Tuesday, December 20, 2011

இதயங்களின் ராஜா!

 நிறைய பேரு அடிக்கடி சண்டை போட்டுக்கறாங்க தீவிரமா விவாதம் பண்ணிக்கறாங்க.ராஜாவா 
ரகுமானா என்று நான் அந்த விவாதத்திற்குள் எல்லாம் போக விரும்பல .எனக்கு ஏன் பிறரை விட ஒரு படி மேலே ராஜாவைப் பிடித்தது என்று மட்டுமே யோசிக்க விரும்புகிறேன்.இந்தப் பதிவின் நோக்கமும் அதுவே 

ராஜா பத்தி பேசும் முன் என் சுய புராணம் கொஞ்சமா சொல்லிடறேன்.என் ஆத்மார்த்தமான நேசித்தலுக்கு எங்கேனும் காரணம் கிடைக்கலாம் உங்களுக்கு.

நான் சின்ன வயசில் எவரிடமும் அதிகம் பழகாமல் மனதில் பட்டதைப் பேசவே தயங்கும் ரிசர்வ்ட் டைப் என்றால்
நம்புவீர்களா?நம்பனும்:)அம்மா எங்கயும் வெளியே விட மாட்டாங்க வீட்டிற்கு உள்ளேயே இருக்கணும்
.அதிகம் கண்டிப்பு வேற.அண்ணனுக்கு விழும் அடி எல்லாம் பீதியடைந்த கண்களோடு வேடிக்கை பார்த்து ஓரமாய் ஒடுங்குவேன்.வெளியே நட்பு வட்டம் அறவே கிடையாது.அது மாதிரியான தருணங்களில் அண்ணன் அறிமுகப் படுத்தியவர் தான் ராஜா.அறியா வயசிலேயே ஆழப் பதிந்த ஆத்மார்த்தமான நண்பன் .
 என் அண்ணன் இசை ரசனையை சொல்லியே ஆகணும்.மெலடி ,பீட் ரெண்டும் ஒன்றாகக் கூட பதிய மாட்டாங்க.மிகச் சரியான கலவையாக இருக்கும் ஒரு கேசட்டில் பாடல்கள் அனைத்தும்.ஏனோ தானோ என்றல்லாமல் மிக செலெக்டிவ் பாடல்களாக இருக்கும்.ஸ்பீக்கர் ல அலற விட்டுத் தான் பாட்டு போடுவாங்க.கேசட்டில் இடையே நின்று நின்று பாடும்.எந்த இடத்தில் நின்று பாடும் என்பது கூட அத்துப்படி.தேர்ந்தெடுத்துப் பாடல்கள் இருக்குமென்பதால் எது எந்தப் படம் என்று எனக்குத் தெரியாது.யேசுதாஸ் பாடல்கள் பாகம் ஒன்று இரண்டு என்று வச்சிருந்தாங்க.அதிலே அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ பாடலை மிகச் சமீபத்தில்தான் யு ட்யூப் ல பார்த்தேன்.படம் பெயர் கூட அப்போதான் தெரியும்.இது பகல் ல கேக்கணும் இது இரவுல கேக்கணும் ன்னு பிரிச்சு வைப்பாங்க.(அதே பழக்கத்தில் இப்பவும் BEAT ,FEMALE SOLO MALE SOLO ,ROMANTIC DUETS ,MELODIES ன்னு டௌன்லோட் பண்ணதை தனித்தனியா பிரிச்சு வச்சு சிஸ்டம் ஹேங் ஆகிடாதான்னு அண்ணா கிட்ட வாங்கிக் கட்டினது வேற விஷயம் :P ) சின்ன வயசுல வானொலியில் பின்னணிப் பாடகர்கள் அறிவிப்பு செய்யும் பொழுது அவங்க தப்பா சொல்றாங்க படத்துல இது ரஜினி தானே பாடினாரு கமல் தானே பாடினாருன்னு தோணும் :) அப்புறம் அண்ணா சொல்லித் தான் தெரியும் பாடுறது வேற ஆளுங்கன்னு.
இயேசு தாஸ் குரல் மட்டுமே சட்டென்று கண்டு பிடிக்கும் வகையில் இருக்கும்.தனித்துவம் வாய்ந்த குரல் அது.பின்னாளில் எஸ்பிபியும்  மிக அருமையான பாடகர் என்று அறிவு சொன்னாலுமே கூட முதல் இடம் இயேசு தாசிற்குத் தான்.நீண்ட வருடங்கள் பொன் மானே கோபம் ஏனோ யேசுதாஸ் என்றே நினைத்திருந்தேன் ;-O உன்னி மேனன் என்றதும் ஆச்சர்யம்.இவர் மது பாலக்ருஷ்ணன் போன்றோரிடம் யேசுதாஸ் அவர்களின் தாக்கம் அதிகமாகவே இருக்குன்னு தோணுது.
ராஜா இசையமைத்த படங்களை எல்லாம் தேடித் தேடிக் கேட்கும் அளவுக்கு வெறியை இல்லை.இசை நல்லா இருந்தா ரசிப்பேன்.படம் கவிஞர் எல்லாம் ஆராய்ச்சி பண்ணித் தெரிஞ்சுக்க நினைச்சதே கிடையாது.ஏதோ பொழுது போகக் கேக்கிறோம்.அவ்ளோதான்.அதனால் இசை ஞானம் எல்லாம் அரைகுறைதான்.இணையத்தில் ராஜா ரசிகர்களைப் பார்த்தபின்பு தான் மலைத்தே விட்டேன்.எவ்ளோ தகவல்கள் தெரிஞ்சு வச்சிருக்காங்க.அவங்க முன்னாடி நிச்சயம் நான் மிக மிகச் சாதாரணம்தான்.பாட்டில் உள்ள நுணுக்கங்கள் என்ன என்பது தெரியாமலே ரசிப்பதற்கும் முழுவதும் அறிந்து சிலாகிப்பதற்கும் வித்தியாசம் உணர முடிந்தது.ரவி ஆதித்யா,றேடியோஸ்பதி,ராஜாரசிகன் என்னைக் கவர்ந்த தளங்கள்.
மனதிற்குப் பிடித்த விசயங்களில் முழுப் பைத்தியமா இருக்கணும் அதிலே அதிக பட்ச அறிவைப் பெற என்பது இணையதள ராஜா ரசிகர்களிடம் தாமதமாக அறிந்து கொண்டேன்.
கேட்காமல் விட்ட ராஜாவின் பாடல்கள் யாவும் புதுப் பாடல்கள் போலல்லாமல் சிரமமின்றி சட்டென்று மனதில் ஒட்டிக் கொள்கின்றன.தென்றல் என்னை முத்தமிட்டது இதழில் ...பாடல் சமீபத்தில் தான் கேட்டுப் பிடித்தது. 
அப்பாவின் கிராமத்திற்குப் போய்விட்டு மதுரை வரும் தருணங்களில் எல்லாம் பேருந்தில் இளையராஜா ஹிட்ஸ் கேட்டுக் கொண்டே திரும்பி வருவோம்.அந்த நேரம் எப்படிப் போகும் என்றே தெரியாது.அப்பாவே ரசித்ததால் சிந்து பைரவி அதிகம் பிடிக்கும் எனக்கு.
மண்ணில் இந்தக் காதலன்றி பாடலில் ஆரம்பத்தில் வரும் புல்லாங்குழலே சொல்லும் காற்றில் காகிதம் பறப்பதை.முத்துமணி மாலை ஆரம்ப இசையும் அப்படித்தான் முத்துமணி மாலை உருண்டோடுவதை கண் முன்னால் படம் பிடித்து காட்டும்."சொந்தம் வந்தது வந்தது ",பொன் வானம் பன்னீர் தூவும் இந்நேரம் " போன்ற பாடல்களை பார்க்காமலே கற்பனை செய்த விதமும் படத்தில் முதன் முதலில் பார்த்த பொழுதும் அப்படியே பிரம்மித்துப் போயிற்று.ராஜாவிடம் காட்சிப் படுத்தி விட்டு இசை அமைக்கச் சொன்னார்களா அல்லது அவர் இசைக்குத் தகுந்தாற் போல பாடல் காட்சிகளைப் படமாக்கினார்களா என்று பல முறை குழம்பி இருக்கின்றேன்.எப்படியாயினும் வெளிநாடு லொகேஷன் இல்லாமல் ,புது வித நடன அசைவுகள் பேர்வழி என்றோ இல்லாமல் அந்தக் காலத்தில் இயல்பாக நம் ஊர்களில் எடுக்கப்பட்ட பாடல்களே வெகுவாகக் கவர்ந்திருக்கின்றன இன்றளவும்.மதுர மரிக் கொழுந்து வாசம்,நிக்கட்டுமா போகட்டுமா இப்படி பாடல்களை அடுக்கிகிட்டே போகலாம்.ராஜா ஒரு முறை சொன்னது "இசையைக் கேட்கும் பொழுதே காட்சியைப் படம் பிடித்து அதை அப்படியே உணர வைக்க வேண்டும் "என்று.அதை அப்படியே பல பாடல்களில் பிரதிபலித்திருப்பார்.
 
ஒரு படத்தின் கதை மட்டும் நன்றாக அமைந்து விட்டால் அதற்கு இசை ஞானியின் இசை பலமாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமின்றி நிரூபித்த படங்கள் நிறைய மௌன ராகம்,சிந்து பைரவி ,முதல் மரியாதை ,சேது என வரிசையாக பல வெற்றிப் படங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
எத்தனை துன்பங்களையும் அந்த நேரத்தில் மறக்க மாமருந்தாக ராஜ இசை உதவி இருக்கின்றது என்றால் அது மிகையல்ல.ஒரு தாயைப்போல மடியில் வைத்து மெல்லத் தலை வருடி அன்பைச் சொல்லும் பாடல்களாகட்டும் காதலனின் பிரியத்தைச் சொல்லும் காதல் பாடல்களாகட்டும் எத்தனை அவர் பெருமை சொல்ல?எல்லா நேரமும் நண்பர்கள் அருகில் இருக்க முடியாது.வேதனையான தருணங்களில் பெரும்பாலும் நான் தோள் சாயும் நண்பன் ராஜா மட்டுமே.அப்படியே அள்ளி அணைத்துக் கொள்ளும் நண்பன் ,காதலன், தாயுமானவன் எத்தனைப் பேர் வேண்டுமானாலும் வைப்பேன் மொத்தத்தில் இசைக்கு இறைவன். 
 எண்பதுகளில் பல நல்ல பாடல்கள் வேறு இசையமைப்பாளர்கள் இசைத்திருந்த பொழுதும் அதுவும் ராஜாகவே இருக்கக் கூடும் என்று அனிச்சையாகவே பலரும் நினைத்திருக்கக் கூடும்.ராஜாவின் இசையில் இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை அது.
அவர் இசை அறிவை எடுத்துச் சொல்லும் அளவுக்கு எனக்கு விஷய ஞானம் இல்லை.அதே போல ராஜாவை மோசமாக விமர்சிக்கவும் எவருக்கும் அருகதை இல்லை.காலிக் குடங்களின் சத்தமும் குறை குடங்களின் கூத்தாட்டமும் மிகுந்த உலகில் தலையில் விஷயம் உள்ள ஒருவர் தலைக்கனமாக இருந்தால் கூட தவறே இல்லை.
என்னைப் போன்ற பல ரசிகர்களின் எண்ண அலைகள், நிழலாய் இருந்து அவரைத் தெம்பூட்டிய அவரது துணைவியாரின் பிரிவில் இருந்து அவரை ஆற்ற சென்றடையட்டும் என்பதே என் பிரார்த்தனை.

Wednesday, December 14, 2011

வாழ்க்கை!

ஒரு மனிதனுக்கு மரண பயம் வந்துட்டா எப்படி எல்லாம் நடந்துகொள்ளக் கூடும் என்று ஒரு உறவினர் மூலம் காண்கிறேன் வாழ்ந்த காலத்தில் எல்லாம் சுயநலமே பெரிதாகக் கருதி அத்தனை பேரையும் துச்சமென அவமதித்தவர்.அவர் நடவடிக்கை பிடிக்காமல் உடன்பிறப்புகள் சொந்தங்கள் அத்தனையும் ஒதுங்கிக் கொண்டன.இப்பொழுது தேடிச் சென்று ஒவ்வொரிடமும் வலிய பேசுகிறார்.சண்டை போட்ட உடன்பிறப்புகளிடம் கண்ணீருடன் உரையாடுகிறார்.ஆனா அவர் செய்த அநியாயங்கள் மனதைச் சுட அவரை முழுமையாக நம்ப மறுக்கிறார்கள் உடன்பிறப்புகள்.

என் அம்மாவிடம் வந்து சித்தி உங்களைப் பார்க்கணும் போல இருந்தது என்று வெகு நேரம் பேசிவிட்டுச் சென்ற பொழுது கூட ஏதோ காரியம் ஆக வேண்டியிருக்கு போல அதான் வந்திருக்கிறார் என்று ஒதுங்கிக் கொண்டேன் நானும் .அவர் சென்ற பின்பு அம்மா வருத்ததுடன் சொல்லியே தெரியும்.அம்மா சட்டென்று நம்புபவர் என்பதால் அப்பவும் நான் நம்பல ஆனா தொடர்ச்சியான அவர் நடவடிக்கைகள் அவர் நிஜமாகவே உள்ளூர வருத்தம் கொண்டு அலைகிறார் என்றே புரிந்தது.இதயம் மிகவும் பலவீனப்பட்டு பிரச்சனை செய்து கொண்டிருக்கின்றது போல.அத்தனை பேரின் ஒட்டுமொத்த வெறுப்பும் நெஞ்சைச் சுடுகிறது போலும்..அவர் உடன்பிறப்புகளிடம் அம்மா தான் பேசுகிறார் முடிந்த அளவு பேசுங்கப்பா பாவம் அவன் என்று.மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை  என்பது வாழ்க்கைக்கும் பொருந்தும் எதுக்கு அவ்ளோ வேதனைப் படுத்தணும் இன்னைக்கு எல்லாம் நினைச்சு வருத்தப் படணும்?ஆனாலும் இந்த அளவாவது உணர்கின்றாரே ஆச்சர்யம் தான் எங்களுக்கு.(எங்கள் குடும்பத்திலும் அத்தனை இடைஞ்சல்கள் முடிந்தவரை கொடுத்திருக்கிறார் இருப்பினும் மன்னித்தது எங்கள் தாய் மனம்) ஆனாலும் அம்மாவைப் போல உருகாமல் எங்களால் தள்ளி நின்று அனுதாபப்படுவது தவிர வேறு எதுவும் செய்ய முடியல.

இப்பவும் அவரை உறவுமுறை சொல்லி அழைக்க கூட மனம் வரல ஹ்ம்ம்..வாழ்க்கையில் எவ்வளவு இருக்கு என்பதற்கும் இவ்வளவு தான் வாழ்க்கை என்பதற்கும் இடைப்பட்டது அந்த நபருடைய வாழ்க்கை.முடிந்தவரை இனி செல்லுகின்ற நாட்களில் பிரியமானவர்களை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்று மட்டும் தோன்றுகிறது..

Thursday, December 1, 2011

அம்மா!

அம்மா சமையலைச் சிலாகிக்கும் பாக்கியம் நமக்கு மட்டும்தான் அடுத்த தலைமுறை வீட்டில் வேலைபார்ப்பவர்களைப் பற்றிச் சொல்லக் கூடும் ..
***************************************************************************
உருக்கமா ஒரு பொய் சொல்லிவிட்டால் உடனே நம்பிவிட அம்மாவால்
மட்டுமே முடியும்
******************
பிள்ளைகளிடம் விரும்பி ஏமாறுபவர்கள் ஏமாறுவதை விரும்புபவர்கள் 
அம்மா 
*******
நலமில்லை என பொய்
சொன்னாலேபார்க்காமல்  நம்பிவிடும் அம்மா
நலமாகிவிட்டது என எத்தனை முறை
சொன்னாலும் கண்களால்
அளவெடுத்துக்கொண்டே இருக்கின்றாள்..

***********************************************
  நாலு தடவை சொல்லி விட்டு ஐந்தாவது தடவை மனசில்லாமல் தானே
அந்த வேலையைச் செய்துவிடுவது அம்மாவாகத் தானிருக்க முடியும்
*************************************************************************
சிறு வயதில் அம்மா சீயக்காய் தேய்த்துப் பராமரித்தவரை
கேசம் நன்றாகத் தானிருந்தது #கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் 
**********************************************************************
தலையில் துண்டு கட்டிக் கொண்டு வேலையில் தீவிரம் காட்டும்
வெள்ளிக் கிழமை தேவதைகள் #அம்மா 
*****************************************
அப்பாவின் சுடு சொற்களை விடப்
பெரிதாக அம்மாவின் அடிகள் பாதிப்பதே இல்லை 
***************************************************
சாப்பிடப் பிடிக்காததை உடனே எடுத்துப் போட
அம்மாவின் தட்டு எப்பொழுதும் அருகில் தேவைப்படுகின்றது 
வேண்டாமென ஒதுக்கிய பின்பே தான் உண்ணும் அம்மா 
***********************************************************
அம்மா உணவை ஊட்டுவிட்ட காலங்களில் உணவின் சுவை
இன்னமும் அதிகமாக இருந்தது #ஏக்கம் 
*****************************************
எளிமையாகச் சாப்பிடுவது நல்லது 
அம்மா ஊரில் இல்லாத தருணங்களில் மட்டும்  
ரொம்ப நேரம் யார் சமைக்கிறது :)))
*********************************
பெரும்பாலும் அம்மாவே பெண் குழந்தைகளை புகுந்த வீட்டில் 
எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று மனதளவில் தயார்
செய்து விடுகின்றார்கள் 
*************************


 










அனாவசியப் பொங்கல்களும் அத்தியாவசியப் பொங்கல்களும் !


நடிகர் கார்த்தி என்ன சொன்னார் அது எப்படி சொல்லலாம் என தமிழ்ச் சமூகம் பொங்கிக் கொண்டிருக்கின்றது.அப்படி என்ன சொல்லிட்டாரு மனுஷன் தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்களை அதிகம் பிடிக்கும்.FRAME க்கு FRAME கைதட்டல் கிடைக்கும் இது அங்க இல்லன்னு சொன்னார்.ஒருத்தனை இன்னொருத்தனை விட ரொம்பப் பிடிக்கும்னா இன்னொருத்தன் ரொம்பக் கேவலமானவன்னு தானா அர்த்தம் கற்பிச்சுக்கறது.இதுல தமிழர்களை இழிவு படுத்தி எதாச்சும் இருக்கிறதா எனக்குத் தெரியல.மும்பைல இருந்து வர்ற நடிகைகள் எல்லாம் என்க்கு மும்பை FANS விட டமில் FANS ரொம்போ புட்ச்சிர்குது.ன்னு யாராச்சும் மண்டையை ஆட்டி ஆட்டிச் சொன்னா உடனே அதை நம்புற அதே ஆளுங்க தான் இதையும் நம்பிருப்பாங்க.


போற இடத்தில பொழைப்புக்கு தகுந்தமாதிரி பொய்யா பேசுறவங்க சினிமாக்காரங்க மட்டும் தானா?ஏன் சராசரி ஆட்கள் இல்லையா?.சரி அதுல உண்மை பொய் ஆராய்வது அப்புறம் இருக்கட்டும்.இதுக்காக பொங்கற தமிழ் உணர்வாளர்களே இன்னும் நிறைய இருக்கு இதை விட ஜாஸ்தி பொங்க.அதையெல்லாம் ஒப்பிடும் பொழுது இது சப்பை விஷயம்.தமிழ் நாட்டுப் பொண்ணுதான் ரமலத்.முடிஞ்சவரை போராடுச்சு.அதுக்காக நயன்தாரா படம் பார்க்கிறதை நிறுத்திட்டீங்களா? 
முல்லைப் பெரியாறுன்னு  ஒரு விஷயம் ஓடிகிட்டு இருக்கு பாஸ் ஒட்டுமொத்த கேரளாவும் முழுப் பூசணிக்காயை இல்ல ஒரு அணையவே சோத்துல மறைக்கிறாங்க.அங்க கொஞ்சம் பொங்கறது.ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் ன்னு ஆரம்பிச்சதோட சரி அப்புறம் அது என்ன ஆச்சுன்னே தெரியல அதுக்கு கொஞ்சம் பொங்கறது .இதையெல்லாம் விட்டுட்டு எதுக்கோ எல்லாம் பொங்கறீங்க .நடிகனை கேவலமாகவும் பார்க்கவேணாம்.பால் குடம் எடுத்து உயர்த்தியும் பார்க்க வேணாம்.ஒரு தொழில் பண்ற நம் போலவே குறைகள் உள்ள ஒரு சராசரி மனுஷன் தான் நடிகனும்.ஏதோ படம் பார்த்தோமா நல்லா இருக்கு இல்லன்னு சொல்லிட்டுப் போனோமா ன்னு இல்லாம மாறுபட்ட ரசனை உள்ளவர் எந்த நேரம் பார்த்தாலும் குழாயடிச் 
சண்டையை விடக் கேவலமா சண்டை போடுறதை இணையத்தில் தான் அதிகம் பார்க்கிறேன்.படிப்பு என்பது சபை நாகரிகத்தையும் கற்றுக் கொடுப்பதாக அமைய வேண்டும்.இல்லாட்டி அந்தப் படிப்பு வீண்தான்.தொழில்நுட்பங்களை வக்கிரங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள்.சூர்யா ஒரு ஃ பேர்னஸ் க்ரீம் விளம்பரத்தில் நடிக்கவும் அதற்கும் இதே போல சவுண்டு.ஒரு நடிகன் கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் நடிப்பது மட்டுமே அவன் வேலை.எய்தவன் இருக்க அம்பை நோவது ஏன்?காலம் காலமாக இதே போல ஃ பேர்னஸ் க்ரீம் விளம்பரம் வரலையா?அப்போ எல்லாம் எங்க போனாங்க?அவங்க பிரச்சனை அந்த விளம்பரப் படத்தின் மீது அல்ல சூர்யா மீது.சச்சின் பெப்சிக்கு நடிச்சப்போ சச்சினையும் அப்போ திட்டலாமா?ஒரு ப்ளாக் ல பார்த்தேன் காசு கொடுத்தா அவங்க அப்பன் கூட நடிப்பார் கண்ட விளம்பரத்தில் என்று படு அசிங்கமான வார்த்தைகளை கமென்ட் ல உபயோகப்படுத்தி இருந்தார்கள்.சிவகுமாரைச் சொல்லும் முன் "இது ராஜபாட்டை அல்ல"படிச்சுட்டு பேசணும்.காதலை எதிர்க்கும் அப்பா ரோல் அது இதுன்னு நிறைய பண்ணியாச்சு.புதுசா ஒண்ணுமில்ல நடிக்கன்னு நடிப்பதையே மனிதர் நிறுத்தி வச்சிருக்கார்.பணம் மட்டும் தான் குறிக்கோள் என்றால் பண்றதுக்கு ரோல் இல்லாமலா போகும்?இதையெல்லாம் சொல்வதால் தீவிர ரசிகை என்று எனக்கும் முத்திரை குத்திடாதீங்க.
கேவலமாப் பேசுறதைக் கண்டிக்கிறேன் பேர்வழின்னு அதைவிடக் கேவலமா பேசி நோக்கத்தையே சிதைப்பதில் தான் தீவிரம் காட்டுகிறார்கள்.அஜித் பிரியாணி போட்டார் ன்னு ஒரு மேக் அப் மேன் சொன்னதை சொன்னா உடனே வினவுல அதுக்கு ஒன்றை முழத்துக்கு கட்டுரை எழுதறாங்க.பிரியாணி போட்டப்போ அஜித் கூட அவ்ளோ யோசிச்சு இருக்கமாட்டாரு.விஜய் படத்துக்கு பாடை கட்டி FB ல போட்டோ அதுக்கு 657 LIKES .எவ்வளவு வக்கிரம் பிடித்தவர்கள்?இதுல அரசியல்வாதியை சொல்றதுல எங்க இருந்து இவங்களுக்குத் தகுதி வருது?கிண்டல் அடிக்கலாம் படம் சரியில்லாட்டி ஆனா இருபத்திநாலு மணி நேரமும் அதே பொழைப்பா திரியரவங்களைப் பார்த்தா அருவெறுப்பா இருக்கு.வீட்ல பெத்தவங்க அடிச்சு வளர்த்திருக்கணும் இது மாதிரி மறை கழண்ட கேசுங்களை எல்லாம்.
சினிமா மீது ஆர்வம் இருக்கலாம் ஆனா மோகம் அனாவசியம்.அதனால் தான் சினிமாக்காரங்க அரசியல் க்கு படையெடுத்து வராங்க.சினிமாத்துறையில் இருந்து அரசியலுக்கு வரக் கூடாது எனச் சொல்ல வரல.ஆனா ஸ்க்ரீன் ல கைதட்டறாங்க நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் இருப்போம் ன்னு ஈசியா நம்ப வைக்க அதை பயன்படுத்திக்காம இருக்கணும் அவ்ளோதான்.டிவிட்டர்லையே பார்த்திருக்கேன் ஹன்சிகா பல்லு விளக்கினியா ஜெனிலியா குளிச்சியா டாப்சீ ரொம்ப பிடிக்கும் ப்ளீஸ் இதை RT பண்ணுங்க நான் உங்க தீவிர ரசிகன் இது போன்ற டெம்ப்ளேட் டயலாக் எல்லாம்.என்னைப் பொறுத்தவரை நான் பின்தொடர்பவர்களை விட அருமையா எந்தப் பிரபலமும் எழுதுவது இல்லை பல விசயங்களிலும் பட்டையை கிளப்பறாங்க.அதனால் நான் எந்தப் பிரபலத்தையும் தொடர்வது இல்லை.எனக்குப் பிடிச்ச பிரபலங்களைப் பார்த்தா நானும் சந்தோசப்படுவேன்.அதற்காகத் தலையில் தூக்கி வைத்து என் பெற்றோர்களை விட  பெருசா அவங்களைக் கொண்டாட மாட்டேன்.
புகழ் என்ற வெளிச்சம் இருப்பதாலேயே அங்க நடப்பதெல்லாம் பெரிய விசயமாகவும் அந்த வெளிச்சம் இல்லாத காரணத்தினாலேயே பலர் உத்தம வேடமிட்டு அலைகிறார்கள் யதார்த்த வாழ்வில்.பிரச்னையை எதிர்கொள்ள முடியாம தற்கொலை பண்ணிகிட்டா ஐயோ பாவம் அந்த நடிகைன்னு பரிதாபப்படும் அதே வாய் சமாளிச்சு வேறு திருமணம் போனா ரெண்டு கல்யாணம் பண்ணவன்னு நக்கல் அடிக்கவும் செய்யுது.மாற்றுக் கருத்துகளுக்கு பழிவாங்கும் மனோபாவம் சாதாரண சராசரி மனிதர்கள் கிட்டேயே இருக்கு.அதிகாரத்தில் இருப்பவர்களை குறை சொல்லி என்ன செய்ய? ஒருவரை மிகக் கேவலமாக விமர்சனம் செய்யும் பொழுது அது அவங்களுக்கும் பொருந்திப் போயிடுதுன்னு யாராச்சும் எடுத்துச் சொன்னாத் தேவலை.நடிகைதானே கவர்ச்சியா நடிச்சா அப்படித்தான் பேசுவோம்ன்னு படு ஆபாசமா கமென்ட் கொடுக்கிறவங்க எல்லாம் பெண்ணுரிமை பேசும் பொழுது இயல்புக்குப் பொருந்தாத  ஒன்றாகிவிடுகின்றது.புகழ் பெற வேண்டும் என்றால் பிரபலமாக இருப்பவரை அல்லது இருக்கின்ற விஷயத்தை எதிர்த்தால் போதுமானது என்று பலர் மனதில் அப்பட்டமா பதிஞ்சுருச்சு.இன்னொரு கூட்டம் எதையாச்சும் ஆதரிக்கனும் இல்லாட்டி எதிர்க்கணும் அப்படி செய்யாட்டி தமிழினத் துரோகி ன்னு பட்டம் கொடுத்திடறாங்க.
குஷ்பூ குட்டைப் பாவாடை போடுதா நமீதா நெக்லஸ் போடுதான்னு கவனிச்சு ஆர்ப்பாட்டம் பண்றதுக்குன்னே ஒரு கூட்டம்.நியாயமான விசயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது தவறு இல்லை.ஆனா தன் இருப்பைக் காட்டிக் கொள்ள பதினைந்து நிமிடப் புகழ் பெற பிரபலங்களைப் பயன்படுத்திக் கொள்(ல்)பவர்களே அதிகமாகிவிட்டதால் எது நியாயம் எனத் தெரியாமலே போயிடுது.
எந்த ஒரு விசயத்தையும் அலசி ஆராயாம கருத்து சொல்வது தேச வியாதி போல.அதுக்கும் எதுவுமே பேசாம அமைதியா இருந்திடலாம் ...DOT 

Tuesday, November 29, 2011

பெருமூச்சு ...6!

ஆகச் சிறந்த மெத்தை
உன் மார்பு..
************
உன் நினைவுகள்
சம்மணமிட்டு அமர்ந்துகொள்கின்றன
என் இதழ்களில் ...
****************
நீ புத்தகம் படிக்கின்ற பொழுதெல்லாம்
உன்னிரு கைகளுக்குள் புகுந்து
உன் உறுதியையும் 
படித்துவிட ஆசை எனக்கு
ம்ம்ம்ம் ..படி..dடா.. பார்க்கலாம் ;)
*************************************  
அகராதி "பிடித்தவன் நீ 
என் நினைவலைகளில்
என்றுமே நீங்கா இ (அ)டம் 
பிடித்தலைகிறாய்
******************************
எனை அணைக்கும் பொழுதெல்லாம்
என் வெட்கத்தையும் சேர்த்தே
அணைத்து விடுகின்றாய் ;)
***************************
வேண்டாம் தள்ளிப் போ

என்ற முணுமுணுப்புகள் எல்லாம்
காற்றில் எங்கோ தூர
ஒலித்துக் கரைகின்றன
உன் வெற்றிச் சிரிப்பு நெருங்கி வந்தபின்..
*******************************************
என் மறுப்புகள் யாவற்றையும்
அழைப்புகளாய் மாற்றும் 
வித்தை கற்றவன் நீ ..! 
*******************************
என் நாணம் தலை கவிழ்ந்தபின் 
நிமிர்ந்தெழுகின்றதென் மோகம் 
********************************************
காது மடல் கவ்வி 
நீ சொல்லும் மௌனங்களை 
சத்தமாய் வா(இம்)சித்துக் 
கொண்டிருக்கின்றன அங்கங்கள் யாவும்
நி..று..த்..து..
****************
உன்னுடனான ஊடல்
பொழுதுகளின் தவிப்புகளையும்
உன் தோள்களையேத்
தாங்க இறைஞ்சும் 
வெட்கம் கெட்ட மனம்
*******************************

  



Tuesday, November 8, 2011

அண்ணா நூலகம்!

ஏற்கனவே ஒரு சில முறை சென்னை சென்றிருந்தாலும் இம்முறை சென்றதில் ஆழப் பதிந்தது அண்ணா நூலகம்.

அண்ணா பல்கலைக் கழகம் அருகில் மாணவர்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியில் ஏதுவாக அமையப்பெற்றிருக்கின்றது.நுழைவாயிலில் அண்ணாந்து பார்த்தாலே பிரமிக்க வைக்கின்றது அண்ணா நூலகம் அதன் கட்டிட அமைப்பில்.அமர்ந்த நிலையில் புத்தகம் படித்துக் கொண்டே வரவேற்கின்றார் அண்ணா.

வெயில் கொடுமை தெரியாதிருக்க சுற்றி சிறிய அளவில் நீர்நிலை.அளவாக அழகாக இருக்கின்றது.புத்தக வடிவில் கல்வெட்டு திறந்து வைத்தவர் பெயருடன்.கைப்பை எதுவும் அனுமதி இல்லை உள்ளே எடுத்துச் செல்ல.முந்தி கேமரா எடுத்துச் செல்ல அனுமதித்தார்களாம் புகைப்படம் எடுத்துக் கொள்ள.தற்பொழுது மாற்றுவதால் (?) எதிர்ப்பாளர்களைச் சமாளிக்க ஏக கெடுபிடி.அனுமதி இல்லை.


முழுக்க முழுக்க அனைத்துப் பகுதிகளும் குளிரூட்டப்பட்டு இருக்கின்றது.சொந்த புத்தகங்களை எடுத்துச் சென்று கூட படிப்பதற்கென்று தனி இடம் தரைத் தளத்தில்.எட்டுத் தளங்கள் ஒவ்வொரு தளத்திற்கும் செல்ல இரண்டு LIFT .ஒரு தளத்தை இரண்டாகப் பிரித்து இருக்கின்றார்கள்.கீழேயே எந்த தளத்தில் எது சம்பந்தமான புத்தகங்கள் இருக்கின்றன என்று எழுதி ஒட்டி வைத்திருக்கின்றார்கள்.அலைய அவசியம் இன்றி நேராக அங்கேயே சென்று விடலாம்.ஒவ்வொரு தளத்திலும் அந்த தளத்தில் உள்ள புத்தகங்கள் எவை சம்பந்தப் பட்டவை என்று நுழைவாயிலில் ஒட்டி இருக்கின்றார்கள்.அதே போல உள்ளே சென்றாலும் இரண்டு பக்கம் உள்ள ஒரு அடுக்கில் எந்த எந்த எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள் எந்த பக்கத்தில்  இருக்கின்றன என்பதையும் தெளிவாக எழுதி ஒட்டி இருக்கின்றார்கள்.குழந்தைகளுக்கென்று பிரத்யேகத் தளம்.ஒவ்வொரு தளத்திலும் உள்ள இரண்டு பிரிவுகளிலும் நுழைவாயிலில் பணிப் பெண்கள் சீருடையணிந்து அமர்ந்திருக்கின்றார்கள் தகவல் அளிக்க.ஒவ்வொரு பிரிவிலும் ஏகப்பட்ட SOFA மற்றும் படிப்பதற்கு எதுவாக டேபிள் நாற்காலிகள் இணைந்தும்.


நான் சென்ற பொழுது அவ்வளவு அமைதி குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் என்பார்களே அந்த அளவுக்கு.உள்ளேயும் ஆட்கள் கேட்கின்ற உதவியைச் செய்ய.(மற்ற அரசு அலவலகங்கள் போல் அன்றி கனிவோடு இயன்றவரை உதவி செய்கின்றார்கள்).அத்தனையும் புத்தம் புது புத்தகங்கள்.ஒரே புத்தகம் பலருக்கும் தேவைப்படக் கூடும் ஆதலால் ஒரே தலைப்புள்ள புத்தகம் குறைந்தது ஐந்தாவது இருக்கின்றது. 
ஒட்டிலே உலை வைப்பது என்று சொல்வார்கள்.அதில் கலைஞர் வல்லவர்.அங்கேயும் திமுக வரலாறு புத்தகங்கள் சமச்சீர் கல்வியில் அவர் வரலாறைச் சேர்த்தது போல
நான் சென்ற பொழுது வேறு ஒரு பக்கம் சூப்பர் சிங்கர் ஜூனியர் மூன்றிற்கான தேர்வும் நடந்து கொண்டிருந்தது.அதனால் நூலகத்தில் குட்டீஸ் கூட்டம் அதிகமாக இருந்தது.ஞாயிறு என்பதால் நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமாகவே வந்தது.


உட்புற அமைப்பு செயல்படும் விதம் பார்த்த பொழுதுதான் புரிந்தது அம்மா நூலகத்தை மாற்றியே தீருவேன் என்று அடம் பிடிக்கக் காரணம் எங்கே சென்ற ஆட்சியின் அழியா சாதனையாக இடம் பெற்று விடுமோ என்ற பதட்டம்.

எதற்கு இவ்வளவு பெரிய இடம் அடைத்துக் கொண்டு என்று கேட்பவர்கள் மனசாட்சி அற்றவர்கள்.எத்தனையோ நூலகங்கள் பயன்படாமல் மேம்படுத்தப் படாமல் கிடக்கின்றன இது மட்டும் என்ன என்பவர்களுக்கு எத்தனையோ அரசு மருத்துவமனைகள் மிகக் கேவலமாக இருக்கின்றன எத்தனையோ அவசியமான இடங்களில் வைக்கவேண்டிய தேவை இருந்தும் அங்கெல்லாம் மருத்துவ மனை கட்டவும் மேம்படுத்தவும் துப்பில்லாத அரசு எதற்கு இதை மட்டும் மாற்றியே தீருவோம் என்று அடம்பிடிக்க வேண்டும்?
யார் நூலகத்தை அதிகம் பயன்படுத்துகின்றார்கள் மாற்றுவதால் என்ன நட்டம் என்றும் கேள்வி எழுப்புகின்றது ஒரு கூட்டம்.பயன்படுத்தாமல் இருப்பது நம் தவறே அன்றி அது பயனில்லை என்று அறிவிப்பது அறிவிலித்தனம் என ஏன் புரிந்து கொள்ள மறுக்கின்றார்கள்?அங்க புத்தகமே இல்ல மச்சி சும்மா வேடிக்கை தான் பார்த்துட்டு வந்தேன் என்றும் யாரோ ஒருவர் எழுதி இருந்ததைப் பார்த்தேன்.அத்தனை புத்தகங்களையும் எட்டு தளங்களிலும் பிரித்து அடுக்கவே ஒரு வருடம் ஆகிற்றாம்.
 ஐந்து லட்சம் புத்தகங்கள் முடிந்தவரை சேகரித்து வைத்திருக்கின்றார்கள்.ஒன்றரை லட்சம் புத்தகம் கூட வைக்க இடம் இல்லாத இடத்தில் மாற்றப் போவதாக செய்தி வெளியிடுகிறார்கள்.ஐந்து ஒன்றரையாக மாறி விட்டால் நிறைய வந்துவிடுமோ என்ன கணக்கு இது? 
சரி என்று வாதிடுகிறார்கள் அம்மா ஆதரவாளர்கள்.
நூலகம் மூடப்படுவது(என்னைப் பொறுத்தவரை அப்படித் தான் சொல்வேன்) சரியா தவறா அதன் நன்மை தீமை என்பதை சீர்தூக்கிப் பார்ப்பதை விடுத்து இதுதான் சாக்கு என்று உடன்பிறப்புகள் மிகக் கேவலமாக முதல்வரை ஜாதி சொல்லி விமர்சிப்பதும் மோசமாகப் பேசுவதும் நோக்கத்தை சிதைக்காதா?எரியிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் ஆகாதா?அதே போல பிடித்தமான தலைவராகவே இருந்தாலும் அடுத்தவன் வீட்டில் தானே தீ எரிகிறது என்று கைகொட்டிச் சிரிப்பதும் அதற்கு ஆதரவாக கண்ணை மூடிக் கொண்டு வாதிடுவதும் அந்தத் தீ நம்மைச் சுடும் தூரம் அதிகம் இல்லை என்பதை உணராதவர்களாகவே தோன்றுகின்றது.ஆளும் கட்சிக் காரர்களாகவே இருக்கட்டும்.யதார்த்தமாய் ஒரு கேள்வி முன்வைக்கிறேன்.பொது நலத்தை விடுங்க.மாய்ந்து மாய்ந்து படித்து ஏகப்பட்ட தேர்வு எழுதி இப்படி ஒரு இடத்தில் நல்லதாக ஒரு அரசு வேலை கிடைத்துவிட்ட திருப்தியில் இருக்கும் போது எந்நேரம் வேண்டுமானாலும் பறிக்கப் படலாம் அல்லது ஆட்குறைப்பு செய்யப் பட்டால் அதில் நாமும் ஒருவராக இருப்போமோ என்ற பதட்டநிலை உங்களுக்கு வருமா வராதா?வெளியே நின்று கொண்டு என்ன வேணாலும் பேசிடலாம்.தனக்கென்று வந்தால் தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்.

என் தந்தை புத்தகம் வாங்கக் கூட வழியின்றி நூலகத்தில் படித்து வந்தவர்தான்.அவருக்குப் பிறகு அவர் சந்ததிகள் படித்திருக்கின்றோம்.இதை விட அதன் பயன்பாட்டிற்கு என்ன சான்று வேண்டும்?அப்படியே மாற்றம் மட்டுமே கவலைக்கு இடமில்லை என்று நம்புபவர்களை எண்ணி நகைப்பதா பரிதாபப்படுவதா என்று தெரியவில்லை.ஒவ்வொரு ஆட்சி மாற்றமும் முன்பு ஆட்சியில் இருந்தவர்களின் தவறுகளுக்கான தண்டனை என்பதை வேறு ஒரு கட்சி ஆட்சிக்கும் வந்ததும் வசதியாய் மறந்து விடுகின்றது.ஆதரிப்பவர்கள் எதிர்ப்பவர்கள் தாண்டி நம்மைப் போன்ற பொது  ஜனமே அதிகம் என்பதையும் மறந்து விடுகின்றன கழகங்கள்.ஒரு சாமானியராக இது போன்று என் வருத்தம் பதிவு செய்வது தவிர வேறு ஒன்றும் அறியேன் பராபரமே.. :((

Tuesday, October 18, 2011

பெருமூச்சு ...5!

எனது கற்பனைக்காதலனுக்கு சமர்ப்பணம் 

நீயில்லாப் பொழுதுகள்
யாவும் நீள் பொழுதுகளாக..
*******************************
யாதுமாகி நீ நின்றாய்
வேறு யாதொன்றும் 
இல்லாமற் போனது ..
****************************  
விலகி (__ ) செல்லாமல் 
அருகில் வந்து இதழ் 
ஒற்றி(று)ப் பிழை திருத்து..
************************************ 
நான் சிரிக்கப் 
பொறுக்காதவன் நீ 
சட்டென்று என் இதழ் மூடி ... ;)
********************************************************
உன்னால் மட்டுமே உதிர்ந்து விழும்
மணல் கோட்டைக்கு 
"திமிர்"எனப் பெயரிட்டு இருக்கின்றேன்..
******************************************************
சுக்கு நூறாகக் கிழித்த 
நினைவுகளை எல்லாம்
மொத்தமாக அள்ளினேன்
சிதறிப் போனது மனது 
*******************************  
உன் சுளித்த புருவங்களுக்கிடையே
சிக்கித் தவிக்கிறேன் 
சீராக்கி நீ சிரிக்கின்ற வரையில்...
******************************************  
நம் இடைவெளிகளை 
நிரப்பிக் கொண்டிருக்கின்றன
மௌனங்களும் உன் நினைவுகளும்
*************************************************
வெட்ட வெட்ட வளர்கின்றது
-வலி
*******
உச்சி முகர்ந்து நெற்றியில் 
கொடுக்கும் நின்
முத்தங்கள் யாவும் நீ
எனக்களிக்கும் ஆசீர்வாதங்களாகின்றன
********************************************************
உன் தவறுகளை மன்னிக்கும் பொழுது
தாயாகின்றேன்
சண்டையிடும் பொழுதெல்லாம் 
அடித்தாலும் நின் அணைப்பையே
எதிர்பார்க்கும் சேயாகின்றேன் 
*****************************************
என்ன தவறு செய்தது பூமி
இப்படி ஓங்கிக் கொட்டுகிறது
வானம் 
மழைக் கரம் நீட்டி 
"மாமழை"
*************