Thursday, July 2, 2015

மலரே..மௌனமா...

பாடல் : மலரே..மௌனமா..
படம் : கர்ணா
பாடியவர்கள் : SPB,ஜானகி
பாடலாசிரியர் : வைரமுத்து
இளையராஜா ,ரஹ்மான்,தேவா,சிற்பி, வித்யாசாகர் என்ற பல அற்புதக் கலவைகள் கலந்த வரத்தை அனுபவித்ததை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்.. சில பாடல்கள் தென்றலைப் போல உள் நுழைந்து ஒரு புயலைப் போன்ற தாக்கத்தை மனதினில் ஏற்படுத்தி விடும்..அது போன்றவற்றில் இதுவும் ஒன்று..

மனம் மெல்ல மேலெழுந்து பறந்து ஒரு நிலைக்குச் சென்றமர்வதைப் போன்ற ஆரம்ப இசை ..அதிலே வண்டு, பூவின் மௌனத்தைக் கலைக்கவென  அதைச் சுற்றி வட்டமிடுவதற்கு ஒப்பாக புல்லாங்குழல் . SPB ,ஜானகி டூயட்களுக்கு மற்றுமோர் மணிமகுடமாக இந்தப் பாடல். ஓர் ஏகாந்தத் தருணத்தில் எப்படி உருக வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியாதா என்ன ..பாடலாசிரியரின் வரிகளுக்கு நியாயம் செய்தல் என்பது அந்தச் சொற்களை இடம் பொருள் ஏவல் உணர்ந்து உச்சரிப்பதுவே..இந்தப் பாடல் முழுக்க அந்த நியாயத்தைக் காணலாம்..பாடல் முழுக்க ஏகப்பட்ட சங்கதிகள்.. இந்தப் பாடலை அச்சுப் பிசகாமல் அப்படியே பாடுவது வேறு பாடகர்களுக்கு ஒரு பெரிய சவால் தான்.
ஏதோ சுகம் உள்ளூறுதே ..ஏனோ மனம் தள்...ளாடுதே ....என்ற உச்சரிப்புகளாகட்டும் ..கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன் என்பதற்கு காற்றைப் போல வந்து கண்கள் மெல்ல திறந்தேன் என்பதில் மெல்லத் திறப்பதை உணர்த்துவார்..செவிக்குக் காட்சியானவை SPB அவர்களின் பாடும் விதமும் உச்சரிப்புகளும்..

பொதுவாக இரவு ஒன்பது மணிக்கு மேல் தான் பாட மாட்டேன் என்று SPB சொல்ல,சரி எதற்கும் பாட்டைக் கேளுங்க பிடிச்சா இப்பப் பாடுங்க இல்லாட்டி காலையில் பார்த்துக்கலாம் என வித்யாசாகர் சொல்ல ,பின்பு கேட்ட SPB இரவு 11.30 வரை மெய் மறந்து பாடிக் கொண்டே இருந்தாராம்.. நடிகர்,இயக்குநர் ,இசையமைப்பாளர் சூழ இருந்த இடத்தில் ,பாலு சார் மெல்ல மண்டியிட்டு , கைகூப்பி (தட் கே ஆர் விஜயா கைகூப்பிக் கதறும் மொமென்ட் ) தயவுசெய்து இந்தப் பாடலை நன்கு காட்சிப்படுத்துங்கள்..பத்து பதினஞ்சு வருஷத்துக்கு ஒருமுறை தான் இந்தப் பாடல் போன்று ஒன்று கிடைக்கும்..அதை மிஸ் பண்ணிடாதீங்க என்றாராம்..ஆகவே காட்சியமைப்பிலும் என்னைக் கவர்ந்த பாடல்.. காதலை யாசித்து நிற்கும் தலைவனும் , யாசிப்பதேன் மௌனம் சம்மதம் எனச் சொல்லும் தலைவியுமாக பாடல் செல்லும்..ரஞ்சிதாவின் வெட்கத்தை நன்கு தரிசிக்கலாம்:)  ரஞ்சிதா கைகள் கொண்டு முகத்தை மூடி நிற்க ,பின்னர் கைகள் விலக்கும் போது அவ்விடத்தில் புல்லாங்குழல் மிகச் சரியாகப் பொருந்தி இருக்கும்

காதலர்களைத் தொந்தரவு செய்ய விரும்பாதது போலவும்,அதே நேரம் அவர்களின் மகிழ்வுக்கு இசைந்து நடப்பது போல (0.19ஆரம்பித்து -0.27 குரல் ஆரம்பிக்கவும்,அத்தோடு இணைந்து பாடல் முழுக்க வரும் இசை அழகு .ஆனா..ஊ ன்னா அந்தக் காலத்துல பனிப் பிரதேசத்திற்குப் போயிடுவாங்க..ரோஜாவில் பிரபலமானதாலோ என்னவோ..ஆனால் அதுவும் கண்ணுக்குக் குளிர்ச்சி.. முதல் இடை இசையில் மெல்லிசான அந்த ஹம்மிங் ..அதன் பின் வரும் வயலின் "ஆமா ஏதோ பேசிட்டு இருந்தோம்ல" என்று இயல்புக்கு இழுக்கும்...அதைத் தொடர்ந்து வரும் புல்லாங்குழல் அதை ஆமோதித்து விட அதற்கடுத்து வரும் வீணை சிணுங்கிக் கொண்டே பேச எடுத்துக் கொடுக்கும் .பாடல் முழுக்க மயங்கிக் கொண்டே பாடும் காதலர்கள் , மனத்தை மயக்கும் மெல்லிசை ஏகாந்தத்தை உணர்த்திச் செல்லும்..இரண்டாவது இடை இசையில் , புல்லாங்குழல் ,வீணை, வயலின் சூழலைப் புரிந்து ஒன்றுக் கொன்று நமட்டுச் சிரிப்போடு குசலம் விசாரித்துக் கொள்கின்றன .
காற்றே என்னைக் கிள்ளாதிரு..
பூவே என்னைத் தள்ளாதிரு..
வெகு அழகாகப் பாடி இருப்பார்கள் ..இந்த வரிகளின் ஊடே வயலின் சும்மா புகுந்து விளையாடி இருக்கும்.. கிள்ளிடாத கிள்ளிடாதன்னு கொஞ்சுவது போல :) தொடக் கூடாது என்று அல்ல தொடாததாலே கோபம் வரும் மலருக்கு..ஆனால் பொய்யாக கோபப் பட்டுக் கொள்வது தான் :)

இறுதியாக ஜானகியின் ஹம்மிங், பாடலுக்கு முத்தாய்ப்பாக அமைவது இன்னொரு சிறப்பம்சம்.. கால ஓட்டத்தில் , என்றென்றும் வித்யாசாகரை அடையாளப்படுத்தும் பாடல் இது.
தன்னை உலகெங்கிலும் கொண்டு சேர்த்தது இந்தப் பாடல் என வித்யாசாகர் சொன்னது துளி கூட மிகையில்லை ..என்ன...இன்று ஒரு சில ஹிட் கொடுத்தவர்களையே தகுதிக்கு மீறிக் கொண்டாடும்போது , நாம் வித்யாசாகரை இன்னும் கொஞ்சம் கொண்டாடி இருந்திருக்கலாம் என்ற பெருமூச்சு எழாமலில்லை..