Tuesday, November 8, 2011

அண்ணா நூலகம்!

ஏற்கனவே ஒரு சில முறை சென்னை சென்றிருந்தாலும் இம்முறை சென்றதில் ஆழப் பதிந்தது அண்ணா நூலகம்.

அண்ணா பல்கலைக் கழகம் அருகில் மாணவர்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியில் ஏதுவாக அமையப்பெற்றிருக்கின்றது.நுழைவாயிலில் அண்ணாந்து பார்த்தாலே பிரமிக்க வைக்கின்றது அண்ணா நூலகம் அதன் கட்டிட அமைப்பில்.அமர்ந்த நிலையில் புத்தகம் படித்துக் கொண்டே வரவேற்கின்றார் அண்ணா.

வெயில் கொடுமை தெரியாதிருக்க சுற்றி சிறிய அளவில் நீர்நிலை.அளவாக அழகாக இருக்கின்றது.புத்தக வடிவில் கல்வெட்டு திறந்து வைத்தவர் பெயருடன்.கைப்பை எதுவும் அனுமதி இல்லை உள்ளே எடுத்துச் செல்ல.முந்தி கேமரா எடுத்துச் செல்ல அனுமதித்தார்களாம் புகைப்படம் எடுத்துக் கொள்ள.தற்பொழுது மாற்றுவதால் (?) எதிர்ப்பாளர்களைச் சமாளிக்க ஏக கெடுபிடி.அனுமதி இல்லை.


முழுக்க முழுக்க அனைத்துப் பகுதிகளும் குளிரூட்டப்பட்டு இருக்கின்றது.சொந்த புத்தகங்களை எடுத்துச் சென்று கூட படிப்பதற்கென்று தனி இடம் தரைத் தளத்தில்.எட்டுத் தளங்கள் ஒவ்வொரு தளத்திற்கும் செல்ல இரண்டு LIFT .ஒரு தளத்தை இரண்டாகப் பிரித்து இருக்கின்றார்கள்.கீழேயே எந்த தளத்தில் எது சம்பந்தமான புத்தகங்கள் இருக்கின்றன என்று எழுதி ஒட்டி வைத்திருக்கின்றார்கள்.அலைய அவசியம் இன்றி நேராக அங்கேயே சென்று விடலாம்.ஒவ்வொரு தளத்திலும் அந்த தளத்தில் உள்ள புத்தகங்கள் எவை சம்பந்தப் பட்டவை என்று நுழைவாயிலில் ஒட்டி இருக்கின்றார்கள்.அதே போல உள்ளே சென்றாலும் இரண்டு பக்கம் உள்ள ஒரு அடுக்கில் எந்த எந்த எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள் எந்த பக்கத்தில்  இருக்கின்றன என்பதையும் தெளிவாக எழுதி ஒட்டி இருக்கின்றார்கள்.குழந்தைகளுக்கென்று பிரத்யேகத் தளம்.ஒவ்வொரு தளத்திலும் உள்ள இரண்டு பிரிவுகளிலும் நுழைவாயிலில் பணிப் பெண்கள் சீருடையணிந்து அமர்ந்திருக்கின்றார்கள் தகவல் அளிக்க.ஒவ்வொரு பிரிவிலும் ஏகப்பட்ட SOFA மற்றும் படிப்பதற்கு எதுவாக டேபிள் நாற்காலிகள் இணைந்தும்.


நான் சென்ற பொழுது அவ்வளவு அமைதி குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் என்பார்களே அந்த அளவுக்கு.உள்ளேயும் ஆட்கள் கேட்கின்ற உதவியைச் செய்ய.(மற்ற அரசு அலவலகங்கள் போல் அன்றி கனிவோடு இயன்றவரை உதவி செய்கின்றார்கள்).அத்தனையும் புத்தம் புது புத்தகங்கள்.ஒரே புத்தகம் பலருக்கும் தேவைப்படக் கூடும் ஆதலால் ஒரே தலைப்புள்ள புத்தகம் குறைந்தது ஐந்தாவது இருக்கின்றது. 
ஒட்டிலே உலை வைப்பது என்று சொல்வார்கள்.அதில் கலைஞர் வல்லவர்.அங்கேயும் திமுக வரலாறு புத்தகங்கள் சமச்சீர் கல்வியில் அவர் வரலாறைச் சேர்த்தது போல
நான் சென்ற பொழுது வேறு ஒரு பக்கம் சூப்பர் சிங்கர் ஜூனியர் மூன்றிற்கான தேர்வும் நடந்து கொண்டிருந்தது.அதனால் நூலகத்தில் குட்டீஸ் கூட்டம் அதிகமாக இருந்தது.ஞாயிறு என்பதால் நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமாகவே வந்தது.


உட்புற அமைப்பு செயல்படும் விதம் பார்த்த பொழுதுதான் புரிந்தது அம்மா நூலகத்தை மாற்றியே தீருவேன் என்று அடம் பிடிக்கக் காரணம் எங்கே சென்ற ஆட்சியின் அழியா சாதனையாக இடம் பெற்று விடுமோ என்ற பதட்டம்.

எதற்கு இவ்வளவு பெரிய இடம் அடைத்துக் கொண்டு என்று கேட்பவர்கள் மனசாட்சி அற்றவர்கள்.எத்தனையோ நூலகங்கள் பயன்படாமல் மேம்படுத்தப் படாமல் கிடக்கின்றன இது மட்டும் என்ன என்பவர்களுக்கு எத்தனையோ அரசு மருத்துவமனைகள் மிகக் கேவலமாக இருக்கின்றன எத்தனையோ அவசியமான இடங்களில் வைக்கவேண்டிய தேவை இருந்தும் அங்கெல்லாம் மருத்துவ மனை கட்டவும் மேம்படுத்தவும் துப்பில்லாத அரசு எதற்கு இதை மட்டும் மாற்றியே தீருவோம் என்று அடம்பிடிக்க வேண்டும்?
யார் நூலகத்தை அதிகம் பயன்படுத்துகின்றார்கள் மாற்றுவதால் என்ன நட்டம் என்றும் கேள்வி எழுப்புகின்றது ஒரு கூட்டம்.பயன்படுத்தாமல் இருப்பது நம் தவறே அன்றி அது பயனில்லை என்று அறிவிப்பது அறிவிலித்தனம் என ஏன் புரிந்து கொள்ள மறுக்கின்றார்கள்?அங்க புத்தகமே இல்ல மச்சி சும்மா வேடிக்கை தான் பார்த்துட்டு வந்தேன் என்றும் யாரோ ஒருவர் எழுதி இருந்ததைப் பார்த்தேன்.அத்தனை புத்தகங்களையும் எட்டு தளங்களிலும் பிரித்து அடுக்கவே ஒரு வருடம் ஆகிற்றாம்.
 ஐந்து லட்சம் புத்தகங்கள் முடிந்தவரை சேகரித்து வைத்திருக்கின்றார்கள்.ஒன்றரை லட்சம் புத்தகம் கூட வைக்க இடம் இல்லாத இடத்தில் மாற்றப் போவதாக செய்தி வெளியிடுகிறார்கள்.ஐந்து ஒன்றரையாக மாறி விட்டால் நிறைய வந்துவிடுமோ என்ன கணக்கு இது? 
சரி என்று வாதிடுகிறார்கள் அம்மா ஆதரவாளர்கள்.
நூலகம் மூடப்படுவது(என்னைப் பொறுத்தவரை அப்படித் தான் சொல்வேன்) சரியா தவறா அதன் நன்மை தீமை என்பதை சீர்தூக்கிப் பார்ப்பதை விடுத்து இதுதான் சாக்கு என்று உடன்பிறப்புகள் மிகக் கேவலமாக முதல்வரை ஜாதி சொல்லி விமர்சிப்பதும் மோசமாகப் பேசுவதும் நோக்கத்தை சிதைக்காதா?எரியிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் ஆகாதா?அதே போல பிடித்தமான தலைவராகவே இருந்தாலும் அடுத்தவன் வீட்டில் தானே தீ எரிகிறது என்று கைகொட்டிச் சிரிப்பதும் அதற்கு ஆதரவாக கண்ணை மூடிக் கொண்டு வாதிடுவதும் அந்தத் தீ நம்மைச் சுடும் தூரம் அதிகம் இல்லை என்பதை உணராதவர்களாகவே தோன்றுகின்றது.ஆளும் கட்சிக் காரர்களாகவே இருக்கட்டும்.யதார்த்தமாய் ஒரு கேள்வி முன்வைக்கிறேன்.பொது நலத்தை விடுங்க.மாய்ந்து மாய்ந்து படித்து ஏகப்பட்ட தேர்வு எழுதி இப்படி ஒரு இடத்தில் நல்லதாக ஒரு அரசு வேலை கிடைத்துவிட்ட திருப்தியில் இருக்கும் போது எந்நேரம் வேண்டுமானாலும் பறிக்கப் படலாம் அல்லது ஆட்குறைப்பு செய்யப் பட்டால் அதில் நாமும் ஒருவராக இருப்போமோ என்ற பதட்டநிலை உங்களுக்கு வருமா வராதா?வெளியே நின்று கொண்டு என்ன வேணாலும் பேசிடலாம்.தனக்கென்று வந்தால் தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்.

என் தந்தை புத்தகம் வாங்கக் கூட வழியின்றி நூலகத்தில் படித்து வந்தவர்தான்.அவருக்குப் பிறகு அவர் சந்ததிகள் படித்திருக்கின்றோம்.இதை விட அதன் பயன்பாட்டிற்கு என்ன சான்று வேண்டும்?அப்படியே மாற்றம் மட்டுமே கவலைக்கு இடமில்லை என்று நம்புபவர்களை எண்ணி நகைப்பதா பரிதாபப்படுவதா என்று தெரியவில்லை.ஒவ்வொரு ஆட்சி மாற்றமும் முன்பு ஆட்சியில் இருந்தவர்களின் தவறுகளுக்கான தண்டனை என்பதை வேறு ஒரு கட்சி ஆட்சிக்கும் வந்ததும் வசதியாய் மறந்து விடுகின்றது.ஆதரிப்பவர்கள் எதிர்ப்பவர்கள் தாண்டி நம்மைப் போன்ற பொது  ஜனமே அதிகம் என்பதையும் மறந்து விடுகின்றன கழகங்கள்.ஒரு சாமானியராக இது போன்று என் வருத்தம் பதிவு செய்வது தவிர வேறு ஒன்றும் அறியேன் பராபரமே.. :((

7 comments:

சி.பி.செந்தில்குமார் said...

ஃபோட்டோவுடன் பகிர்ந்திருக்கலாம்?

சி.பி.செந்தில்குமார் said...

>>ஆதரிப்பவர்கள் எதிர்ப்பவர்கள் தாண்டி நம்மைப் போன்ற பொது ஜனமே அதிகம் என்பதையும் மறந்து விடுகின்றன கழகங்கள்

வெல் செட்

உமா கிருஷ்ணமூர்த்தி said...

விரைவில் சேர்க்கிறேன் நேரம் இல்லாமல் சேர்க்கவில்லை புகைப் படங்களை

Rekha raghavan said...

//எந்நேரம் வேண்டுமானாலும் பறிக்கப் படலாம் அல்லது ஆட்குறைப்பு செய்யப் பட்டால் அதில் நாமும் ஒருவராக இருப்போமோ என்ற பதட்டநிலை உங்களுக்கு வருமா வராதா?//
ஆரம்பிச்சுட்டாங்க. மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. இன்னும் என்னவெல்லாம் வரப்போகுதோ?
நானும் அண்ணா நூலகத்துக்கு சென்று வாயைப் பொளந்து வியந்திருக்கிறேன். அந்த நூலகத்தை மாற்றுவதா?

Unknown said...

சரியா சொன்னீங்க!!

jroldmonk said...

நடுநிலையான நல்ல பதிவு.படங்களின் தேர்வும்,உபயோகித்த விதமும் நன்றாக உள்ளது.

Unknown said...

அன்ன நூலகத்தை பற்றி தெள்ளத்தெளிவாக விமர்சித்துஆட்சியலார்களையும் விலாசியது மகிழ்ச்சி.