Saturday, June 9, 2012

கதம்பம்..!

தோழி ஒருத்தியின் சகோதரிக்கு கிட்னியில் பிரச்சனை அதைப் பற்றி ஆட்டோவில் பேசிக் கொண்டே வந்த பொழுது ஆட்டோக்காரர் சொன்ன ஒரு தகவல் பெரும் அதிர்ச்சி அளித்தது .பொதுவாக பெரும்பாலோனோர் மினரல் வாட்டர் என்ற பெயரில் கேன் தண்ணீர் (25 லிட்டர் ) தான் வாங்குகிறோம் வீடுகளில் .அதிகம் அலுவலகங்களிலும் அதையே பார்க்க முடிகிறது.ஆனால் அதை விட சுகாதாரமற்ற தண்ணீர் வேறு இல்லையாம்.வீட்டில் பயன்படுத்தும் குடம் ,பானை கூட நாம் தான் கை வைத்து கழுவுகிறோம்.அந்த கேன் களை கழுவுவதற்கு என்று கெமிக்கல் ஊற்றி விடுவார்களாம்.அதனால் அது அவ்வளவு சுகாதாரமானது அல்ல என்று குண்டைத் தூக்கிப் போட்டார்.நீரைத் தூய்மையாக்கி குடிக்கும் வேறு கருவிகள் வாங்கி பயன்படுத்துவது நல்லது கவனம் மக்கள்ஸ்..! 
***********************************************************************
அம்மாவுக்கு திடீர் என உடல்நிலை மோசமாகிவிட்டது.தூங்கிக் கொண்டிருக்கும் பொழுதே தலைக்குள் ஏதோ செய்கிறது வாந்தி வருவது போல இருக்கு கிறுகிறுப்பு என்றெல்லாம் பீதி கிளப்பி விட்டுவிட்டார்.அத்தனை பதட்டமும் வந்து ஒட்டிக் கொண்டது.வெளியே காட்டிக்காமல் இருக்கவே சிரமப்பட்டேன்.இத்தனைக்கும் முடிந்தவரை அதிகம் மன தைரியம் உள்ள ஆள் நான் தான்.ஆனால் இந்த விடயத்தில் ஆணி வேரே ஆடிப் போயிருந்தது.அப்பாவின் மறைவே இன்னமும் ஆற்றமுடியாத ஒன்றாக இருக்கும் பட்சத்தில் அம்மாவிற்கு உடல் மோசமானதைத் தாங்கவே முடியவில்லை.மருத்துவமனை அழைத்துச் சென்றேன்.வழக்கமாய் அம்மாவுக்குச் செக் அப் செய்யும் டாக்டர் தான்.பொறுமையாக கேட்டுவிட்டு அவர் கொடுத்த ஆறுதல் வார்த்தைகள் நிச்சயம் மறக்கவே முடியாத ஒன்று."எதுவுமே இல்லை என்று பொய் சொல்ல மாட்டேன்.இரும்பில் செய்த உடம்பல்ல.வந்தால் எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேணும்.ரத்த அழுத்தம் தான் உணவுக் குழாய் புண் ஆகி இருப்பதால் அது போன்ற உணர்வு வரவே செய்யும்.வேறு பயப்படும்படி ஒன்றுமில்லை.பயமே பெரிய வியாதி.அது இருந்தால் எந்த நோயும் குணப்படுத்தவே முடியாது.சும்மா தொட்டதுக்கெல்லாம் டெஸ்ட் அது இதேன்றால் செலவு தான் ஆகும் என்றார்.(இதுவே சென்னை கோவை என்றால் கற்பனை செய்து பாருங்கள் எத்தனை ஆயிரம் செலவுகள் ஆகியிருக்கும் ஆய்வின் முடிவில் ஒன்றுமில்லை என்று சொல்ல #ஒய் மதுரை இஸ் காட் :) இறுதியில் மெதுவாக தோளில் தட்டி ஒரு மகன் போன்று ஆறுதலாய்ச் சிரித்தது இன்னமும் மதிப்பு கூடிற்று.என் மனத்திலும் அப்பாடா என்ற ஆசுவாசம் வந்தது பாருங்கள் அதை வெறும் வார்த்தைகளில் அந்த உணர்வை சொல்லிவிட முடியாது.என்னதான் நாம் பேசினாலும் ஒரு ப்ரோபெசனலிஸ்ட் பேசும் போது அதற்கு தனி மரியாதை தான்.அதனால் தானோ என்னவோ மருத்துவத் துறையில் இருப்பவர்களை வெறும் சாமான்யர்களாக நம்மால் எண்ண முடியவில்லை.உயிரைக் காப்பாற்றும் வேலையைச் செய்பவர்கள் தரம் இறங்கி செய்யும் வேலைகளை ஜீரணிக்கவும் முடிவதில்லை
****************************************
பதின்ம வயதுகளில் படிக்க முடியாமல் வசதியின்றி திருமணம் செய்து வைக்கப்பட்ட தோழிக்கு கணவர் இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு இறந்து போனார்.கணவரின் அலவலகத்தில் கருணை அடிப்படையில் வாரிசு வேலை கிடைத்தது.சில வருடங்களுக்குப் பிறகு இப்பொழுதுதான் மனம் மாறி தோழி மறுமணம் செய்ய முடிவெடுத்து இருக்கின்றாள்.விஷயம் கேள்விப்பட்டு மிகுந்த மகிழ்ச்சி.அழகு,அடக்கம்,எவரையும் நிமிர்ந்து பார்க்காத ஒழுக்கம் அனைத்தும் ஒருங்கே சேர்ந்த பெண் என பழகிய இரண்டு ஆண்டுகளில் நன்கு அறிவேன்.ஆனால் இதுவரை அவர் வருமானம் அனுபவித்த பெற்றோர் அதை இழக்கவிரும்பாமல் முன்பே அவள் திருமணம் செய்யவிருக்கும் நபருக்கும் உறவு இருந்தது போல அக்கம்பக்கம்,வேலை பார்க்குமிடம்,உறவினர் மத்தியில் அசிங்கப்படுத்திவிட்டனர்.பெற்றோரே இப்படி செய்வது அதிர்ச்சியும் வேதனையும் தாளாமல் தோழி கதறி அழுதது என்னவோ போல் இருக்கின்றது.தனியாய் இருக்கும் பெண் தானே என்ற சீண்டல்கள்,வக்கிரப் பார்வைகள் என்று ஒவ்வொன்றிலும் தப்பித்து வருவது எவ்வளவு சிரமம் என்பது கணவர் இல்லாத பெண்களுக்குத் தான் தெரியும்.வயதின் தேவைக்கே திருமணம் செய்தால் கூட தவறென்ன?அறுபது வயதில் மனைவி இறந்த மூன்றாம் மாதம் திருமணம் செய்து கொண்டார் உறவினர் ஒருவர்.ஆணைப் பழிக்காத சமூகம் பெண்ணைப் பழிப்பதை மட்டும் எப்பொழுது நிறுத்தப் போகின்றது?தனிப்பட்ட வலிகள்,ஆழ்ந்த வேதனை ,இளமையில் தனிமை புரியாமல் துணை இல்லாதவர்களை கிண்டல் செய்பவர்களைப் பார்த்தால் அருவெருப்பாகவே இருக்கின்றது
***********************************************

2 comments:

Unknown said...

நல்லது நடக்கும்

Giri Ramasubramanian said...

1) அம்மா விரைவில் நலமடைய பிரார்த்தனைகள்!


2)
//பெற்றோரே இப்படி செய்வது அதிர்ச்சியும் வேதனையும்//

பெற்றோரே இப்படி இருப்பார்களா என்று நம்பக் கடினமாக இருந்தாலும், “காலம் காலமாக” இது ஆங்காங்கே நடக்கும் ஒரு தொடர் நிகழ்வுதான். சினிமா நடிகைகளுக்கு மட்டுமல்ல, சாமானியர்கள் உலகிலும் நிறைய உதாரணங்கள் உள்ளன.

என்ன செய்ய, சில நேரங்களில் வாழ்க்கை சிலருக்கு அப்படித்தான் (”த்” போடலாம்தானே? :)) ) அமைந்துவிடுகிறது!