Monday, July 18, 2011

பெருமூச்சு ...4!

உன் மனமெனும் கருவறையில்
பத்திரமாக படுத்துகிடக்கின்றது 
என் எதிர்காலம் 
"தாயுமானவன்"
*********************
எனை எவ்வளவு பிடிக்கும் என 
கைகள் விரித்து சொல்லாதே 
அவ்வளவு பேராசைக்காரி இல்லை நான் 
என் "மெய்"அளவு கை சுருக்கி 
"மெய்" சொல் அதுபோதும்
**********************************
உன்னை எவ்வளவு பிடிக்கும் 
எனக் கேட்டால் தெரியாது
உன்னளவு மட்டுமே பிடிக்கும் 
உன்னைத் தவிர வேறு எதுவும் சிறந்ததில்லை 
உதாரணம் சொல்வதற்க்குக்  கூட...
************************************************* 

வார்த்தைகள்வெற்றிடமாகின்றன
நினைவுகளில் நீ நிரம்பி வழியும் பொழுது
*******************************************
சட்டென்று சமாதானம் செய்துவிடும் 
உன் அதிசய வித்தைகள் 
கற்கவே கோபம் கற்கின்றேன்
******************************
என் கனவுகள் ஜென்ம சாபல்யம் 
அடைகின்றன 
நனவுகளாக நீ தீண்டியதால்
************************************ 
ஏதோ பண்டிகை என்கிறார்கள் 
திருவிழா என்கிறார்கள் 
நீ வருகின்ற வரையில்
எனக்கு இது மற்றும் ஒரு நாளே !

*****************************************
நீ சரணடையும் தருணங்களில்
உன் கைகளுக்குள் அடங்கி
சரணடைவதின் இன்பத்தை உணர்கின்றேன் நானும்..
*************************************************************************
என் வெட்கங்கள் 
தவம் கலைகின்றன 
உன் பட்டுக் 
கை பட்டு..
*************
எத்தனை முறை 
எதிரெதிர் கருத்துக்கள்
நமக்குள் வந்தாலும்
நாம் "முட்டி"க்கொண்டதில்லை..
*********************************************
உன் அன்பு அதிகமாகிவிட்டது 
என்று சொல்ல விருப்பமில்லை
என்றைக்கு குறைவாக இருந்தது
இன்று புதியதாய் கூடி விட்டது
எனச் சொல்வதற்கு
***************************

மறைந்திருந்து வெளியேறினால்
சட்டென்று அணைக்கின்ற 
காதலன் 
"மாமழை"
************
முகம் நோக்கித் தூறும்
சாரல்கள் யாவும் 
என் செல்லக் கோபங்களை 
சமாதானம்செய்யத்
தீண்டும்
உன் விரல்கலாகின்றன
"மம்ம்ம்மாமழை"
***********************
எண்ணிடாத
மழைத் துளி அளவிற்கு
 எண்ணிலடங்காத  
காதல்
"மாமழை"
*************
எங்கோ இருக்கும் உன்னை 
எந்நேரமும் என் ஆவி 
தழுவிக் கொண்டே தான் இருக்கின்றது 
கைகளுக்குள் எப்பொழுது சிக்கப் போகின்றாய்..
****************************************************************
விலகி செல்லாதே அருகில் வந்தென்
இதழ் ஒற்றி(று) ப்பிழை திருத்து 
*******************************************
நம் ஊடல் பொழுதுகளில் 
பெரும்பாலும் மௌனங்கள் மட்டுமே
அதிகம் பேசிக் கொண்டிருக்கின்றன
*************************************************
வெற்றிடம் மட்டுமே நிறைந்து
வழிகின்றது
நீ இல்லாத் தருணங்களில்
************************************
யதார்த்தமாய்க் காட்டிக் கொண்டு
உலவும் தருணங்கள் முழுவதும்
நீறு பூத்த நெருப்பாய் உன் நினைவுகள்
கனன்று கொண்டே..     
 ***************************
பொய்யறிந்த கண்களின் 
கேலியில் உன்னிடம் 
மாட்டிக்கொண்ட மெய்யறிந்து
வெட்கித் தலைகவிழ்ந்தன 
என் இதழ்கள் பற்களுக்குள்...
*************************************
கழுத்து வளைவுகளுக்குள் 
நீ புதையும் பொழுதெல்லாம் 
உயிர்த்தெழுகின்றது 
என் மோகம் 
*****************

1 comment:

கிராமத்தான்-சரவணன் said...

எனை எவ்வளவு பிடிக்கும் என
கைகள் விரித்து சொல்லாதே
அவ்வளவு பேராசைக்காரி இல்லை நான்
என் "மெய்"அளவு கை சுருக்கி
"மெய்" சொல் அதுபோதும்


Excellent! :-)