Friday, May 4, 2012

சித்திரைப் பெருவிழா

பதிவு எழுதுங்கள் என்று நண்பர் கேட்கும் வரை தோனல.நிச்சயம் இரு பெரும் 
திருவிழாக்கள் தான்.இவ்வளவு பேர் மதுரையில் இருக்கின்றார்கள் என்பதே இது 
போன்ற திருவிழா காலங்களில் தான் தெரியவரும்.சித்திரை  அமாவாசை அன்று அழகர் கோவிலும் மூன்றாம் நாளில் மீனாட்சிக்கும்  கொடி ஏற்றம் நடக்கும்.அன்று முதல் சாமி மாசி வீதிகளில் ஊர்வலம் வரும்.பிரியாவிடை அம்மன் பற்றிய கதை எதுவும் அறியேன்.ஆனால் இந்த 
திருவிழா காலங்களில் சிவனோடு உரிமையாக அமர்ந்து வருவது அவங்கதான்.
கோவிலில் அவருக்கு என்று தனி சன்னதி எல்லாம் இல்லை.உற்சவ மூர்த்தி 
மட்டுமே.

மீனாட்சி தனியாகத் தான் வருவார்.தேரோட்டம் அன்று மாலையில் 
மட்டுமே மூன்று தெய்வங்களும் ஒன்றாக வரும்.அழகர் கோவில் கள்ளழகர் தான் திருமணம் முடிக்க வருகிறார் 
அவர் வருமுன் திருமணம் கோவித்துக் கொண்டு வைகை ஆற்றோடு 
செல்கிறார் என்று செவி வழி செய்திகள் உண்டு.அது உண்மை அல்ல.
உண்மையில் திருக்கல்யாணம்,அழகர் ஆற்றில் இறங்குதல் இரு வேறு
விழாக்கள்.திருமலை நாயக்கர்தான்ஒன்றாக ஒரே மாதத்தில் மாற்றி
அமைத்தது.திருப்பரங்குன்றம் முருகனும் கல்யாணத்திற்கு வந்துவிடுவார்.
மதுரை சுந்தரராஜப் பெருமாளே இங்கே தாரை வார்த்துக் கொடுப்பது.சைவ 
வைணவச் சண்டைகளை திசை மாற்ற என்று பின்னாளில் இது புரிந்தது.மூன்று
 ஸ்தனங்களை உடையவள் மீனாட்சி என்றும் அவளுக்கே உரிய கணவனை 
பார்க்கும் பொழுது மூன்றாவது மறையும் என்றும் கதையில் உண்டு.மீனாட்சி
 சன்னதிக்குள் சுவற்றில் மீனாட்சி கதையை சிற்பமாக வடித்து இருப்பார்கள்.
மாசி உலாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வு ஒவ்வொரு வாகனத்தில் கடவுள் எழுந்தருளல்.
.மதுரை உண்மையில் ஒரு கட்டமைக்கப்பட்ட ஊர்.மீனாட்சி கோவிலை மையமாகக் கொண்டு சதுரமாக ஒவ்வொரு வீதியாக இருக்கும்.ஆடி வீதி,
சித்திரை வீதி,ஆவணி மூல வீதி,மாசி வீதி,வெளி வீதி,மாரட் வீதி இப்படி.
இறுதியில் தேரோட்டம் தான் முத்தாய்ப்பு.

திருக்கல்யாணத்தன்று சுமங்கலிப் பெண்கள் அனைவரும் பழைய கயிறு மாற்றி
 புது மஞ்சள் கயிறு அணிந்து கொள்வார்கள்.அதனால் மஞ்சள் கயிறை  தனிப்பட மக்களும்இலவசமாக போவோர் வருவோருக்கு அளிப்பதுண்டு.அது
மட்டுமின்றி பக்தகோடிகளுக்கு நீர்,மோர் பந்தல் மற்றும் உணவுப் பொட்டலம்
விசிறி என்று வழிநெடுக எவரேனும் கொடுத்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
மாப்பிள்ளை அழைப்பு பெண் அழைப்பு எல்லாம் உண்டு.திருமணம் முடிந்து சாப்பாடும் மொய்யும் கூட உண்டு:)மதுரை என்றதும் மீனாட்சி ஆட்சியா வீட்டில்  என்ற கிண்டல்கள் உண்டு.உண்மையில் கடவுளே ஆனாலும் கணவனுக்கு அடங்கிய பெண் எனக்காட்ட ஒவ்வொரு வருடமும் இரு பங்காக பிரிக்கப்பட்டு ஆட்சிக்காலம் மீனாட்சியை விட சிவனுக்குத்தான் அதிகம்கொடுக்கப்படுகிறது:)உலக அதிசயத்தில் மீனாட்சி
கோவில் பட்டியலில் இருக்குஎனத் தெரியவும் ஆங்காங்கே பெரிய அளவில் 
விளம்பரம் வைத்துஓட்டுசேகரித்தார்கள்.ஓவ்வொரு சாமான்யனும் கூட 
வெளிநாட்டிற்குஅழைத்துதன் ஓட்டைப் பதிவு செய்தும் முன்னால்கொண்டு 
வராத நுண்ணரசியல்வெளிநாட்டுத் தேர்வுக்குழு செய்தது என்றால் அது
 மிகையல்ல.பணம்இழந்ததை விடஅதிசயப்பட்டியலில் எங்கள் கோவில்
வரவில்லையே என்ற ஆதங்கம் பெரும்பாலோருக்கு உண்டு.
வாராரு ...வாராரு...அழகர் வாராரு..
அடுத்த பெரும் திருவிழா இது.திருக் கல்யாணக் கூட்டத்தை விட மதுரையைச் 
சுற்றியுள்ள கிராமத்து மக்கள் அதிகம் வருகை தருவது இந்த விழாவிற்குத்தான்.
வண்டி கட்டிவருவார்கள்.அழகரை வரவேற்று வழியனுப்பும் வரை
மதுரைவாசம்தான்.மதுரையில் சௌராஷ்டிரா இனத்தவர்கள் அதிகம்.கைத்தறி
தான் இவர்களில்  பெரும்பாலோர் தொழிலாக இருந்தது.வீதியில் பட்டு நூலை வைத்து இழைப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது ஒரு காலத்தில்.
இன்று அதெல்லாமில்லை:((இவர்களில் குல தெய்வம் தெரியாதவர்களுக்கு
குல தெய்வமாய் விளங்குவது அழகர்தான்.(சௌராஷ்டிரா தோழி கொடுத்த தகவலில் அடிப்படையில்).சாமியை நாம் சென்று கோவிலில் 
வழிபடுவதுதான் வழக்கம்.வழக்கத்திற்கு மாறாக சாமி நம்மைப் பார்க்க 
வருகிறார் என்றுதான் அத்தனை மகிழ்வாக கொண்டாடப்படுகின்றது.அழகர் 
வைகை ஆற்றில் இறங்குவதற்கு பல கதைகள் சுவராசியமாக
புனையப்படுவதுண்டு.மீனாட்சி திருமணத்திற்கு வந்தவர் தான் வருவதற்கு
முன் தன்னுடையநகலான சுந்தரராஜப் பெருமாளைவைத்து சிவன் திருமணம்
முடித்ததால் கோபம் கொண்டுஆற்றோடுதிரும்புகிறார் என்பதும்,
மண்டூக மகரிஷிக்குமோட்சம் கொடுக்கவருகிறார்என்றும் பல கதை உண்டு.
ஆனால் சிவன்முதன்முதலில்தன்பக்தன்தாகம்தீர்க்க உருவாக்கிய வைகையை
முதலில் கடந்தவர் என்றும் சொல்வதுண்டு.
உண்மையில் கள்ளர் இனத் தலைவன் வைகை ஆற்றுவரையிலான பகுதியில் 
தொடர்ச்சியாக கொள்ளையடித்து விட்டு அப்படியே தன வைப்பாட்டியான 
துலுக்க நாச்சியார் (இஸ்லாமியப் பெண்மணி) வீட்டிற்கும் சென்று வருவதுண்டு.இன்றும் கள்ளர் இனத்தவர்கள் அழகர் மலை அருகில் 
வசிக்கவே செய்கின்றார்கள்.எனவே இவர் எம்இனம் எம் தெய்வம் என்று
கள்ளழகரைதமக்கே சொந்தம்கொண்டாடுகின்றார்கள்.யாரோ ஒரு கள்வன்
எப்படி பெருமாள் அவதாரம் எடுத்தார் என யாம் அறியோம்:) ஆனால் வருடா வருடம் அழகர்வருவது அந்தக் கள்ளனின் வேடத்தில்தான்.
பூட்டியே கிடக்கும் (ஒருதடவை கூட திறந்து நான் பார்த்தது இல்லை) பதினெட்டாம்படிகருப்பு காவல் தெய்வம்.பொதுவாக சாமி பார்க்க அசைவம்
தவிர்த்து செல்லும்பழக்கம் நமக்கு உண்டு.நம்ம கிராமத்து சனங்க அதெல்லாம்
பார்க்கிறது இல்லை.கெடாவெட்டி மொட்டை அடிச்சு சாமி கும்பிட்டு
அழகரையும் பார்த்துட்டுதான் போவாங்க.அழகரை எதிர்கொண்டு அழைக்கும்
நிகழ்ச்சி எதிர்சேவைஎனப்படும்.தமுக்கம்சிக்னல் தாண்டி போக்குவரத்து
நிறுத்தப்பட்டுவிடும்.எவ்ளோதூரமென்றாலும்நடந்துதான் போகணும்
அதன்பிறகு.இருந்தாலும்போவோம்ல:) சாமிவரும் வழியில் எல்லாம்
மண்டகப்படிவைக்கப்பட்டிருக்கும்.தங்கள்  இடத்தில் சாமியை வரவழைக்கப் பணம் கட்டிஇருப்பார்கள்.அங்கே சில நிமிடங்கள் தங்கி தங்கி வரும்.
முன்பெல்லாம் ஒரு சிலதான் இருந்தன.இப்போ ஆள் ஆளுக்கு பணம் கட்டி 
வைத்திருக்கின்றார்கள்.அந்தக் காலத்தில் இருந்தே பேர் போனது ராமராயர்
மண்டகப்படிதான்.எங்கேனும்வெளியே சென்ற இடத்தில தெரிந்தவர்களை
சந்தித்துப் பேசிநேரம்சென்றுதிரும்பிவந்தால் என்ன மண்டகப்படியில்
இருந்தியா என்ற கிண்டல் இன்றளவும் உண்டு மதுரையில்.அதே போல
 உள்ளூர்ச்சானல்கள் எல்லாம் இல்லாத அந்நாளில் சாமி பார்க்க செல்ல முடியாவிடில் "ஆத்தைக் கண்டேனா அழகரை கண்டேனா?"என்ற சொல்லாடலும் உண்டு.(என் அம்மா சொல்வாங்க உங்கப்பாவைக் கட்டி 
ஆத்தைக் கண்டேனா அழகரைச் சேவிச்சேனா?":))அந்த அளவுக்கு அழகரைப் 
பார்ப்பது பெரும் பாக்கியமாக கருதப்படுகின்றது.மூன்று நாட்கள் முன்பே 
வைகை அணையில் நீர் திறந்துவிடப்பட்டுவிடும்.வரலாற்றிலேயே  முதன்முறையாக மில்லேனியம் ஆண்டா அல்லது2003ஆ சரியாகத் தெரியல)
அழகர் நீரே இன்றிஇறங்கியதாகஎன் தந்தைசொன்னதுண்டு.அன்றைய தினம்
மட்டும்அழகரைதரிசிப்பவர்கள் எண்ணிக்கை சில பல லட்சங்கள் தாண்டும்
என்றால் நம்புவீர்களா?நம்பித்தான் ஆகவேண்டும்.தங்கள் இன,சொந்த
மண்டபங்களில் 
முதல்நாளே வந்து தங்கிவிடுவார்கள்.மேலே படத்தில் பார்க்கும் கூட்டம் 
ஏதோ ஒரு மூலையின் ஒரு பகுதிதான்.கண்டிப்பா எல்லாரும் சாமி பார்க்க
முடியாதுதான்.தள்ளி நின்று நாராயணா கோஷம் விண்ணைப்பிளக்கும்.

ஒரு சொம்பில் நிறையசக்கரைவைத்துஅதில் சூடம் வைத்துக் காட்டுவார்கள்
சாமிக்கு.டிவியில்பார்த்துக்கொள்ளும் வசதி வந்தாலுமே கூட வீட்டில்
இருப்பவர்கள் குறைவே.அழகர்,கருப்பசாமி வேடமிட்டு ஆடி வருபவர்களைப்
பார்க்கவே ஆசையாக இருக்கும்.

இப்பொழுதாவது டிவி மூலம் சாமி எந்த இடத்தில இருக்கு என்று அறிய முடியும்
.அந்தக் காலத்தில் இருக்கும் இடம் எவரேனும் சுற்றி அலைந்து திரிந்தேனும் 
பார்த்து விடுவதுண்டு.டிவி பார்க்காமலே இந்நேரம் சாமி எங்கே இருக்கும் எங்கு
சென்றால் சாமி பார்க்கலாம்என்று மிகத் துல்லியமாக அம்மா சொல்வதுண்டு
(அனுபவம்).வெயிலில் வரும் சாமிக்கு நீர் பீய்ச்சி அடிப்பார்கள்.அப்படியே
நமக்கும்தான்.அதனால் அன்று வெயிலே தெரியாது.வெண்பட்டு அல்லது
பச்சைப்பட்டு உடுத்தி எழுந்தருள்வார்.பச்சை என்றால் மழை பொழியும்
விவசாயம் கொழிக்கும் என்றுநம்பிக்கை உண்டு.தேவா இசையமைத்ததிலேயே
உருப்படியான பாட்டுஅழகருக்கென்றே அட்டகாசமாக அமைந்த பாடல்
என்றால் அது வாராருவாராரு பாடல்தான்.அழகர் வரும் இடமெல்லாம் இந்தப்
பாடலை 
சலிக்காமல் ஒலிபரப்புவார்கள்(வீடியோவை பார்க்காமல் பாட்டை மட்டும்
கேட்கவும்.ஒரிஜினல் வீடியோகிடைக்கல:)வண்டியூரில் மண்டூக மக ரிஷிக்கு
மோட்சம் கொடுத்துவிட்டுதுளுக்கநாட்சியார் வீட்டுக்கெல்லாம் போயிட்டு
சாமி திரும்பிச் செல்லும்வரைமதுரை களைகட்டி இருக்கும்.வரும் பொழுது
பூப்பல்லாக்கில் வந்த தெய்வம்போகும் பொழுதுபூவெல்லாம் உதிர்ந்து
நாரோடு செல்லும்.போய்வருகின்றேன் என்று சொல்கிறாராம்:) அட  இப்படியெல்லாம்  சென்ற அழகர் கோவிலுக்குள் உடனே உள்ளே  விடப்படுவாரா  என்றால் அதுதான்இல்லை.தீட்டு பட்டதாகச் சொல்லி ஒதுக்கி
உட்கார வச்சிடுவாங்க.ஆடி பதினெட்டாம் பெருக்கு அன்றுதான் தீட்டு கழித்து உள்ளே விடுவாங்க.(என்ன தீட்டோ?:) கள்ளழகர் திருவிழா பிரபலம் என்பதாலோ என்னவோ அழகர் மலையில் 
இருக்கும் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச் சோலை முருகன் 
அதிகம் கவனிக்கப்படுவதில்லை.அருமையான மூலிகை வனம் நிறைந்த மலை
 அழகர்மலை.இப்பொழுது ஆபத்தும் அதிகம் நிறைந்த மலை என்றே
ஆகிவிட்டது.தனித்து சென்றால் அழகாக இருக்கின்றது என்றே சற்று உள்ளே
ஆள் நடமாட்டம்இல்லாத மலைப்பகுதிகளில் சென்று அமர்வதை தவிர்க்கவும்.
கள்ளர்கள்சாக்கிரதை.மலை உச்சியில் ராக்காயி அம்மன் கோவில் உண்டு.
அங்கே இருக்கும்நீர் ஊற்றின் மூலம் தெரியவில்லை.எனினும் வற்றாத ஊற்று.
அருமையான நீரும் கூட.எனக்கு தெரிஞ்சதை செவி வழி அறிஞ்சதை விபரம்
 அறிஞ்சு பார்த்ததை சொல்லியாச்சு.பிழை இருப்பின் பொறுத்தருள்க:)
படங்கள் உதவி :கூகிள் 



Saturday, April 21, 2012

கதம்பம்

அரட்டை அரங்கம் மக்கள் அரங்கம் எல்லாம் பார்க்கும் பழக்கம் இல்லை.கைத்தட்டலுக்காக வயதுக்கு மீறி சிறுபிள்ளைகள் பேசுவதும் பலர் செயற்கைத்தனமாக அழுவதும் பார்க்க ஒவ்வாதவை.என் அம்மா கடந்த வாரம் பார்த்துக் கொண்டிருந்த பொழுது சரி பார்ப்போமே என்று பார்த்தேன்.ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு தலைப்பு கொடுத்ததில் ஒரு பெண் எவரும் யாருக்கும் உண்மையாக இல்லை என்ற தலைப்பில் பேசினாள்.ஆனால் அவளே ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தாள்.லட்சுமண ஐயர் என்ற பெரியவரின் இறுதிச் சடங்குக்கு மாணவிகள் பலரும் சென்றோம் என்று.எவரையும் மடக்கிப் பேசிப் பழக்கப்பட்ட விசு அவர்கள் இதைக் குறிப்பிட்டு நுணலும் தன் வாயால் கெடும் என்பது போல எவருக்கும் உண்மையாக இல்லை என்று வாதிட்டுவிட்டு நீயே அச்சடலம் பார்க்கச் சென்றாய் என்றால் உண்மையும் மனிதாபிமானமும் இல்லாமலா போனாய் என்று மடக்கினார்.அவளும் அவரின் கிடுக்கிப் பிடி கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறினாள்.இறுதியில் தன் தலைப்பில் இருந்து வாபஸ் பெற்றுக் கொண்டு உண்மையாக இருப்பவர்களும் இருக்கின்றார்கள் என்று ஒத்துக் கொண்டாள்.லட்சுமண ஐயர் ட்ரஸ்டுக்கு mudinதவறை பணம் சேகரிக்கும் பணியையும் மேற்கொண்டிருக்கின்றாள்.இதுவரை சரிதான்.ஆனால் அந்த நிகழ்ச்சியின் இறுதியில் விசு அவர்களின் பேச்சு சற்றே அதிரச் செய்தது."என்னுடைய மிகப் பெரிய வெற்றி என்னவென்றால் எவருக்கும் உண்மையாக இல்லை என்ற பெண்ணை கடைசியில் இந்த மேடையில் என் காலடியில் விழ வைத்ததுதான் என்று சொல்லி விடை பெறுகிறேன் "என்று முடித்தார்.அந்தப் பெண் கருத்தளவில் தோற்றாலும் கூட ஒரு நல்ல மனிதாபிமானம் உடைய பெண்ணாக ஜெயித்திருக்கிறாள் தானே?வயதில் பெரியவராக அதைக் குறிப்பிட்டு பாராட்டி தன் பெருந்தன்மை காட்டாமல் தான் ஜெயித்துவிட்டதாகச் சொன்னது உறுத்தலாக இருந்தது.நீ தோற்கவில்லை அம்மா ஜெயித்திருக்கின்றாய் என்று தட்டிக் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.தன் பேச்சுப் புலமையை தனக்கு சரியானவர்களிடம் காட்டி அவர் ஜெயித்ததாக அறிவித்திருந்தால் சரி.வடிவேலு டயலாக் தான் நினைவுக்கு வருகின்றது "நீங்க  அடிச்சது ஒரு புள்ள பூச்சியை .ஒரு வெண்கலக் கிண்ணம் கூடக் கிடையாது."
************************
நீண்ட இடைவேளைக்குப் பிறகு அஜித்-விஜய் சண்டை வீட்ல.உன்னாலதான் அஜித் பிடிக்கலன்னு அண்ணனும் உன்னாலதான் விஜய் மேல வெறுப்புன்னு நானும் போட்டுக் கொண்டோம்.இறுதியில் அஜித் ரொம்ப நல்லவர் என்று அண்ணனும் விஜயைப் பிடிக்கும்  என்று நானும் சமாதானம் செய்து கொண்டோம்.இடைப்பட்ட வேளையில் செம கொட்டு அம்மா இருவருக்கும் வைத்தார் என்பதை அவைக் குறிப்பில் இருந்து நீக்குகிறேன் :)
*****************************
ஒரு வழியாக அருமையான பாடல்களுக்கு யூ ட்யூபில் டிஸ் லைக்  செய்வதன் சூட்சுமம் புரிந்தேன்.தான் அப்டேட் செய்த வீடியோ மட்டும் ஹிட் அடிக்கவும் பிறருடைய அதே வீடியோ வை டிஸ் லைக் செய்துவிட்டால் டிஸ் லைக் அதிகம் வாங்கிய வீடியோ முடக்கப்படும் #என்னா வில்லத்தனம் 
*******************************************
எதிர்வீட்டில் ஒருவர் இறந்து விட்டார்.அவர் மனைவியை நான்கு குழந்தைகள் பெற்ற பின்பு விட்டுவிட்டு வேறு ஒரு பெண்மணியுடன் ஓடிவிட்டார்.சொந்த தாய் மாமனையே திருமணம் செய்து தனித்து வாழ வேண்டிய சூழலில் எப்படியோ பிள்ளைகளை வளர்த்திருக்கின்றார்.(எங்கள் தெருவில் அனைத்து வீட்டிற்கும் வாசல் தெளித்து கோலமிடும் வேலை பார்க்கின்றார்.மாதம் ஒரு வீட்டிற்கு 150 ரூ.சம்பளம் )பதினைந்து நாட்களுக்கும் மேலாக உயிர் ஊசலாடிக் கொண்டிருந்திருக்கின்றது மருத்துவமனையில்.இந்தப் பெண் பார்க்கச் சென்று அவரது இரண்டாவது மனைவியிடம் உன்னைக் கூட பார்த்துக் கொள்வேன்.என்னைத் தனியே விட்டுச் சென்ற இவரை நிச்சயம் பார்க்கவே மாட்டேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார் போலும்.அதைக் கேட்டு அந்த மனிதர்(?) கண்ணீர் உகுத்து அழுதுவிட்டு சிறிது நேரத்தில் இறந்து விட்டார்.உயிரைச் செல்லவிடாமல் ஏதோ ஒன்று இறுதி நேரத்தில் அழுத்திப் பிடிக்கும் என்று கதைகளில் கேட்டும் பார்த்தும் இருக்கின்றேன்.(விஜய் டிவியில் கூட சேத்தன் நடித்து ஒரு கதை இறுதிக் கட்டத்தில் இருப்பவர்களின் மனநிலை அறிந்து அதைச் செய்கிறேன் என்று வாக்கு கொடுத்து உயிர் நிம்மதியாகப் பிரிய வழி வகுப்பார்).தன் தவறு உணர்ந்து அந்தப் பெண்மணியின் முகம் பார்க்கத்தான் அத்தனை நாள் உயிரைப் பிடித்து வைத்திருந்திருப்பாரோ என்று தோன்றுகின்றது.பெற்ற மகளின் வேதனை ஒரு புறமிருப்பினும் தன் தம்பிக்காக அழுத பெண்மணி இன்னமும் ஆச்சரியம்.எப்பொழுதோ இணையத்தில் ஒரு கதை படித்தேன்."நான் அவனை அப்படி நேசித்தேன் இப்படி காதலித்தேன் ஏமாற்றிவிட்டான் என அழுகின்றாயே அவன் தவறுகளை மன்னிக்கும் அளவுக்கு நீ காதலித்து இருக்கின்றாயா ?" என்று யாரோ கேட்பார்கள்.நிஜத்தில் அப்படித் தவறுகளை மன்னிக்கும் அளவுக்கு நேசிக்கும் தாய்க் குணம் சிலருக்கு மட்டுமே வாய்த்திருக்கின்றது இப்பெண்மணி போல.
*************************************
ஓரிரு மாதங்களுக்கு முன்பு மின்சாரம் இல்லாத இரவு வேளையில் மொட்டை மாடியில் நானும் என் அண்ணனும் பொழுதைக் கழித்தோம்.ராஜா இசையமைக்காத சில பாடல்களை அலைபேசியில் கேட்டுக் கொண்டிருந்த பொழுது எண்பதுகளின் இசையமைப்பாளர் பற்றி ஒரு சிறு அலசல் செய்தோம்.சந்திர போஸ் ,மனோஜ் கியான்,ஹம்சலேகா போன்ற பலர் இசையமைத்து இருந்தாலும் ஏன் அதிகம் புகழ் பெறவில்லை?எண்பதுகளில் நல்ல இசை என்றாலே ராஜாதான் இசை என்று அனிச்சையாக முடிவு செய்யும் எண்ணம் எல்லாருக்கும் வர என்ன காரணம் எனப் பேசினோம்.என் அண்ணன் சொன்னது :எத்தனை பேர் இசையமைத்திருந்தாலும் ராஜாவின் தாக்கம் இல்லாமல் அவர்களால் ஒரு மெல்லிசை கொடுத்திருக்க முடியாது.டி.ஆர்.மட்டுமே சற்று தனித்து தெரிந்திருக்கின்றார்.அதனால் தான் ஜாம்பாவானாக ராஜாவால் இருக்க முடிந்தது.அதன் பின்பு வந்த ரகுமான் மட்டுமே ராஜாவின் தாக்கமின்றி தனித்து தெரியும்படியான இசையமைத்தது.ஆகவே தான் ராஜாவுக்கு அடுத்து வந்த இசையமைப்பாளர்களின் பட்டியலில் முக்கியமானதாகவும் போட்டிக்கு சரியான தேர்வாகவும் ரகுமான் பெயர் வரக் காரணமாக இருந்தது என்றார்.சரி என்றே தோன்றியது எனக்கு.தொண்ணூறுகளின் ரஹ்மான் இசை இன்றளவும் பிடித்தமானது என்பதால்.

Sunday, April 8, 2012

எனக்கு பிடித்த பாடல்கள்-பகுதி 3

தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் என்ற வரியை இசையைக் கேட்ட பின்பே பாடலாசிரியர் எழுதி இருக்கக் கூடும்.ஜென்சியின் குரல் குழைந்து உருகியிருக்கின்றது தெய்வீக ராகத்திற்குத் தகுந்தாற் போல.தீபாவும் அழகாகக் காண்பிக்கப்பட்டிருக்கின்றார்.ஒரு பாடல் மனதை விட்டு அகலாமல் நாயகனுக்கு ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கின்றது என்பதற்கு முழுத் தகுதியானது இந்தப் பாடல்.எவ்வளவு மனம் பிறழ்ந்து இருந்திருந்தாலும் சில விஷயங்கள் மனதில் ஆழமாக பதிந்திருக்குமாம்.மொழி இன்னும் சில.அப்படி ஆழமா இந்த இசை நாயகனுக்கு பதிந்திருப்பதில் வியப்பேதும் இல்லை.
"செந்தாழம் பூவைக் கொண்டு சிங்காரம் பண்ணிக் கொண்டு செந்தூரப் பொட்டும் வைத்து சேலாடும் கரையில் நின்றேன்  பாராட்டவோ சீராட்டவா நீ நீந்தவா என்னோடு மோகம் தீருமே "
எனக்குப் பிடித்த வரிகள்.
***************************
நடனம் என்றால் இதுதான்.எடுத்து நீவி விட்ட புருவங்களும் நடுவில் பெரிய பொட்டுடனும் படு அழகாய் நதியா.கம்பீரமாய் SPB ஆரம்பிக்க ரசித்துத் தாளமிடுவது நதியாவின் கால்கள் மட்டுமல்ல நம் மனமும்தான்..13 to .20 வில் வரும் புல்லாங்குழல் ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம் பாடலில் வரும் புல்லாங்குழல் போன்றே அழகானது.2 .13 to 2 . 15 இல் நதியாவின் கண்களின் அசைவுக் கேற்ப அவரின் ஜிமிக்கியும் ஆடுவது அவ்வளவு ரசனையாக இருக்கின்றது.அந்தக் காலத்தில் நதியாவிற்கு யார் உடையமைத்துக் கொடுத்திருப்பார்கள்?.இப்பொழுது பார்த்தாலும் அதிக அழகாகவே தெரிகின்றது.
 
"ஒரு மௌனம் தீர்ந்தது  சுதியோடு சேர்ந்தது ஒரு தாளம் ராகம் சொல்ல சொந்தம் பொங்கும் மெல்ல மாயமல்ல மந்திரமல்ல" 
 என்ன ஒரு சொல்லாடல் ஒரு மௌனம் தீர்ந்தது என்பது வெகுவாக ரசித்தேன்:)
"நம்மை யார் தான் கேட்பது விதிதானே சேர்ப்பது "(3 .44 ) என்ற வரிகளுக்கும் இறுதியில் 4 .03 இல்மறுபடி இளஞ்சோலை பூத்ததா என்று சிவகுமார் ஆரம்பித்து முழுமையாய் முடிக்கும் வேளையில் நதியாவின் நடனம்  அட்டகாசமான அசைவுகளுடன் முடிவது ரசிக்கும்படியான ஒன்று.
*********************************************************************
ஒரு படத்தின் எல்லா பாடல்களுமே அட்டகாசமாய் அமைவது ஒரு வரம்தான்.எல்லா படங்களுக்குமே அப்படி ஒரு வரம் வைப்பதில்லை.ஒரு சில படங்கள் அப்படி வரம் பெற்றவை.அதில் காதல் ஓவியம் படம் முக்கியமானது. 
ராதா நன்றாக நடித்திருப்பார் என்பதில் ஐயமில்லை.ஆனால் அவர் நடனம் பார்த்தால் அப்படித்தான் வருகிறது நல்லவேளை நாயகனுக்குக் கண்ணில்லை :) கைகளும் இடையும் நளினத்தில் வளைய மறுக்கின்றன.முத்திரைகள் என்று உண்டு.அதையும் முழுமையாக அன்றி அவசரப்பட்டே முடிக்கின்றார்.
*********************************************************************** 
ஆரம்பத்தில் வரும் நோ நோ நோ ஜஸ்ட் லிசன் அழகு.2 .36 to 2 .38 வரும் இசைக்கு மழைத்துளியை படமேடுத்தவன் ரசிகன் போற்றத் தக்கவன்.
"நீரோடை போலவே என் பெண்மை நீயாட வந்ததே என் மென்மை "எனும் பொழுது ஸ்ரீதேவியின் அழகு அப்பப்பா.ஜென்சிக்கு ர எப்பவும் கொஞ்சம் பெரிதாகத் தான் உச்சரிக்க வரும் போல.சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பறவுதே வார்ர்த்தைகள் தேவையா...ஆ..ஆ.ஆ.ஆ..என்றே பாடியிருக்கின்றார்.
இந்தப் படம் முழுக்க அற்புத பின்னணி இசை.அதிலும் ஸ்ரீதேவி ரஜினியிடம் காதலை வெளிப்படுத்தி விட்டு முதலில் ரஜினி மறுக்கவும் படபடவென தாழ்வு மனப்பான்மையில் தவிப்பதும் பின்பு அவர் சம்மதிக்கவும் குழந்தையாய் குழைந்து அப்படித்தான் பேசுவேன் என கண்ணீர் தழும்ப புன்னகைப்பதும் ரசித்துக் கொண்டே இருக்கலாம்.
திடுக்கிடும் திருப்பங்கள் த்ரில்லர் என்று ஏதோ எல்லாம் முயற்சி செய்யாமல் ஒரு திருடனின் வாழ்க்கையை அப்படியே அவன்போக்கில் ஓடவிட்டுப் படம்பிடித்த இயக்குனர் மகேந்திரன் பாராட்டத்தக்கவர் .உங்கள் இன்மை உணர்கிறோம் ஐயா..