Tuesday, December 20, 2011

இதயங்களின் ராஜா!

 நிறைய பேரு அடிக்கடி சண்டை போட்டுக்கறாங்க தீவிரமா விவாதம் பண்ணிக்கறாங்க.ராஜாவா 
ரகுமானா என்று நான் அந்த விவாதத்திற்குள் எல்லாம் போக விரும்பல .எனக்கு ஏன் பிறரை விட ஒரு படி மேலே ராஜாவைப் பிடித்தது என்று மட்டுமே யோசிக்க விரும்புகிறேன்.இந்தப் பதிவின் நோக்கமும் அதுவே 

ராஜா பத்தி பேசும் முன் என் சுய புராணம் கொஞ்சமா சொல்லிடறேன்.என் ஆத்மார்த்தமான நேசித்தலுக்கு எங்கேனும் காரணம் கிடைக்கலாம் உங்களுக்கு.

நான் சின்ன வயசில் எவரிடமும் அதிகம் பழகாமல் மனதில் பட்டதைப் பேசவே தயங்கும் ரிசர்வ்ட் டைப் என்றால்
நம்புவீர்களா?நம்பனும்:)அம்மா எங்கயும் வெளியே விட மாட்டாங்க வீட்டிற்கு உள்ளேயே இருக்கணும்
.அதிகம் கண்டிப்பு வேற.அண்ணனுக்கு விழும் அடி எல்லாம் பீதியடைந்த கண்களோடு வேடிக்கை பார்த்து ஓரமாய் ஒடுங்குவேன்.வெளியே நட்பு வட்டம் அறவே கிடையாது.அது மாதிரியான தருணங்களில் அண்ணன் அறிமுகப் படுத்தியவர் தான் ராஜா.அறியா வயசிலேயே ஆழப் பதிந்த ஆத்மார்த்தமான நண்பன் .
 என் அண்ணன் இசை ரசனையை சொல்லியே ஆகணும்.மெலடி ,பீட் ரெண்டும் ஒன்றாகக் கூட பதிய மாட்டாங்க.மிகச் சரியான கலவையாக இருக்கும் ஒரு கேசட்டில் பாடல்கள் அனைத்தும்.ஏனோ தானோ என்றல்லாமல் மிக செலெக்டிவ் பாடல்களாக இருக்கும்.ஸ்பீக்கர் ல அலற விட்டுத் தான் பாட்டு போடுவாங்க.கேசட்டில் இடையே நின்று நின்று பாடும்.எந்த இடத்தில் நின்று பாடும் என்பது கூட அத்துப்படி.தேர்ந்தெடுத்துப் பாடல்கள் இருக்குமென்பதால் எது எந்தப் படம் என்று எனக்குத் தெரியாது.யேசுதாஸ் பாடல்கள் பாகம் ஒன்று இரண்டு என்று வச்சிருந்தாங்க.அதிலே அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ பாடலை மிகச் சமீபத்தில்தான் யு ட்யூப் ல பார்த்தேன்.படம் பெயர் கூட அப்போதான் தெரியும்.இது பகல் ல கேக்கணும் இது இரவுல கேக்கணும் ன்னு பிரிச்சு வைப்பாங்க.(அதே பழக்கத்தில் இப்பவும் BEAT ,FEMALE SOLO MALE SOLO ,ROMANTIC DUETS ,MELODIES ன்னு டௌன்லோட் பண்ணதை தனித்தனியா பிரிச்சு வச்சு சிஸ்டம் ஹேங் ஆகிடாதான்னு அண்ணா கிட்ட வாங்கிக் கட்டினது வேற விஷயம் :P ) சின்ன வயசுல வானொலியில் பின்னணிப் பாடகர்கள் அறிவிப்பு செய்யும் பொழுது அவங்க தப்பா சொல்றாங்க படத்துல இது ரஜினி தானே பாடினாரு கமல் தானே பாடினாருன்னு தோணும் :) அப்புறம் அண்ணா சொல்லித் தான் தெரியும் பாடுறது வேற ஆளுங்கன்னு.
இயேசு தாஸ் குரல் மட்டுமே சட்டென்று கண்டு பிடிக்கும் வகையில் இருக்கும்.தனித்துவம் வாய்ந்த குரல் அது.பின்னாளில் எஸ்பிபியும்  மிக அருமையான பாடகர் என்று அறிவு சொன்னாலுமே கூட முதல் இடம் இயேசு தாசிற்குத் தான்.நீண்ட வருடங்கள் பொன் மானே கோபம் ஏனோ யேசுதாஸ் என்றே நினைத்திருந்தேன் ;-O உன்னி மேனன் என்றதும் ஆச்சர்யம்.இவர் மது பாலக்ருஷ்ணன் போன்றோரிடம் யேசுதாஸ் அவர்களின் தாக்கம் அதிகமாகவே இருக்குன்னு தோணுது.
ராஜா இசையமைத்த படங்களை எல்லாம் தேடித் தேடிக் கேட்கும் அளவுக்கு வெறியை இல்லை.இசை நல்லா இருந்தா ரசிப்பேன்.படம் கவிஞர் எல்லாம் ஆராய்ச்சி பண்ணித் தெரிஞ்சுக்க நினைச்சதே கிடையாது.ஏதோ பொழுது போகக் கேக்கிறோம்.அவ்ளோதான்.அதனால் இசை ஞானம் எல்லாம் அரைகுறைதான்.இணையத்தில் ராஜா ரசிகர்களைப் பார்த்தபின்பு தான் மலைத்தே விட்டேன்.எவ்ளோ தகவல்கள் தெரிஞ்சு வச்சிருக்காங்க.அவங்க முன்னாடி நிச்சயம் நான் மிக மிகச் சாதாரணம்தான்.பாட்டில் உள்ள நுணுக்கங்கள் என்ன என்பது தெரியாமலே ரசிப்பதற்கும் முழுவதும் அறிந்து சிலாகிப்பதற்கும் வித்தியாசம் உணர முடிந்தது.ரவி ஆதித்யா,றேடியோஸ்பதி,ராஜாரசிகன் என்னைக் கவர்ந்த தளங்கள்.
மனதிற்குப் பிடித்த விசயங்களில் முழுப் பைத்தியமா இருக்கணும் அதிலே அதிக பட்ச அறிவைப் பெற என்பது இணையதள ராஜா ரசிகர்களிடம் தாமதமாக அறிந்து கொண்டேன்.
கேட்காமல் விட்ட ராஜாவின் பாடல்கள் யாவும் புதுப் பாடல்கள் போலல்லாமல் சிரமமின்றி சட்டென்று மனதில் ஒட்டிக் கொள்கின்றன.தென்றல் என்னை முத்தமிட்டது இதழில் ...பாடல் சமீபத்தில் தான் கேட்டுப் பிடித்தது. 
அப்பாவின் கிராமத்திற்குப் போய்விட்டு மதுரை வரும் தருணங்களில் எல்லாம் பேருந்தில் இளையராஜா ஹிட்ஸ் கேட்டுக் கொண்டே திரும்பி வருவோம்.அந்த நேரம் எப்படிப் போகும் என்றே தெரியாது.அப்பாவே ரசித்ததால் சிந்து பைரவி அதிகம் பிடிக்கும் எனக்கு.
மண்ணில் இந்தக் காதலன்றி பாடலில் ஆரம்பத்தில் வரும் புல்லாங்குழலே சொல்லும் காற்றில் காகிதம் பறப்பதை.முத்துமணி மாலை ஆரம்ப இசையும் அப்படித்தான் முத்துமணி மாலை உருண்டோடுவதை கண் முன்னால் படம் பிடித்து காட்டும்."சொந்தம் வந்தது வந்தது ",பொன் வானம் பன்னீர் தூவும் இந்நேரம் " போன்ற பாடல்களை பார்க்காமலே கற்பனை செய்த விதமும் படத்தில் முதன் முதலில் பார்த்த பொழுதும் அப்படியே பிரம்மித்துப் போயிற்று.ராஜாவிடம் காட்சிப் படுத்தி விட்டு இசை அமைக்கச் சொன்னார்களா அல்லது அவர் இசைக்குத் தகுந்தாற் போல பாடல் காட்சிகளைப் படமாக்கினார்களா என்று பல முறை குழம்பி இருக்கின்றேன்.எப்படியாயினும் வெளிநாடு லொகேஷன் இல்லாமல் ,புது வித நடன அசைவுகள் பேர்வழி என்றோ இல்லாமல் அந்தக் காலத்தில் இயல்பாக நம் ஊர்களில் எடுக்கப்பட்ட பாடல்களே வெகுவாகக் கவர்ந்திருக்கின்றன இன்றளவும்.மதுர மரிக் கொழுந்து வாசம்,நிக்கட்டுமா போகட்டுமா இப்படி பாடல்களை அடுக்கிகிட்டே போகலாம்.ராஜா ஒரு முறை சொன்னது "இசையைக் கேட்கும் பொழுதே காட்சியைப் படம் பிடித்து அதை அப்படியே உணர வைக்க வேண்டும் "என்று.அதை அப்படியே பல பாடல்களில் பிரதிபலித்திருப்பார்.
 
ஒரு படத்தின் கதை மட்டும் நன்றாக அமைந்து விட்டால் அதற்கு இசை ஞானியின் இசை பலமாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமின்றி நிரூபித்த படங்கள் நிறைய மௌன ராகம்,சிந்து பைரவி ,முதல் மரியாதை ,சேது என வரிசையாக பல வெற்றிப் படங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
எத்தனை துன்பங்களையும் அந்த நேரத்தில் மறக்க மாமருந்தாக ராஜ இசை உதவி இருக்கின்றது என்றால் அது மிகையல்ல.ஒரு தாயைப்போல மடியில் வைத்து மெல்லத் தலை வருடி அன்பைச் சொல்லும் பாடல்களாகட்டும் காதலனின் பிரியத்தைச் சொல்லும் காதல் பாடல்களாகட்டும் எத்தனை அவர் பெருமை சொல்ல?எல்லா நேரமும் நண்பர்கள் அருகில் இருக்க முடியாது.வேதனையான தருணங்களில் பெரும்பாலும் நான் தோள் சாயும் நண்பன் ராஜா மட்டுமே.அப்படியே அள்ளி அணைத்துக் கொள்ளும் நண்பன் ,காதலன், தாயுமானவன் எத்தனைப் பேர் வேண்டுமானாலும் வைப்பேன் மொத்தத்தில் இசைக்கு இறைவன். 
 எண்பதுகளில் பல நல்ல பாடல்கள் வேறு இசையமைப்பாளர்கள் இசைத்திருந்த பொழுதும் அதுவும் ராஜாகவே இருக்கக் கூடும் என்று அனிச்சையாகவே பலரும் நினைத்திருக்கக் கூடும்.ராஜாவின் இசையில் இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை அது.
அவர் இசை அறிவை எடுத்துச் சொல்லும் அளவுக்கு எனக்கு விஷய ஞானம் இல்லை.அதே போல ராஜாவை மோசமாக விமர்சிக்கவும் எவருக்கும் அருகதை இல்லை.காலிக் குடங்களின் சத்தமும் குறை குடங்களின் கூத்தாட்டமும் மிகுந்த உலகில் தலையில் விஷயம் உள்ள ஒருவர் தலைக்கனமாக இருந்தால் கூட தவறே இல்லை.
என்னைப் போன்ற பல ரசிகர்களின் எண்ண அலைகள், நிழலாய் இருந்து அவரைத் தெம்பூட்டிய அவரது துணைவியாரின் பிரிவில் இருந்து அவரை ஆற்ற சென்றடையட்டும் என்பதே என் பிரார்த்தனை.

2 comments:

Anonymous said...

எண்பதுகளில் பல நல்ல பாடல்கள் வேறு இசையமைப்பாளர்கள் இசைத்திருந்த பொழுதும் அதுவும் ராஜாகவே இருக்கக் கூடும் என்று அனிச்சையாகவே பலரும் நினைத்திருக்கக் கூடும்.ராஜாவின் இசையில் இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை அது.
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. இன்றும் பழைய பாடல்கள் கேக்கும் பொது இளையராஜா பாடல் என்று தான் நினக்க்றோம் .,ராஜா ஒரு யுகம்,ராஜாவை வைத்து தான் சினிமாவில், ராஜாவுக்கு MSV , ராஜாவுக்கு பின் ar ரஹ்மான், yuavan , தேவா etc ,,,, ஆனால் அந்த காலத்தில் ராஜா ஒருவரே , இன்றும் அவரது இசை நம்மக்கு நேரத்தை காத்த்கிறது, பகல் இரவு மாலை என இசையை பிரித்து ரசிக்கும்படி இசை அமைத்த பெருமை அவரை மட்டும் சாரும்,,இன்றைய பாடல்களில் அப்புடி ஒரு விஷயம் இருக்குதா,, நானும் தேடுகிறேன்,

adhavan said...

பெயரில் இளையராஜவாக இருந்தாலும், அவர் ராஜாதிராஜாதான்... ராஜாவின் இசை ஆளுமை வியக்கத்தக்கது என்று சொன்னால் மிகையாகாது.... இசைகலப்பவர்களிடமிருந்து வேறுபட்டு நிற்கும் அவர் தமது இசைக்கோர்ப்பினால் ஈர்க்கிறார் பலகோடி நெஞ்சங்களை...