Wednesday, July 17, 2013

தமிழிசை ஆய்வு மையத் துவக்க விழா !

நம்ம ட்விட்டர் @RavikumarMGR புதன் மாலை 5 மணிக்கு தியாகராஜா கலைக் கல்லூரிக்கு இளைய ராஜா வருகை தருகிறார் அவசியம் செல்லுங்கள் என்று மென்சன் போட்டார். விஷயம் ஆச்சர்யம் என்றாலும் உள்ளே விடுவார்களா என்று அசுவராசியம்.ஆனால் எளிதாக பார்க்கலாம் என்றும் சொல்லவே சரி போகலாம் என்று ஒரு சபலம். ஆனால் நான் ஒரு மறதி கேஸு தயவு செய்து அந்த நேரத்தில் நினைவு படுத்துங்க என்றதும் மொபைல் ரிமைன்டர் வைக்கச் சொன்னதும் வைத்திருந்தேன்.(இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல என்று சொக்கன் தன் மைண்ட் வாய்ஸ் பதிவும் செய்து விட்டார் :) ) அதே போல மறந்தும் விட்டு தூங்கி எழுந்ததும் ரிமைன்டர் NOTIFICATION காட்டியது.சுத்தம் ..

அரக்க பறக்க ஒரு கலர் சுடு தண்ணியை அதான் காப்பி (நானே போட்டா அப்படித்தான் இருக்கும்)விழுங்கிட்டு அந்த டம்ளரை தூக்கி எறியாத குறையா வச்சுட்டு இரண்டு ஷேர் ஆட்டோ மாறிப் பயணித்தேன்.  எப்படியும் நம் தமிழ்க் குல வழக்கப்படி 5 மணி விழா ஆரம்பம் என்றால் 6 மணிக்குத் தான் ஆரம்பிப்பாங்க.காலம் காலமா அதானே சம்பிரதாயம்.அந்த நம்பிக்கையில் அங்கே சென்றடைந்தேன்.என்னை ஏமாற்றவில்லை.  5.50 க்குத் தான் ஆரம்பித்தார்களாம்.பத்து நிமிடம் தான் ஆகுதுன்னு பக்கத்துல இருக்கிற பொண்ணு சொல்லவும் தான் நிம்மதி :)

ஒரு கல்லூரியின் தனிப்பட்ட விழா என்பதாலோ என்னவோ மதுரையில் எந்த இடத்திலும் ஏன் கல்லூரிக்கு அருகில் கூட வரவேற்பு பேனரைக் காணோம். முழுக்க கல்லூரி மாணவர்களால் மட்டுமே அரங்கம் நிறைந்து வழிந்தது.அதிலே ஒருவராக சத்தமில்லாமல் உள்ளே சென்று அமர்ந்தேன்..(ஹி ஹி ..இப்பவும் காலேஜ் படிக்கிற பொண்ணு மாதிரிதான் இருப்பேன் என நான் சொல்லாமலே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்   என்பதற்காகவே   இது :) 

 பேராசிரியர் ஞான சம்பந்தர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார் .அவர் பேசுவதில் என் கவனம் செல்லவே இல்லை .  பல அடிகள் தூரத்தில் இருந்து ராஜாவை மட்டுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்..  மெலிந்த தேகம் தும்பைப் பூவாய் வெள்ளை வேட்டி சட்டை கழுத்தில் பெரிய ருத்திராட்ச மாலையுடன் மைக்கில் பேசுபவர்களை புன்னகையுடன் கவனித்துக் கொண்டிருந்தார்.. மேடையையும் அருகே வைக்கப் பட்டிருந்த தொலைக்காட்சி நேரலையையும் மாறி மாறி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.  எழுத்தாளர் சுகா அவர்கள் மூலமாக ராஜாவை இந்நிகழ்ச்சிக்கு வரவழைத்திருந்தார்கள் .தமிழிசை ஆய்வு மையத் துவக்க விழா . ராஜா சிறப்பு விருந்தினர் .

என்ன ஒரு ஆச்சர்யம் அரங்கத்தில் இந்த மாணவ மணிகள் அமைதியா உட்கார்ந்து இருக்கே என்று .  நான் வேடிக்கை பார்ப்பதற்கும் உலை வைப்பது போன்று நடு மத்தியில் ஒருவர் நின்று கொண்டார்.அருகே சென்று சார் தெரியல என்றேன்.  அதுக்கென்ன செய்யறது நான் இங்கிருந்து நகர்ந்துட்டா பசங்க ரொம்ப கத்துவாங்க என்றார் .  வேறு வழியின்றி வேறு பக்கம் நகர்ந்து அமர்ந்தேன்.ஆனால் அவர் என்ன நினைத்தாரோ தெரியல அங்கிருந்து வெளியேறி அடுத்த பக்கம் போயிட்டார்.  அப்பத் தான் அவர் சொன்னது எவ்வளவு நிஜம் என்று புரிந்தது.  ஏகப்பட்ட சலசலப்பு.அவர்களுக்கு சினிமாத் துறையைச் சார்ந்த ஒருவரைப் பார்க்கிறோம் என்ற பெருமை தானே தவிர அங்கே இருக்கும் சுகா பற்றியோ இளையராஜா பற்றியோமுழுவதும் அறிந்தவர்கள் இல்லை.  மேலும் அவர்கள் வயது அதற்கு அனுமதிக்கவும் இல்லை.  ஆனால் இளையராஜா பற்றி ஆச்சர்யத் தகவல்கள் அங்கே பேசுபவர்கள் பகிர்ந்த பொழுது எவரும் சொல்லாமலே உற்சாகத்துடன் கை தட்டினர் .

சுகா பேசும் பொழுது மட்டும் அந்த சலசலப்புக்கு இடையே முடிந்தவரை கூர்ந்து கவனித்தேன். மிகத் தெளிவான பேச்சு, அருமையான தமிழ் உச்சரிப்பு அழிந்துவரும் நாட்டுப்புற இசை,வாத்தியங்கள் பற்றி நியாயமான ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். "நிகழ்ச்சிக்கு வருகிறேன் ஆனால் இசை பற்றி எனக்கென்னயா தெரியும்?"   என்றாராம் ராஜா (ஙே ..அவருக்கு தன்னடக்கம்ன்னா என்னன்னே தெரியாதுன்னாங்க யாரோ) எழுபதுகளில் தமிழ் நாட்டில் இந்திப் பாடல்கள் படங்கள் மீதான மோகம் அதிகம் இருந்தது எனவும் அது அத்தனையையும் உடைத்து தமிழிசை கேட்க வைத்தவர் ராஜா என்பதை சுகாவும் ஞான சம்பந்தரும் நினைவு கூர்ந்தனர். இந்திப் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களைத் தமிழ்ப் பாடல் கேட்க வைத்தவர் ராஜா இந்திக் காரர்களையே கேட்க வைத்தவர் ரகுமான் (அடக் கிரகமே ட்விட்டர் புத்தி அங்கயும் இப்படி யோசிக்க வைத்தது :) ) சுகாவை அறிமுகம் செய்த பொழுது எழுத்தாளர் ,படித்துறை என்ற படத்தின் இயக்குனர் என்று சொன்னார் ஞான சம்பந்தன். (படித்துறை படம் ரிலீஸ் எப்போ?நிறுத்தப்பட்டது என்று சொன்னாங்களே )இளைய தலைமுறை தொலைக் காட்சிகளில் அடங்கி விட்டீர்கள் .  இயன்றவரை அழிந்துவரும் நாட்டுப் புறக் கலைகளை மீட்டெடுக்க நம்மால் ஆன முயற்சிகள் எடுக்க வேண்டும்  நாதஸ்வரம் கச்சேரி போன்றவற்றை நம் வீட்டில் வைத்து அக்கலையை வளர்க்க இயன்ற அளவு உதவ வேண்டும் என்று வேண்டுகோளும் ஆதங்கமுமாக முடித்தார் சுகா .  சிறுவயதில் எங்கள் கிராமத்தில் கல்யாண வீட்டிலும் சரி ,கருமாதி வீட்டிலும் சரி நிச்சயம் நாதஸ்வரம் இருக்கும்.தமிழ் சினிமாப் பாடல்களை மிக அழகாக வாசிப்பார்கள்.அதையெல்லாம் பார்க்கும் கொடுப்பினை வரும் தலைமுறைக்கு இல்லை என்று சுகா கவலைப்பட்டதிலும் ஒரு அர்த்தம் இருக்கின்றது.

இந்த பேச்சுக்கிடையில் எங்கெல்லாம் எனக்கு முன்பு இடம் காலியாகிறதோ அங்கெல்லாம் நகர்ந்து நகர்ந்து முன்னே உட்கார்ந்தேன்.  இறுதியில் ராஜா பேச வருகிறார் எனும் பொழுதே ஒரே கைதட்டல் தான். காலையில் மீனாட்சியை தரிசித்து விட்டு வந்ததும் இப்பொழுது கோவில் சுத்தமாக இருப்பதையும் சொன்னார்.  சிறு வயதில் தியாகராஜா கல்லூரி எதிரே இல்ல தெப்பக்குளத்தில் சுற்றிய நாட்களையும்  .கல்லூரி நாடகத்திற்கு இசை அமைத்தது உட்பட சின்னச் சின்ன விசயங்களை நகைச்சுவையோடு நினைவு கூர்ந்தார். இயன்றவரை முன்னிருப்பவர்கள் அமைதி காக்க பின்னாடி இருக்கும் மாப்பிள்ளை பெஞ்ச் அட்டகாசம் தாங்க முடியல. அதிலும் பெண்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு அருகே உள்ள கூட்டத்தில் இருந்து வார்த்தைக்கு வார்த்தை கமெண்ட் பறந்தது. ராஜா பேசுவதைக் கேட்க மிகப் பெரிய இடைஞ்சலாக இருந்தது.  பெண்களைக் கவர அவர்கள் கமெண்ட் அடிக்க இங்க பெண்கள் பக்கம் இருந்து அவர்கள் எதிர்பார்த்தது போன்றே கிக்கிக்கி ரெஸ்பான்ஸ். பொறுமையை இழுத்துப் பிடிப்பது மிகச் சிரமமாக இருந்தது எனக்கு.  வேறு வழியின்றி எனக்கு அருகே அந்த பக்கம் அமர்ந்திருந்தவன் கமெண்ட் அடிச்சுட்டு இந்தப் பக்கம் பார்க்கும் பொழுது ஒரு அருவெறுப்பான பார்வையை உமிழ்ந்தேன்.அவன் காதுக்கு மட்டும் கேட்கும் படி லூசா நீ என்றேன்.அத்தோடு அடங்கினான்.(யார்ரா இந்தப் பக்கின்னு நினைச்சிருப்பானோ ?:) 

நேரலையில் அருகில் இருந்த டிவியில் யாரோ ஒரு அம்மணியைக் காட்ட ஒரு கூட்டம் மட்டும் திடீர் கைதட்டல்.  ராஜாவுக்கே குழம்பி இருக்கும் , 
இசையின் மகத்துவத்தை சுருக்கமாக விளக்கி இசையை ஒரு கட்டாயப் பாடமாக வைக்க வேண்டும் என்று வேண்டுகோளை முன்வைத்தார் .  கல்லூரி முதல்வர் தமிழக அரசுடன் பேசி இதற்கு தக்க ஆவண செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.. இசையால் லயித்த மனத்தில் வன்முறை குறையும் என்பதையும் சொல்லி இறுதியாக இதயம் ஒரு கோவில் என்று ஆரம்பித்ததும் ஹே என்று கூட்டத்தோடு கூட்டமாக கத்தியதில் உற்சாகம் தொற்றிக் கொண்டது :) எனது ஜீவன் நீதான் என்று முன்னிருந்த கூட்டம் நோக்கிப் பாட அரங்கமே அதிர்ந்தது கைதட்டலிலும் உற்சாக கூச்சலிலும் :) அவர் பேசியதும் கிளம்ப யத்தனித்தவர்களை நன்றியுரை மற்றும் தேசிய கீதம் ஒலித்த பின்பே நகர வேண்டும் என்று ஞான சம்பந்தர் கேட்டுக் கொண்டார்.

நன்றியுரையில் பேசியவர் தமிழிசை பத்தி  என்ன தெரியும் என்று ராஜா கேட்டது ஏழு பிள்ளை பெத்தவ ஒத்த பிள்ளை பெத்தவளிடம் அனுபவம் கேட்பது போல .இசையே நீங்கள் தான் ஐயா என்று பேசி கோவையைச் சேர்ந்த முத்துச் சாமி என்பவர் DTS தரத்தில் ராஜா இசையைத் தருவதாக பகிர்ந்து அமர்ந்தார் .  தேசிய கீதம் ஆரம்பித்ததும் நான் ஒரு நொடி கூடத் தாமதிக்காமல் மேடையில் இருந்து ராஜா இறங்கிச் செல்லும் வழியில் அவரின் கார் அருகே சென்று நின்று கொண்டேன் .  எப்படியும் அருகில் பார்க்க வேண்டும் என்று.தேசிய கீதம் பாடும் பொழுது அசையவே கூடாது என்று பள்ளி சொல்லிக் கொடுத்த பாடமெல்லாம் போயே போச்சு. இறுதியில் சுகா அழைத்து அவரை காரில் ஏறும் வரை கண்ணிமையாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.  சுகாவையும் ராஜாவையும் அவ்வளவு அருகில் பார்த்தும் கூட ஒரு வார்த்தை கூட வாயில் இருந்து வரல . கம் போட்டு ஒட்டிக் கொண்டது போல் ஆகி விட்டது :)

நடிகர் நடிகைகள் மீதிருந்த ஈர்ப்பு இசையமைப்பாளர்கள் மீது சிறு வயதில் இருந்ததே இல்லை . இசை எவரேன்றே தெரியாமல் நான் கேட்ட பாடல்கள் இன்றளவும் எனக்கு இனிக்கவே செய்கின்றன.நினைத்த மாத்திரத்தில் அழவும் சிரிக்கவும் செய்த பால்யத்தைக் கடந்த நாளில் இருந்து எனக்குள் ஒரு தனிமையை உருவாக்கிக் கொண்ட நாள் முதல் இசை மட்டுமே எனக்கு அதிகம் துணையாய் இருந்திருக்கின்றது.  அதில் அதிகம் ராஜாவின் பாடல் கலந்தே இருக்கின்றது.  அவ்வளவே எனக்கும் அவருக்குமான தொடர்பு.

இளையராஜாவைப் பார்ப்பேன் என்று கனவிலும் நினைத்ததே இல்லை.  இசை நிகழ்ச்சியை நேரலையாக ட்விட்டரில் நேரலையாக ட்விட்டர் நண்பர்கள் ஒளிபரப்பும் பொழுது உள்ளே எப்பொழுது இதையெல்லாம் நேரில் பார்க்கப் போகிறோம் என்றொரு ஏக்கம் வந்ததுண்டு.   எதிர்பாராத விதமாய் இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த நண்பர் ரவிக்குமார் MGR க்கு நன்றி :))

ஒரு பூரண மன நிறைவோடு கல்லூரியை விட்டு வெளியே வந்து ஷேர் ஆட்டோவில் அமர்ந்த பொழுது பண்பலையில் இருந்து "கற்பூர முல்லை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று" பாடல். கலந்தாடக் கைகோர்க்கும் நேரம் கண்ணோரம் ஆனந்த ஈரம் என சுசீலா பாடியதும் கண்களில் ஈரம் எவருமறியாமல்.  அந்த ஆட்டோ ஓட்டுநர் உட்பட அங்கே பரபரப்புடன் சென்று கொண்டிருந்த மக்களுக்கு ராஜா எங்கிருக்கிறார் என்று தெரியாது.  அவர் வந்து போனதையும் அறிந்திருக்க முடியாது. ஆனாலும் அம்மாமனிதர் அம்மக்களோடு வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார் .  இசையை மலராய் நாளும் சூட்டிக் கொண்டு .

மானே உன் வார்த்தை ரீங்காரம் மலரே என் நெஞ்சில் நின்றாடும் முத்தே என் முத்தாரமே சபையேறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா ... பின்னாளில் எனக்குப் பிறக்கப் போகும் என் செல்ல மகளுக்கு கருவிலேயே இப்பாடலை அறிமுகம் செய்து வைப்பேன்.

இதயம் ஒரு கோவில் பாடி முடித்ததும் "இதை நான்  பாடி இப்பவே மறந்துடுவேன் ஆனால் உங்க காதுகளில் ஒலித்துக் கொண்டே தானிருக்கும் உங்கள் நெஞ்சத்தை விட்டு நீங்காது " என்று ராஜா உறுதியாகச் சொன்னது  இப்பொழுது நிஜமாகியது .ஆட்டோ என்னை இறக்கி விட்டுச் சென்று வெகு நேரம் ஆகியும் இதோ இந்த நொடி வரை "கற்பூர முல்லை ஒன்று "


20 comments:

Nat Sriram said...

கடைசி 2 பத்திகள்..அமர்க்களம்..

Unknown said...

உங்களோடு சேர்ந்து நானும் சென்ற மாதிரி இருந்தது. அருமையான பதிவு உமா:) நகைச்சுவை, மனதைத்தொடும் சொல்லாடல், எல்லாவற்றையும் மீறி எழுத்தில் ஒரு நேர்மை.
பிடித்தது உமா. வாழ்த்துக்கள்:)

M.G.ரவிக்குமார்™..., said...

எனக்கு ராஜாவைப் பார்க்கும் புண்ணியமில்லை போல.சரி உங்களுக்காச்சும் கிடைக்கட்டுமேன்னு தான் சொன்னேன்!என் வார்த்தையை மதிச்சு மறக்காம நிகழ்ச்சிக்குப் போனதுக்கு மிக்க நன்றி!

M.G.ரவிக்குமார்™..., said...

எனக்கு ராஜாவைப் பார்க்கும் புண்ணியமில்லை போல.சரி உங்களுக்காச்சும் கிடைக்கட்டுமேன்னு தான் சொன்னேன்!என் வார்த்தையை மதிச்சு மறக்காம நிகழ்ச்சிக்குப் போனதுக்கு மிக்க நன்றி!

கானா பிரபா said...

அட்டகாசமான பதிவு, நேரில் பார்த்த திருப்தி. ராஜா சொன்னதை இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம்

chinnapiyan said...

அருமை. நாம் மிகவும் மதித்து போற்றும் ஒருவரை நேரில் காணும்போது கிடைக்கும் இன்பம் எல்லை இல்லாதது. உங்கள் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்கிறேன். வாழ்க.நன்றி

chinnapiyan said...

அருமை. நாம் மிகவும் மதித்து போற்றும் ஒருவரை நேரில் காணும்போது கிடைக்கும் இன்பம் எல்லை இல்லாதது. உங்கள் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்கிறேன். வாழ்க.நன்றி

shanthi said...

அருமையான விவரிப்பு....காட்சிகளை கண்முன் நிருத்திய பதிவு.வாழ்த்துகள்:)) @shanthhi

உமா கிருஷ்ணமூர்த்தி said...

மிக்க நன்றி ரசனை ,ஸ்ரீ,ஷாந்தி ,ரவிகுமார் ,,சின்னப் பையன் :))உங்கள் ஊக்கங்கள் மிகுந்த உற்சாகமளிக்கிறது.இன்று என் காலை மிக இனிதாக ஆரம்பித்து இருக்கிறது :)

உமா கிருஷ்ணமூர்த்தி said...

மிக்க நன்றி சிட்னிகாரரே :)) உண்மையில் ராஜாவைப் பார்க்கும் உங்கள் நீண்ட நாள் கனவு ஒரு பக்கம் இருக்க நான் சும்மா வெறுப்பேற்றவே உங்களிடம் சந்தித்ததைச் சொன்னேன்..ஆனால் உற்சாகமாய் வாழ்த்திப் பதிவிடச் சொன்னதுக்கு உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி :)
வெகு சீக்கிரம் உங்களுக்கும் ஒரு அருமையான வாய்ப்பு கிட்டி அது மறக்க முடியாத ஒன்றாக எங்களுக்கு ஒரு அருமையான பதிவாக வரும் என்று என் பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும் உங்களுக்கு :)பதிவின் நீளம் கருதி நிறைய எழுதல . அதனால் பேசியதின் சாராம்சம் மட்டுமே பகிர்ந்தேன்.இன்னமும் எனக்கு பிரம்மிப்பே அடங்கல :)
ரவிகுமார் MGR க்கு ஒரு பெரிய நன்றி :))

நிலாக்காலம் said...

அருமையா எழுதியிருக்கீங்க உமா! ராஜாவின் தரிசனம் கிடைத்த போது எனக்கு மனதில் வேறு எதுவும் தோன்றவில்லை. கண்களில் வழியும் நீருடன் அவரைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.. இது போதும்ங்கிற மாதிரி.. :)

maithriim said...

பேசியிருக்கலாமே உமா, நல்ல ஒரு சந்தர்ப்பம். இந்த மாதிரி அதிகம் விளம்பரப்படுத்தாத நிகழ்சிகளில் பெரியவர்களை சந்திப்பது நல்ல பாக்கியம். ஆனால் சாமர்த்தியமாக கார் அருகில் போய் நின்றது பாராட்டுக்குரியது :-)நல்ல பதிவு. உங்கள் எழுத்து ஸ்டைல் எனக்கு ரொம்பப் பிடிக்கும் :-)

amas32

Giridharan R said...

superb recount. almost i was there. thank you sir...

Giridharan R said...

superb recount. almost i was there. thank you sir...

Giridharan R said...

Brilliant recount. I was almost there.. thank you sirji.

விக்னேஸ்வரி சுரேஷ் said...

வாழ்த்துகள் உமா. :-)

நீண்ட நாளைக்கு பிறகு ‘மாப்பிள்ளை பென்ச்’.. படித்ததும், மனது ரிவைண்ட் செய்ய ஆரம்பித்து விட்டது

உமா கிருஷ்ணமூர்த்தி said...

மிக்க நன்றி அம்மா :) எங்கம்மா பேச..நாக்கு உலர்ந்து மேல் அன்னத்தோடு ஒட்டிக் கொண்டது..:)பேச்சே வரல

உமா கிருஷ்ணமூர்த்தி said...

நன்றி யமுனா :)thanks giridharan sir

உமா கிருஷ்ணமூர்த்தி said...

ஆனந்த அதிர்ச்சி நிலா :)

Dhivya said...

ரொம்ப அருமையா பதிவு பண்ணிருக்கீங்க. ”சுந்தரி கண்ணால் ஒரு சேதி” பாட்டை சிவகாமி சபதம்-ல மேட்ச் பண்ணிருந்தது செம..(நான் ரொம்ப ரசிச்சேன்) உங்க ரசனை அற்புதம். வாழ்த்துக்கள்.