக்கு பிடித்த பாடல்கள்


"அச்சமில்லை அச்சமில்லை"படத்தில் கண்ணில் தாகம் தீருமோ"என்ற பாடல் மிக சமீபத்தில் ரசித்த பாடல்.பாடலும் சரி படமும் சரி அதிகம் பிரபலம் ஆகவில்லை.ஆனால் நிச்சயம் சௌமியாவின் குரல் சொல்லும் சோகம் உங்கள் கண்களிலே கண்ணீரை வரவழைக்கும்.எத்தனை உறவுகள் இருப்பினும் அனைவரிடமும் நம் மனத்தை கொட்டமுடியாது.நண்பரிடம் மட்டுமே நம் மனம் விட்டு அனைத்தையும் சொல்லமுடியும்.அந்த பகிர்தலுக்கு இருக்கின்ற சுகமே அலாதி.கணவனை பிரிந்திருக்கும் சோகத்தை கணவனையே நண்பனாக தரித்து சொல்லும் பொழுது சோகத்தை முழுவதும் பகிர்ந்தது போலும் ஆச்சு.நம் ஏக்கம் தவிப்பின் வீரியத்தை கணவனிடம் புரியவைத்தது போலும் ஆச்சு.அப்படி ஒரு தருணத்தை தான் இந்த பாடல் சொல்ல விழைகின்றது.

"கண்ணில் தாகம் தீருமோ மித்ரா மித்ரா
நெஞ்சில் காயம் ஆறுமோ மித்ரா மித்ரா
கண்ணில் தாகம் தீருமோ மித்ரா மித்ரா
நெஞ்சில் காயம் ஆறுமோ மித்ரா மித்ரா

கோபங்கள் பேசும் போது வேறெதைக்கூறும்
ப்ரேமைகள் பேசும் போது மோகம் கூறும்
மௌனம் தான் பாடலா வலி எல்லாம் தரும் ஊடலா

என் மீதான கோபத்தை ஒதுக்கி விட்டு நம் மகிழ்வுடன் சுகித்திருந்த நாட்களை நினைவு கூறு நண்பா அது ஆயிரம் கதை சொல்லும்.
 இது போதும் இது போதும்
ஒரு வார்த்தை சொல்வாய் நண்பா
உயிர் தேடும் உயிர் தேடும் ஒரு கூடல் செய்வாய் நண்பா

எங்கேனும் விரசம் தெரிகின்றதா அவள் அழைப்பதில்.மோகம் இரு உள்ளங்கள் இணைவதற்கான மேடை.அது ஒரு வித த்யானம்.மன அழுத்தத்தை விடுவிப்பதற்கான கருவி.அதனால் தான் இன்றளவும் மனித இனத்திற்கு மோகம் குறையவில்லை.

"வீட்டின் தனிமையிலே தீண்டி என்னை சுகிப்பவனே
கொஞ்சம் விலகி விட்டால் முத்தம் பல பதிப்பவனே
சோலை பூவெல்லாம் ஆடையாய் சூடி பார்ப்பவன்
மாமழை நேரங்கள் ஈரமாய் என்னை சேர்ப்பவன்
நீயா நீயா தனிமையில் செல்கிறாய்
வனம் கலைந்து சிரித்திட
"

அன்னியோன்யம் கொண்ட தம்பதிகளின் இனிமையான நினைவு நாடாக்கள்.இவ்வளவு ஆசையுடையவனா என்னை பிரிந்துசெல்கிறான் என்ற வேதனையை மிக அழகான வரிகளில் பதிவு செய்து இருக்கின்றார் கவிஞர்.
"வீட்டின் தனிமையிலே ஏதோ ஒரு பெரு நெருப்பு 
பூவின் அசைவினிலே ஏதோ ஒரு படபடப்பு
சொல்லும் வார்த்தைகள் காற்றிலே தேய்ந்து போகுதே
சினேகம் வேறில்லை உன்னையே நெஞ்சம் வேண்டுதே
கண்கள் தீண்டும் வலிகளும் போதுமே
இனி விடியல் இனித்திட 

பிரிவின் வலி இவ்வளவு துயரமானதா?

"நெஞ்சில் அச்சம் பொங்குதே ஏனோ ஏனோ
கண்ணீர் மிச்சம் தங்குதே ஏனோ ஏனோ"
இதற்கு மேல் பாடலை கேட்டால் நான் உணர்ந்த அனைத்தும் நீங்களும் உணருவீர்கள்.

Friday, March 4, 2011

2011 புத்தாண்டு ராசி பலன்கள் :

தனுசு :

தனுஷ் ரசிகர்கள் ஆன தனுசு ராசி நேயர்களே..!
உங்கள் ஆடுகளம் ரணகளமாக அமையும்.எவ்வளவு சாப்பிட்டாலும் உடம்பில் ஒட்டவே ஒட்டாது.நாலு நல்லி எலும்பு அஞ்சு குருத்தெலும்பு ஒரே ஒரு முதுகெலும்பு அனைத்தும் சேர்ந்த கலவையாக காணப்படுவீர்கள்.உணவில் எலும்பு குழம்பை தவிர்த்து கூட்டு பொரியலை அதிகமாக சேர்த்துக்கொள்ளவும்.இருப்பினும்புடலங்காய் கூட்டை தவிர்க்கவும்.எதிர்காற்று வீசும் பக்கம் செல்ல வேண்டாம்.டாப்சி புயலால் அதிகம் பாதிக்கபடுவீர்கள்.உங்கள் ராசிநாதனாகிய குரு ஐந்தாம் இடத்தில நீசம் வாங்குகிறார்.எனவே ஐந்தாம் இடத்திற்குரிய சந்திரன் மறைந்து கிரகணத்தை ஏற்படுத்துகிறார்.அது உத்தமம் அல்ல.எனவே பரிகாரமாக மன்மதன் அம்பு படத்தை பத்து தடவை பார்க்கவும்.திரிஷாவை தரிசிப்பதன் மூலம் உற்சாகம் ஊற்றெடுத்து வரும் காலம் இது.பத்தாம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் வாக்கு வாதங்களை குறைத்து கொள்வது நல்லது.இல்லாவிடில் வெள்ளாவியில் வைத்து வெளுக்கப்படுவீர்கள்.இந்த வருடம் மாப்பிள்ளையாகும் யோகம் உங்களுக்கு இல்லை.எனவே வீண் முயற்சி வேண்டாம்.உங்களுக்கு இந்த வருடம் வாய்க்கா தகராறு அதிகம் ஏற்படும் வருடம் ஆகும்.எனவே திரும்ப திரும்ப பேசுவதை தவிர்க்கவும்.


ராசியான நிறம் : வெள்ளாவி வெள்ளை
அனுகூலமான திசை : கெட்டவன் இருக்கும் திசை அல்ல

மகரம்:
பிறர் மண்டையை காயவைப்பதில் அதிக ஆர்வம் கொண்ட மகர ராசி நேயர்களே..!

உங்களுக்கு அதிர்ஷ்ட எண் எட்டு என்பதால் பிறரை நொட்டு நொட்டு என்று கொட்டிக்கொண்டே இருப்பீர்கள்.உங்கள் ராசி நாதன் சனி பகவான் உச்சத்தில் இருக்கிறார்.எனவே அடிக்கடி உச்சி மாடிக்கு செல்லும் பழக்கம் உங்களிடம் இருக்கும்.அதே சமயம் ஏழாமிடத்தில் நின்று கொண்டு வெகு வக்கிரமாக பார்க்கின்றார்.எனவே உங்களிடம் தெரிந்து தெரியாமலோ வாய் கொடுத்தால் வாங்கி கட்டிக்கொண்டு தான் செல்ல வேண்டும்.நீங்கள் எவரைப்பற்றியும் கவலைப்பட வேண்டியதே இல்லை.உங்களை பார்த்தால் பார்ப்பவர்களுக்கு தான் கஷ்டம்.ஆகவே உங்களிடம் நேராக மோதாமல் சாய்ந்து நின்று பார்த்து விட்டு செல்வது நன்று.உங்களுக்கு இந்த வருடம் பொங்கு சனி.எனவே ஏடாகூடமாக பேசுபவர்களிடம் பொங்கு பொங்கென்று பொங்கி பொங்கல் வைத்து விடுவீர்கள்.நீங்க கேப்ரிகான் என்பதால் பாப் கான் கண்டிப்பாக உணவில் மூன்று வேளை சேர்த்து கொள்ள வேண்டும.அமீர் கான் ஷாருக் கான் படங்களை மட்டுமே பார்க்க வேண்டும்.ஆயினும் சல்மான் கான் மட்டும் தவிர்க்கவும்.தேவையில்லாத தலைவலி வரக்கூடும்.
சனியின் வக்கிரத்தில் இருந்து தப்பிக்க எந்திரனின் சுந்தரியை தரிசித்துவிட்டு வாருங்கள்.
உங்களுக்கு இந்த வருடம் செம்மையான வருடம் ஆகும்.
ராசியான நிறம் :சிவப்பு..(கோபம் கொப்பளிக்கும் )
அனுகூலமான திசை : ஓவரா பேசறவங்க இல்லாத இடம்

கும்பம் :
கும்பலோடு கோவிந்தா போடும் கும்ப ராசி அன்பர்களே.!

நீங்கள் தனியாக சென்றாக கூட கும்பலாக செல்வது போன்ற உணர்வு இருக்கும்.அதுக்கு காரணம் செவ்வாய் மூன்றாம் இடத்தில் ராகு சனி குரு என்று முக்கால் வாசி கிரகங்களோடு கும்பலாக உட்கார்ந்து இருப்பதால் தான்.உங்களுக்கு தீனி போட்டு மாளாது.தின்னிப்பண்டாரங்கள் உங்கள் வீட்டில் எப்பொழுதும் வாசம் செய்யும்."தின்னா தினக்கு தின்னா தின் தின்னா தினக்கு தின்னா தின்னாட்டி உனக்கு என்னா இப்பிடி தின்னா எல்லாம் போகும் மண்ணோடு மண்ணா" என்ற பாடல் நேயர் விருப்பமாக உங்கள் வீட்டில் ஒலித்து கொண்டே இருக்கும். கழுத்திலிருந்து வெறும் வயிறு மட்டுமே உள்ளவர்கள் உங்களுக்கு உற்ற துணையாக இருந்து கழுத்தறுப்பார்கள்.இதற்கு பரிகாரமாக ஒரு அன்னதான உண்டியலை உங்கள் வீட்டில் திறந்து வைத்து வசூல் செய்தால் ஓரளவு நிலைமை கட்டுக்குள் வரும்.வாழ்ந்து கெட்ட குடும்பம் பார்த்திருப்பார்கள்.ஆனால்ஆக்கி பொங்கி போட்டே கெட்ட குடும்பம் நீங்களாக தான் இருக்கும்.உங்கள் கஷ்டம் தீர உலக்கை பகவானை நாடி வருபவர்களை நமஸ்காரம் செய்து பூஜை செய்தால் பலன் அமோகமாக இருக்கும்.
இந்த வருடம் அத்தனை சோதனைகளும் கும்பலாக கூடிக்கும்மியடிக்கும் வருடம் ஆகும்.
ராசியான நிறம் : ஊதா (வர்றவன் எவனுக்கும் கஞ்சி ஊத்தாதீங்க )
அனுகூலமான திசை : தலை தெறிக்க ஓடுங்க எந்த திசை இருந்தா என்ன(?)


மீனம்:
தலைவலியே தானே தேடி கொள்ளும் மீன ராசி நேயர்களே !


முதலில் யாகூ பின்னர் ஜிமெயில் ,ஆர்குட் , facebook இப்போ ட்விட்டர் என்று இணையத்தில் பல ஆறுகளில் நீந்தி கொண்டு இறுதியில் எந்த கடலில் சங்கமிப்பது என்று தெரியாமல் விழிப்பீர்கள்.உங்கள் ராசி நாதனாகிய குரு உங்களை விட்டுட்டு பக்கத்தில் இருக்கிற ஆறாம் வீடான சனி யை குறுகுறு ன்னு பார்க்கறதால உங்களுக்கு வினை எல்லாம் வீடு தேடி வரும்.சொல்லமுடியாது வினை வீட்லயே கூட இருக்கலாம்.சனி பகவானை மடியில கட்டிக்கிட்டு சகுனம் பார்க்கிற மாதிரி தான்.ஏழாம் இடத்தில ராகு இருந்தாலே தோஷம்.இதுல கேதுவும் சேர்ந்து ராகுவோட பின்னி பிணைஞ்சு டான்ஸ் ஆடிகிட்டு இருக்கறதால மிக பெரிய சர்ப்ப தோஷத்திற்கு ஆளாகின்றீர்கள்."ஆடதடா ஆடாதடா மனிதா ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவே மனிதா" என்ற பாடலை ரிங் டோனாக வைத்து கொண்டு அடக்கி வாசிக்கவும்.தோஷம் நீங்க இரண்டு மண்டலம் ராகு காலத்துல கேது ஓரை ல ராம நாராயணின் "நாகாத்தா " திரைப்படத்தை தினமும் நாலு தடவை பார்க்கவும். சந்திரன் மூன்றாம் இடத்தில இருக்கறதால பௌர்ணமி பௌர்ணமிக்கு எம கண்டத்துல நிலா சோறு நின்று கொண்டே சாப்பிடவும்.
ஜென்ம சனி பொங்கு சனி மங்கு சனி விரய சனி கண்ட சனி என்று எல்லா சனியும் உங்க அக்கௌன்ட் ல ..சாரி உங்க ஜாதகத்தில தான் ஓடுது. அது உங்களுக்கு சுப காரிய தடைகளை கொடுக்கும்.யாருக்காச்சும் பணம்  கடன் கொடுத்திருந்தீங்கன்னா வடக்கம் பட்டி ராமசாமிகிட்ட கௌண்டமணி கொடுத்த பணத்திற்கு நேர்ந்த கதிதான் ..ஊ ஊ..ஊ..ஊ..
மொத்தத்தில் உங்களுக்கு இந்த வருடமும் சென்ற வருடம் போலவே தான் இருக்கும்.பெருசா ஒன்னும் சொல்றதுக்கில்ல.
பரிகாரம் : ஆணியே புடுங்க வேணாம்.அமைதியா உட்கார்ந்து ஆனந்த விகடன் படிங்க.

ராசியான நிறம் : உங்களுக்கு எப்பவுமே வெள்ளை தான்.(சரணாகதி என்று சொல்ல வெட்கமாக இருக்கும்.சமாதானம் சொல்லி சமாளிச்சுக்கலாம்)
ராசியான திசை : ஏதாவது ஒரு மூலை..சும்மா உட்கார்றது எந்த திசையா இருந்தா என்ன 

Thursday, March 3, 2011

எனக்கு பிடித்த பாடல்கள்

எனக்கு மிகவும் பிடித்த பாடல் "தாய் மூகாம்பிகை " படத்தில் வரும் ஜனனி ஜனனி பாடல்.இளையராஜாவின் இன்னிசையில் ஒரு ஆன்மீக ஆனந்தம் என்றே சொல்லலாம்.அந்த பாடலில் வருகின்ற முதியவர் பெயரெல்லாம் தெரியாது.சாட்சாத் அந்த ஆதி சங்கரரே அப்படி அமர்ந்து இருப்பது போலவே தோன்றுகிறது.அவர் கண்களில் அம்பிகையை காண்கின்ற பொழுது வருகின்ற ஒளி அம்மனை நினைத்து உருகி பாடுகின்ற விதம் ஒரு பாடலுக்கு பல லொகேஷன் தேடுகின்ற காலத்தில் ஒரே இடத்தில அமர்ந்து கொண்டு காட்சியாக்கப்பட்ட விதம் என்று ரசிக்கும்படியான அத்தனை அம்சங்கள் இருக்கின்றன இப்பாடலில்.நிமிர்ந்து அமர்ந்து கண்களை மூடி அவர் தியானித்து மந்திரத்தை உச்சரிக்கின்ற அந்த நொடி முதல் அந்த ஆழ்ந்த இசையமுதில் நாமும் மூழ்கித்தான் போகின்றோம்.
மிக மெதுவாக ஆரம்பித்து இறுதியில் அப்படியே சொக்க வைக்கின்ற மகத்தான சக்தி இந்த இசைக்கு.மந்திரத்தை தொடர்ந்து "ஜனனி ஜனனி "என்று ஆரம்பிக்கும் பாருங்கள் 
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ 
ஜகத்தாரணி நீ பரிபூரணி நீ 
ஜகத்தாரணி நீ பரிபூரணி நீ ..
ஒரு மான் மழுவும் சிறு பூந்திரையும் 
சடைவார் குழழும் இடை வாகனமும் 
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே 
நின்ற நாயகியே இடபாகத்திலே 
அப்படியே இறைவனை மனக்கண்ணில் கொண்டு வந்து விடுவார்
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ 
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ..
அடுத்து வரும் அந்த புல்லாங்குழலுக்கு அப்படியே அம்மன் மயங்கி தலையாட்டுவது நம் மனதை பிரதிபலிப்பது போன்று இருக்கும்.
சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும் 
சன்மார்க்கங்களும் சப்த கீதங்களும் 
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும் 
தொழும் பூங்கழழே மலை மாமகளே 
தொழும் பூங்கழழே மலை மாமகளே ..
அலை மாமகள் நீ கலை மாமகள் நீ ..
அலை மாமகள் நீ கலை மாமகள் நீ ..
அவரின் மார்பில் இருந்து கண்களுக்கு கொண்டு செல்வார்கள்.சக்தியானவள் நெஞ்சிலே உறைந்திருப்பதை அப்படியே கண்களுக்கு கொண்டு வந்து ரசித்து லயித்து கிடப்பார்.அப்பப்பா 
நமக்கே தெய்வ தரிசனம் கிட்டியது போன்ற ஒரு உணர்வு.
அவர் பாடுகின்ற பொழுது முப்பெருந்தேவியரும் இணர்ந்து நின்று ரசிப்பார்கள்.அந்த பெரியவரின் பரவசம் நம்மையும் ஆட்கொள்ளும் கொஞ்சம் கண்களை மூடி கொண்டு கேட்டால் 
சொர்ண ரேகையுடன் ஸ்வயம் ஆகி வந்த 
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே 
சொர்ண ரேகையுடன் ஸ்வயம் ஆகி வந்த 
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே ..
பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள் 
பணிந்தேத்துவதும் மணி நேத்திரங்கள் 
ல ஸ்தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள் 
பணிந்தேத்துவதும் மணி நேத்திரங்கள் 
சக்தி பீடமும் நீ...
ஆ..ஆ...ஆ..ஆஅ...ஆ..
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ 
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ ..
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..ஜனனி ஜனனி..ஜனனி..

அப்படியே கைகள் தொழுது  சிரம் தாழ்த்தி வணங்கி கண்களில் நீர் மல்க திறக்கும் பொழுது ...கண் முன்னே ஜனனி நிற்கின்றாள்.
வரும் காலத்தில் ஜனனி என்ற பெயரில் ஒரு பெண் பிரபலமாகவும் கூடும்.
அவள் என் மகளாகவும் இருக்க கூடும்.



Tuesday, March 1, 2011

2011 புத்தாண்டு ராசி பலன்கள்

மேஷம் :

அன்பார்ந்த மே...ஏ ..ஏ..ஷ ராசி நேயர்களே..உங்களுக்கு இந்த வருடம் மேய்ச்சல் ..அதாவது அலைச்சல் மிக அதிகமாக இருக்கும்.

இருப்பினும் உங்கள் ராசி நாதனாகிய செவ்வாய் உங்கள் வாயையே பார்த்து கொண்டே இருப்பதால் அனாவசியமாக செல்கின்ற இடங்களில் வாயை திறக்காமல் இருப்பது நல்லது.இல்லாவிடில் ராசி நாதன் உண்மையிலேயே உங்கள் வாய்க்குள் புகுந்து விடும் விபரீதம் நிகழ கூடும்.உங்களுக்கு இந்த வருடம் மிக சோதனைக்குரிய வருடமாகும்.நீங்கள் தொட்டால் தவிடு பொடியாகும்.பொடி தூளாகும்.தூள் தூள்தூளாய் பறந்து போகும்.செவ்வாய்க்கு பக்கத்து கிரகமான குரு உங்களை குறுகுறு வென்று பார்ப்பதால் ஓரளவிற்கு அடி வாங்குவதில் இருந்து தப்பிப்பீர்கள்.அப்படியே வாங்கினாலும் அது ஊமை காயமாக மாறி காயம் (உடல்) காயத்திலிருந்து தப்பிக்கும்.மொத்தத்தில் மேஷ ராசி நேயர்களுக்கு இந்த வருடம் மோசம் செய்யும் வருடமாகும்.


ராசியான நிறம் : கருப்பு (கண்ணை கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கும் அதனால )


அனுகூலமான திசை : வடமேற்கு மூலை.


ரிஷபம்:

மாடாய் உழைக்கும் ரிஷப ராசி நேயர்களே..

இந்த வருடத்தில் நீங்கள் எங்கே சென்றாலும் முட்டி கொள்வீர்கள்.உங்கள் திறமைக்கு தகுந்த தீனி கிடைப்பது சந்தேகமே.அதனால் கிடைப்பதை வாயில் ம்ம்...வாய்ப்பை பயன்படுத்தி கொள்வது சால சிறந்தது.இத்தனை நாள் துள்ளி திரிந்த காளையான உங்களுக்கு மூக்கணாங்கயிறு போட்டு விடும் காலம் வெகு தொலைவில் இல்லை. எவ்வளவு தான் முட்டி மோதினாலும் திருமண முயற்சிகள் கூடி வருகின்ற வேளையில் தட்டி போய்விடும்.இருப்பினும் வருட இறுதியில் உங்கள் வயிற்றில் பாலை வார்க்க பசு போன்ற சாந்தமான பெண் உங்கள் எதிர் வீட்டில் வாசம் செய்வாள்.பெண் பசுவாக இருந்தாலும் பெற்றவர்கள் புலி போல பாயக்கூடியவர்களாக இருப்பார்கள்.எனவே வெளியில் செல்லும் பொழுது சகுனம் பார்த்து மணி சத்தம் கேட்டு விட்டு செல்வது நல்லது.உங்கள் ராசி நாதனாகிய சுக்கிரன் மூன்றாம் இடத்திலிருந்து நான்காம் இடத்தில் சஞ்சரித்தாலும் ஐந்தாம் இடத்தில் சற்றே நீசம் வாங்கி இருப்பது உங்களுக்கு உகந்தது அல்ல.எனவே உங்கள் வீட்டில் ஐந்தடிக்கு ஒரு சுவரை எழுப்பி பரிகாரமாக தினமும் ஐந்து முறை முட்டிக்கொள்ளவும்.

மொத்தத்தில் இந்த வருடம் உங்களுக்கு சீறிப்பாய்ந்து பல சிக்கல்களை தருகின்ற வருடமாகும்.

ராசியான நிறம் : சிவப்பு (முட்டினால் வெளியே வருகின்ற ரத்தத்தின் நிறம்)
அனுகூலமான திசை: ஈசான மூலை


மிதுனம் :

எந்த பிரச்சனையையும் எளிதாக ஊதித்தள்ளும் மிதுன ராசி நேயர்களே..உங்களுக்கு எதிர் காற்று வீசும் நேரம் இது.காற்றுள்ள பொழுதே தூற்றி கொள் என்ற பழமொழிக்கேற்ப உங்களுக்கு கிடைக்கின்ற "வாய்"ப்பை பயன்படுத்திகொள்ளுங்கள்.மனதில் பல எண்ணங்கள் அலை மோதும்..அலை பாய்கின்ற மனதை "னம் னம் "என்று மிதி'த்து தள்ளுகின்ற பலத்தை மிதுன ராசி நாதனாகிய புதன் தருகின்றார்.உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருக்கின்ற சந்திரன் ஆறாம் இடத்தில் வாடகையின்றி குடியேறுவதால் ஏற்கனவே அங்கே இருக்க கூடிய ராகு கடுப்பாகி வக்ரமாகிறார்.எனவே எங்கேனும் நாகம் தென் பட்டால் அதன் கண் உங்கள் மேல் படுவதற்குள் ஓடி விடவும்.அருகில் இருக்க கூடிய சக கிரகமாகிய கேது கேட்காமலேயே எட்டாம் இடத்தில் புகுவது நல்லதல்ல.எனவே நீங்கள் யார் வீட்டிற்கு சென்றாலும் ஏன் உங்கள் வீட்டிற்கே சென்றாலும் உள்ளே வரலாமா என்று கேட்டே செல்ல வேண்டும்.இல்லாவிடில் கேட் [gate] ஐ இழுத்து மூடி விடுவார்கள்.மொத்தத்தில் இந்த வருடம் உங்களுக்கு மொத்து விழாமல் தப்பித்தாலே பெரிய விஷயம்.

ராசியான நிறம் : பச்சை (என்ன வேணா பண்ணிக்க கிரீன் சிக்னல் கிடைச்சாச்சு )

அனுகூலமான திசை: மேற்கிலிருந்து 

கடகம்: 

கட கட என்று எப்பொழுதும் உருண்டு கொண்டிருக்கும் கடக ராசி நேயர்களே ..மெதுவாக பேசினாலும் "நறுக்" என்று பேசுவதில் வல்லவர் நீங்கள்.உங்கள் கைகளின் பலம் அறிந்தவர்கள் உங்களை தொட பயப்படுவார்கள்.இருப்பினும் பிறர் நலம் கருதி சோப்பு போட்டு கைகளை கழுவுவது நல்லது.கடக ராசி நேயர்கள் இந்த வருடம் கம் என்று இருப்பது உசிதம்.ஏன் எனில் உங்கள் ராசி நாதன் சூரியன் சுட்டெரிக்க வருகிறார்.வெளிச்சம் அதிகமாக வருகின்றது என எண்ணி நெருப்பு இருப்பதை அறியாமல் போய் விழ கூடும்.கவனம் தேவை.யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் ...நாக்க மூக்க ..நாக்க மூக்க தான்.அதாவது நாக்கும் மூக்கும் வெளியே வந்து விடும் ஜாக்கிரதை.

கொல கொலையா முந்திரிக்கா கொழைஞ்சு போச்சு கத்திரிக்கா என்ற ஆன்றோரின் வாக்கிற் கிணங்க பக்குவமாக நடந்து கொள்வது நல்லது.
உங்களுக்கு இந்த வருடம் கட கடவென்று ஓடினாலும் மந்தமாகவே தான் இருக்கும்.

ராசியான நிறம் : பொன்மஞ்சள்(சாணி கலர் ..மிதி வாங்குவீங்க கண்டிப்பா)
அனுகூலமான திசை : வடக்கிலிருந்து கிழக்கா போய் அப்புறம் மேற்கே


   சிம்மம் :

சிம்"மை அடிக்கடி மாற்றி கொண்டே இருக்கும் சிம்ம ராசி நேயர்களே..!
உங்களுக்காகவே நம்பர் மாற்றாமல் நிறுவனத்தை மட்டும் மாற்றி கொள்ளும் வசதி வரபோகின்றது.இதனால் உங்கள் நம்பர் மாற்றும் இம்சையில் இருந்து உங்கள் நண்பர்கள் விடுபடுவார்கள்.என்னதான் உங்கள் ராசி நாதன் சூரியன் பத்தாம் இடத்தில் பற்கள் காட்டி சிரித்தாலும் பதினோராம் இடத்தில் சனி பகவான் இருப்பதை மறந்து உங்களுக்கு கடன் கொடுத்தவர்கள் உங்கள் எண்ணை தெரிந்து கொண்டு இம்சிப்பார்கள் என்பது விதி. இருப்பினும் காலர் ட்யூனை கொல்லர் ட்யூனாக மாற்றி அமைத்தால் விமோச்சனம் உண்டு. நமது நாட்டில் எப்பொழுது மே உள்ள வாஸ்து பிரச்சனையால் அடிக்கடி சிக்னல் கிடைக்காமல் அவதிப்படுவீர்கள். ராகுவும் கேதுவும் ஒண்ணா சஞ்சரிக்கிரதால எல்லாருக்கும் கால் பண்ற உங்களால உங்களுக்கு ஒரு கால் கூட பண்ண முடியாது.ஒருக்கால் நீங்க பண்ண முயற்சி செஞ்சாலும் நோக்கியா ஆண்டவர் துணையோட ரெண்டு சிம் போட்டு முயற்சி பண்ணி பாருங்க.

உங்களுக்கு இந்த வருடம் கால் மேல கால் போட்டு கால் கால் ன்னு காத்த கூடிய யோகமான வருடம்.
ராசியான நிறம் : நீலம் (நீளமா பேசறதால )
அனுகூலமான திசை : டவர் இருக்குற எல்லா பக்கமும்
கன்னி :
கன்னா பின்னா வென சுற்றி அலையும் கன்னி ராசி நேயர்களே..இந்த வருடமும் உங்களுக்கு திருமண யோகம் கூடி வருவது கடினமே..காரணம் மூன்றாம் இடத்திற்கு குரு எதிர்பாராவிதமாக வந்ததால் திருமண தடை ஏற்படும்.(நீங்க எங்க சுத்தினாலும் ஒரு பிகர் கூட செட் ஆகாது)முடிந்தவரை நண்பர்களை உடன் அழைத்து செல்வதை தவிர்ப்பது நல்லது.இல்லாவிடில் காத்திருந்தவருக்குரியதை நேற்று வந்தவர் தட்டி சென்றதாகி விடும் உங்கள் கதை.மின்சாரமே கனவு ஆகி விட்ட கலியுகத்தில் உங்கள் கனவு கூட மின்சாரம் தொட்டது போன்று அதிர்ச்சியை மட்டுமே கொடுக்கும்.இதற்கு பரிகாரம் இரவில் நான்கு சொட்டு கண்ணில் விளக்கெண்ணை விட்டு விட்டு மல்லாக்க படுத்து விட்டத்தை வேடிக்கை பார்க்கவும். கல்விக்கு அடித்தளம் வலிமையாக இடுவீர்கள்.(அரியர் அதிகம் விழுந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை).
எங்கேனும் தவறு செய்து எக்குத்தப்பாக மாட்டிகொண்டு முதுகு கன்னிப்போகும் அளவுக்கு அடி வாங்குகின்ற விபரீத யோகம் இருக்கின்றது.மொத்தத்தில் இந்த வருடம் கடலை விளைச்சல் அதிகம் இன்றி வறண்டு கிடக்கும் வருடம் ஆகும்

ராசியான நிறம்: சிவப்பு (ரெட் சிக்னல் ...தடை தான் )

அனுகூலமான திசை : கன்னி பெண்கள் இருப்பதற்கு எதிர் திசை

துலாம் : 
தும்மி கொண்டே இருக்கும் துலாம் ராசி நேயர்களே..!
உங்கள் ராசி நாதனாகிய சுக்ரன் எட்டிலிருந்து பின் வாங்கி ஏழிற்கு வருவதால் பலமிழந்து காணபடுகிறார்.எனவே உடல் நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது.முடிந்தால் மருத்துவமனைக்கு சென்று குளுக்கோஸ் ஏற்றிக்கொள்ளவும்.
சனி பன்னிரெண்டாமிடத்தில் சஞ்சரிப்பதால் தேவையற்ற வாதங்களை குறைத்துக் கொள்வதுடன், . சுலபமாக நிறைவேற வேண்டிய காரியத்திலும் தாமதம் காணப்படுவதால் அலுவலகத்தில் வீண் விவாதங்களை குறைத்துக் கொண்டு எச்சரிக்கையோடு செயல்படுவது உத்தமம்.உங்களுக்கு ஒரு மண்டலத்திற்கு தண்ணீரில் கண்டம் இருக்கிறது.பக்கத்தில் இருப்பவர்களை பற்றி எல்லாம் கவலைப்படாமல் நாற்ப்பத்திஎட்டு நாட்கள் குளிக்காமல் விரதம் இருக்கவும்.மீறி குளித்தால் ஜல"தோஷம்" ஏற்ப்படும் வாய்ப்பு உண்டு.
நீதி நேர்மை எருமை கருமை என்றெல்லாம் பேசினால் தகாத வார்த்தைகள் பேசி விட்டதாக தேசீய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவீர்கள்.அடக்கி வாசிக்காமல் வாசிக்காமலே அடக்கி வைக்கவும்."பரிகாரமாக ஆடாதடா ஆடாதடா மனிதா ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா என்ற மந்திரத்தை ஏழு முறை சபிக்கவும்.தன்

னாலேயே அடங்கி தூங்குவீர்கள்.இந்த வருடம் உங்களுக்கு சோதனையான வருடமாகும்.
ராசியான நிறம் : கருப்பு (கண்களை கட்டி கொண்டே இருக்க வேண்டும் என்பதால் )
அனுகூலமான திசை : வட தெற்கு


விருச்சிகம் :

வெடுக் வெடுக் என்று வெட்டியும் கொட்டியும் பேசும்
விருச்சிக ராசி நேயர்களே..!
உங்களுக்கு இந்த வருடத்தில் கொட்டோ கொட்டென்று கொட்ட போகின்றது.பூர்வ புண்ணிய பலனை நிர்ணயிக்கும் கேது ஐந்தாம் இடத்தில நிற்கிறார்.முன் ஜென்மத்தில் ஜந்துக்களை அடித்த பாவத்திற்கு தேள் கொட்டலாம்..பூரான் கொட்டலாம்..குழவி கூட கொட்டலாம்.ஏன் வீட்டில் சாப்பிடுவதற்கு என்று வைத்திருந்த குழம்பு கூட கொட்டலாம்.அதனை கண்டு உங்கள் மனைவியும் கொட்டோ கொட்டென்று கொட்ட கூடும்.எனவே கவனம் தேவை.எந்த பொருள் எடுத்தாலும் அதை பிரிச்சு பிரிச்சு மேயும்குணத்தை மாற்றிக்கொள்ளவும்.ஆகாதவர்கள் அதிலே தேளை பிடித்து வைக்க கூடும்.உங்கள் ராசி நாதன் செவ்வாய்க்கு புதன் ஆகாது.எனவே உங்கள் காலண்டரில் செவ்வாய் க்கு அடுத்து உள்ள புதனை எடுத்து விட்டு நேராக வியாழனை வைத்து வெள்ளி வழியாக புதனுக்குள் நுழைவது உங்களுக்கு மாய போக நீக யோகத்தை தரும்.இந்த வருடம் உங்களுக்கு ஊர்ந்து செல்கின்ற வருடம் ஆகும்.ராசியான நிறம் : கருநீலம்
அனுகூலமான திசை : ஜந்துக்கள் இல்லாத திசை