Monday, February 28, 2011

ரசித்"தேன்"

என் தோழியின் வீட்டிற்கு சென்று இருந்தேன்..அவளுக்கு அக்கா மகள் வெகு சுட்டி.ஆறு வயது அவளுக்கு..நாங்கள் அனைவரும் தோழியின் அக்காவின் திருமண ஆல்பத்தை பார்த்துகொண்டு இருந்தோம்.வழக்கமாக அணைத்து குழந்தைகளும் தன் அம்மா அப்பா திருமண புகைப்படத்தில் நான் எங்கே என்று தானே கேட்பார்கள் இந்த குழந்தை கேட்கவே இல்லையே என்று தோழியின் அம்மாவிற்கு சந்தேகம்..எனவே அவள் வாயை கிண்டுவதற்காக அவளிடம் " எங்கே இந்த புகைப்படத்தில் உன்னை காணோம்..உங்க அப்பா அம்மா கல்யாணத்துல ஏன் நீ இல்லை ?" என்று கேட்க அவளிடமிருந்து சற்றும் யோசியாமல் வந்த பதில் இதோ ...:

" ஏன் ஔவா(பாட்டி) உங்களுக்கு எதாச்சும் அறிவிருக்கா ..?யாருக்காச்சும் கல்யாணம் ஆகும் போது குழந்தை இருக்குமா..?கல்யாணம் ஆனப்பறம் தான் குழந்தை பிறக்கும்..அப்புறம் எப்டி நான் எங்க அப்பா அம்மா கல்யாணத்துல இருப்பேன்...அவங்க கல்யாணம் பண்ணிகிட்ட அப்புறம் தான் நான் பிறந்தேன்..சரியா ..இது கூட தெரியாதா உனக்கு..?" 



அதே போல பிறிதொரு சமயத்தில் அவங்க பாட்டியிடம் உங்க கூட பிறந்தவர்கள் எத்தனை பேர் என்று கேட்க ஒன்பது பேர் என்று சொல்லி இருக்கிறார்கள்..ஒன்பது என்றால் எத்தனை என்று கேட்டு இருக்கிறாள்..நைன் என்று சொல்லவும்..அதற்கும் ஒரு ஆச்சரியம்..

"ஏன் பாட்டி நைன் பிள்ளைங்களை உங்க அம்மா எப்படி பெத்தாங்க..அவங்க அதனை பேருக்கும் புவா எப்படி ஆக்கி போட்டாங்க..துணிமணி துவைக்க ரொம்ப கஷ்டமா இருந்திருக்காதா?எங்க அப்பா அம்மா கு நான் அண்ணா டூ பிள்ளைங்க தானே...அதே மாதிரி ஏன் அளவா பெத்துக்க உங்க அம்மா ?" என்று அதிக சமூக அக்கறை [?] யோடு கேட்டிருக்கிறது பிள்ளை.

இனி வருகிற காலத்தில் நமக்கே இவர்கள் பாடம் எடுப்பார்கள் போலும்.

***************

வழக்கமாக அஞ்சா நெஞ்சரை எப்பொழுதும் வித விதமாக பெயர் சொல்லி அழைத்து குளிர வைப்பது ஆல் அல்லகைகளுடைய வழக்கம்.இந்த தடவை சனவரி (ஜனவரி அல்ல தமிழ் மாநாடு கொடுத்தது.)முப்பது ல பிறந்த நாள் (சாமி ஆறு மாசம் முன்னாடியே கொண்டாடுராங்கப்பா ) காணும் எங்கள் கலைஞரின் "குமுகி " என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்...
எனக்கு ஒன்னும் புரியல.குமுகி ன்னு ஏன் சொல்றாங்க...ஒரு வேலை கும்மு கும்மு ன்னு ஆளுங்களை கும்மி எடுக்கரதாள தான் இந்த பேரு வச்சுருப்பாய்ங்களோ  அனுபவஸ்தனுங்க...
யோசிசுகிட்டே வீட்டுக்கு வந்து கேட்டேன்.குமுகி ண்ணா மதம் பிடிச்ச யானையவே மடக்கற சக்தி கொண்ட யானையாம் அது பேரு தான் குமுகி யாம்...அடேங்கப்பா...
ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ
*****************
மிக சமீபமாக நான் சென்ற இடம் ஈஷா தியான மையம்...
மிக அருமையான சூழலில் அழகாக அமைந்திருந்தது.வெள்ளிங்கிரி மலைச்சாரலில் அமைந்து இருக்கிறது.கண்ணை கவரும் கட்டிடங்கள் இல்லை.மிக எளிமையாக கட்டப்பட்டு இருக்கிறது.அந்த இடம் நோக்கி செல்கின்ற பொழுதே சுற்றி உள்ள மலைகளின் அழகை ரசித்து கொண்டே செல்லலாம்.ஆம் அப்படியே மேகம் மிக நெருக்கமாக தெரிகிறது.சற்று புல்லரிக்கிறது.ஏதோ வேறு உலகத்திற்கு செல்வது போன்று. பெரிய நந்தியின் வரவேற்பிற்கு பின் உள்ளே செல்வதற்கு முன்பே ஒரு சிறிய விளக்கம் கொடுத்து அனுப்புகிறார்கள்.லிங்க பைரவி...பார்க்க சிறு பயத்தோடு பரவசமும் தருகிறது.தீர்த்த குண்டம் ..அதிலே பாதரச லிங்கம்..அதையடுத்து தியான lingam.குண்டூசி விழுந்தாலும் சப்தம் கேட்கும்.அங்கே மிக பிரம்மாண்டமான சிவன் ஆதி சேஷனின் அரவணைப்பில்பார்த்து கொண்டே இருக்கலாம் போல இருந்தது...வெளியே வர மனமே இல்லை..கண்டிப்பாக சென்று வர வேண்டிய இடம் 
**************
///தலைவிதி என்னும் வார்த்தை கவலைக்கு மருந்தானதே//

சமீபத்தில் விதியை நம்புபவர்கள் நம்பாதவர்கள் பற்றிய நீயா நானா சுவராசியமாக இருந்தது.அதில் ஒரு பெரியவர் இதை தான் சொன்னார்.எனக்கு ஒரு விஷயம் கிடைக்கவில்லை என்று நான் கவலைப்பட்டு அதிலேயே மூழ்கி கிடந்தால் பைத்தியம் பிடிக்கும்.அதற்கு விதி என்று பெயர் சொல்லி விட்டு மனதை திடப்படுத்தி கொண்டு அடுத்த வேலை பார்ப்பதே நலம்.நம் மனதை ஆறுதல் படுத்தி கொள்ள இந்த விதி என்பதன் மேல் பழி போட்டு கொண்டால் மட்டுமே அது இயலும் என்றார்..
உண்மை என்றே தோன்றியது
***************
பானர் களுக்கும் போஸ்டர்களுக்கும் பெயர்போன மதுரையில் தற்பொழுது ஆர்ப்பாட்டம் (?) நடத்த வரும் "அம்மா"வை வரவேற்று வைக்கப்பட்டுள்ள பேனர் என்னை கவர்ந்தது.அதில் அநீதியை ஒழிக்கஅம்மா ஆட்சி என்ற வாக்கியத்தில் அநீதி என்பதன் அருகில் அடைப்புக்குறியில் ( அ + நிதி ) என்று போட்டு இருந்தார்கள். படித்து விட்டு ரசித்து சிரித்தேன்.எப்புடித்தான் யோசிக்கிறாய்ங்கன்னே தெரியலப்பா ..
******************************************************************************
புது மண்டபத்தில் வளையல் பாசி வாங்க ஒவ்வொரு இடத்திலா விலை கேட்டோம் .ஒரு இடத்தில விலை கூட சொல்லவும் "என்ன இங்கே கூட சொல்றிங்க அங்கே கம்மியா சொல்றிங்களே " ன்னு சொன்னதுக்கு அதுக்கு சட்டென்று கடைக்காரர் "ஏம்மா அப்போ ஒவ்வொரு இடத்திலையும் விலை கேட்டுகிட்டே தான் வர்றீங்க ரொம்ப நேரமா அப்போ ஒன்னு கூட எங்கேயும் இதுவரைக்கும் வாங்கல ;அப்படிதானே...?" என்றார்.நிஜமாகவே சிரித்து விட்டேன். ஏனென்றால் உண்மை அதுதான்.
ஒரு நாலு இடத்தில விலை விசாரிச்சு வாங்கறது தப்பாங்க?
******************************************************************************
ஒரு இரவு நேரத்தில் மிகுந்த மன வருத்தம் திடீரென்று...ஏனோ வேதனையாக இருந்தது..வெளியே சொல்லாமல் தனிமையில் இருந்து விடுபடவும் வேதனையை ஒதுக்கி வைக்கவும் சற்று நேரம் தொலைக்காட்சியில் ஒரு நகைச்சுவை சானலை வைத்தேன்..யதேச்சையாக அதிலே மதன்பாப் பேசிய வார்த்தைகள் சட்டென்று என் கவனத்தை ஈர்த்தது.ஷிவ் கேரா என்ற நபரை பற்றி பேசிவிட்டு அவர் கூறியதாவது.."பிரச்சனைகளை எதிர்கொள்ளுங்கள் நிச்சயம் அவர் சாதித்தது போல் உங்களாலும் சாதிக்க முடியும்.வாடி உட்காருவதை விட தைரியமாக எதிர்கொள்ளுங்கள் ..முடியும் என்று மனதார நினையுங்கள் ..நான் வெறும் போஸ்ட் மேன் தான்..இதை உங்களிடம் சொல்ல சொன்னது கடவுள்..அவர் சொல்ல சொன்னதை உங்களிடம் அப்படியே சொல்லிவிட்டேன்..அவர் உங்களை கைகளில் தாங்கி கொண்டு இருக்கிறார் என்பதை மறக்காதீர்கள் .நல்லது நடக்கும்..நிம்மதியா தூங்குங்க.." அந்த நேரத்தில் மிக தேவையான அந்த ஆறுதலும் வார்த்தைகளும் கொஞ்சம் நெகிழ செய்தது மட்டுமல்லாமல் வருத்தத்தை தூர வைத்துவிட்டு நிம்மதியாக தூங்க உதவியாகவும் இருந்தது..மிகவும் ரசித்தேன்.
*********************************************************************************
என் தோழியின் வீட்டிற்கு சென்று இருந்தேன்..அங்கே அவள் அக்காவிற்கு ஒரு சுட்டி பெண்..இரண்டாம் வகுப்பு படிக்கிறாள்..அவர்கள் வீட்டில் இருந்த பெட் இல் அவள் எழுதி இருந்ததை மிகவும் ரசித்து சிரித்தேன்...
அவள் எழுதி இருந்தது இதுதான் :
M.Rithika
2nd B bed
அவளுடையது என்பதற்கு இப்படி சான்று பொறித்து இருந்தாள்.
*********************************************************************************


மதுரை காந்தி மியுசியத்திற்கு வீடு உபயோக பொருட்கள் கண்காட்சி கு சென்று இருந்தேன்.காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அங்கே பேராசிரியர் கு.ஞான சம்பந்தன் பட்டி மன்றம் அப்பொழுது தான் ஆரம்பிக்கப்பட்டு இருந்தது.உடனே என் அண்ணன் மனைவியிடம் வாங்க அவர் நல்லா பேசுவார்.நல்லா இருந்தா கேட்போம்.ஒரு ரெண்டு நிமிஷம் அப்புறம் அங்கே போய்டுவோம் நு சொல்லிகிட்டே அவர் பேசுவதை தள்ளி நின்று கவனிக்க ஆரம்பித்தோம்.அப்பொழுது அவர் அங்கே அங்கே நின்று கொண்டு இருப்பவர்கள் இருக்கையில் வந்து அமருங்கள்.ஒருவேளை நின்று கொண்டு கொண்டு இருப்பவர்களுக்கு இப்படி கூட ஒரு எண்ணம் இருக்க கூடும் நன்றாக இருந்தால் கேட்போம் இல்லாட்டி போய்டுவோம் நு நான் நினைத்ததை அப்படியே பட்டென்று போட்டு உடைத்தார்.கூட்டத்தில் ஒரே சிரிப்பலை.எதிரே இருப்பவர்களின் மன நிலையை அறிந்து சமயோசிதமாக அவர் பேசி சிரிக்க வைத்ததை மிகவும் ரசித்தேன்.


No comments: