Wednesday, June 10, 2015

சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே...

பாடல் : சிறிய பறவை
படம் : அந்த ஒரு நிமிடம்
இசை :இளையராஜா
பாடலாசிரியர் : வைரமுத்து
பாடியவர்கள் : SPB,ஜானகி
பாடல் என்ன படம் இசை யார் என்றே அறியாத காலத்தில் அண்ணனின் TDK கேசட்டின் மூலம் அறிமுகமான பாடல்களில் ஒன்று.. இது இரவு கேட்பதற்கு, இது பகலில் கேட்பதற்கு , இது ஒரே மாதிரி பீட்ஸ் , இடையில் அதிரடியாய் உறுத்தல் வராத விதத்தில் பாடல்களின் தர வரிசை பிரித்து வைத்திருப்பார் என் அண்ணன்.   அப்படியாக என் மனத்தைக் கொள்ளை கொண்ட பாடல். இப்பாடலை ஒலியைச் சத்தமாக வைத்தும் பீட்ஸ் ரசிக்கலாம்.   அன்றி மெலிதாக, இரவு நேரத்தில் ஓர் ஏகாந்தத் தருணத்திலும் கசிய விடலாம்.  எச்சூழலுக்கும் கேட்க இனிமை. சில நேரம் பாடலுக்காக இசையா, இசைக்காக பாடலா எனக் குழப்பம் வரும்..  இந்தப் பாடல் எழுதிய பின்பே இசையமைக்கப்பட்டதோ என்றே தோன்றும் எனக்கு.   சிறிய பறவை என்று தான் பாடலின் ஆரம்பம் என்பதை அறிந்தே அமைத்தது போல ஆரம்ப இசை அப்படியே கீழிருந்து மேலே எழும் ஒரு பறவை பறக்க ஆயத்தமாகி பின் எழுவது போல வயலின் ஆர்ப்பரித்து எழும்.

 பல்லவி முடிந்ததும் அன்பு லைலா என்ற வரிகளுக்காகவே கோர்த்தது போல இடை இசை (.59-1.01 &1.04-1. 06) இருக்கும் . கவனித்தால் தெரியும்.கருவி பெயர் பரிட்சயம் இல்லாவிடிலும் பொதுவாக மொகலாய கதைகள் கொண்ட பாடல் படங்களில் அந்த இசை வரும்.

SPB-ஜானகி போன்ற ஜோடிகள் இனி கிடைப்பது அரிது.. டூயட் பாடல்களில் அப்படியே ஒரு ரொமாண்டிக் mood ஐக் கொண்டு வந்து விடுவார்கள் .. கேட்பவர்களுக்கு ;)  இசையின் போக்கைத் தொந்தரவு செய்யாமல் இருவரும் செய்யும் கொஞ்சல்கள் பாடலின் அழகுக்கு அழகு சேர்ப்பவை.
 SPB &கமல் ஜோடி பற்றி தனிப் பதிவுகளே எழுதலாம் ஆராய்ச்சி செய்து .. அந்த அளவுக்கு அவர்களுக்குள் ஒத்துப்போகும் :)

அன்பு லைலா...ம்
நீயே எந்தன் ஜீவ சொந்தம் (ஒரு சிறிய சிரிப்பு)
நீ சிரித்தால் ..
பாலை எங்கும் பூ வசந்தம்
காதலர்களுக்கு இடையேயான உரையாடல் ஒரு கலை நயத்தோடு சொற்களால் அழகாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் . ராஜா- வைரமுத்து ஜோடியில் மற்றுமோர் முத்து மணி .வருகவே என்ற ஒலியில் ஓர் அழைப்பை உணர முடியும்.

அடுத்து 2.04இல் ஆரம்பிக்கும் இடை இசை ,  முதல் இடை இசையில் இருந்து முற்றிலும் வேறாக இருக்கும்.   ஒரு rich orchestration என்பார்களே அதை இந்தப் பாடலில் நாம் உணரலாம்.   ஸ்வரங்கள் பதனிச என வரும்..அந்தக் காலத்தில்  ஆடத் தெரியாதவர்களுக்காகவே கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பமோ என நினைக்கும் அளவுக்கு இருக்கும் ஓர் ஆளை நான்காய் திரையில் காட்டுவது :)  ஓர் மாபெரும் சபையினில்,  ஆடல் பாடல் நிகழ்ச்சி நடப்பதை பார்த்து அறிதல் மட்டுமல்ல  உங்கள் செவிக்கும் அதைக் காட்சியாக்க வேண்டும்.   அதை அப்படியே பிறழாமல் செய்திருக்கும் இரண்டாவது சரண இடையிசை.
இரண்டாவது சரணத்தில் நான் எப்பொழுதுமே ரசிக்கின்ற வரிகள்

"சோழன் குயில் பாடுகையில் சோலைக் குயில் ஓய்வெடுக்கும்
மெல்லினங்கள் பாடு கண்ணே வல்லினங்கள் வாய் வலிக்கும் "

இந்த வரிகளாகட்டும் அதற்கு உயிர் கொடுத்து உருகும் SPB ஆகட்டும் ஒரு பெரிய கை தட்டல் :) சோழன் குயிலுக்கும் சோலைக் குயிலுக்கும் உள்ள வித்தியாசத்தை அவர் உச்சரிப்பில் உணர முடியும் .
வல்லினங்கள் வாய் வலிக்கும் என்பதில் ஓர் அக்கறை தெரியும்.. வல்லினங்கள் எனும்போது அவர் எப்படி உச்சரிக்கிறார் என்பதைக் கவனியுங்கள்.செம்ம :) வலிச்சுடுமோ எனும் பதட்டமும் இருக்கும்.

யப்பா..டேய்..சாமி...என்னாம்மா லவ் பண்றீங்கடா...ன்னு தோன வைக்கும் :) தமிழோடு என்ன ஓர் அழகான ஓர் உவமை.

"அன்பனே இளைய கம்பனே
கவிதை நண்பனே நம்பினேன்
சொர்ணமே அரச அன்னமே
இதழில் யுத்தமே முத்தமே "

இரண்டாம் சரணத்தில் வரும் இளைய கம்பனே என்பது அம்பிகாபதி.கம்பரின் மகன் .அமராவதியுடனான இவரது காதல் புகழ்மிக்கது.அதை அழகாகப் பிரதி பலிக்கும் வரிகள்.

சொந்தமே இன்பம் தந்தது
கங்கையே இங்கு வந்தது
தென்றலே இங்கு நின்றது
நன்று தான் சந்தம் என்றது
கன்றுகள் ரெண்டு இன்று போல் என்றும் வென்று வாழ் என்றது..
இதுவரை முதல் சரணத்திற்கும் இரண்டாவது சரணத்திற்கும் எவ்வளவு வேறுபாடு ..எனினும் எங்கேனும் ஓர் உறுத்தலையாவது நம்மால் உணர முடிகிறதா?அது தான் இசை .ராஜாவைக் கொண்டாட ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன ஆயிரமாயிரம் பாடல்கள் இது போல இருக்கின்றன :)
முதலாம் சரணம் "வருகவே" போலவே இங்கு "வாழவே" அப்படியே இணையும் .
மூன்று சரணங்கள் கொண்ட பாடல்கள் பெரும்பாலும் இப்பொழுது வருவதில்லை. அடுத்த இடையிசை அப்படியே மேற்கத்திய பாணியைத் தொட்டுச் செல்லும்..
ஏனெனில் சரணம் ஆரம்பம் அன்பு ரோமியோ என இருக்கும்
சரண முடிவில் ,இப்படி மூன்று விதமான (லைலா-மஜ்னு), அம்பிகாபதி அமராவதி , பின்னர் ரோமியோ -ஜூலியட் )கலந்த கற்பனையை மரத்தில் சாய்ந்து கொண்டு கமல் கண்டு கொண்டிருப்பார். இந்த மனசு இருக்கே அது திடீர்னு எங்க வேணா பறக்கும்..ஆனா அதைச் செயல் படுத்துவது அவ்வளவு சாத்தியமா ?ராஜா அதில் கமலுக்கு நன்கு ஒத்து உழைத்திருக்கிறார் .பாலா அதை உணர்ந்திருக்கிறார். சரண முடிவில் வரும் அந்தச் சிரிப்பு ..யப்பா என்னா கிக்..:))  இது கமலுக்காகவே என பரிசளித்து இருக்கிறார் SPB.
"பழைய கனவு உனக்கு எதற்கு கலையட்டுமே" (திரும்பவும் பல்லவிக்கு வர்ற அந்த  வர்ற பீட்ஸ் இங்க வந்து சேர்ந்துக்கும் .. சரணத்தில் மட்டும் வேணாம்  நீ கொஞ்சம் ஓரமா நில்லுன்னு சொல்லி வச்சிருப்பார் போல ) போதும் நம்ம கனவு கண்டது இனி காதலுக்கு இலக்கணமா அவங்களைச் சொன்னது போல இனி நம்மையும் உலகம் புகழட்டும் என்று முடித்திருப்பார்கள்

கனவு கலையலாம் ..பாடல் தந்த பாதிப்பு கலையாது :)



2 comments:

இரசிகை said...

muthal muraiya varukiren
vaaasikiren

pidichurukku.
:)

vazhthukal

S.P.SENTHIL KUMAR said...

அன்புடையீர்,

வணக்கம்.
தங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வருகை தந்து சிறப்பிக்கவும்.

blogintamil.blogspot.in/2015/08/blog-post_16.html

நன்றி

அன்புடன்,

எஸ்.பி.செந்தில்குமார்.