Wednesday, February 11, 2015

கொடியிலே மல்லியப் பூ..

படம் : கடலோரக்கவிதைகள் 
பாடல் :கொடியிலே மல்லியப் பூ 
இசை : இளையராஜா 
பாடலாசிரியர் வைரமுத்து 
பாடியவர்கள் : ஜெயச்சந்திரன் , ஜானகி 

படிக்கும் பொழுது, தங்கி இருந்த ஹாஸ்டலில் பொழுது போக்காக ஓர் இரவில் தோழி, காதில் கிசுகிசுப்பாகப் பாடியதில் பிடித்துப் போன பாடல் இது :) வருங்காலச் சந்ததிக்கு நான் சொல்லும் தகவல் முன்பெல்லாம் பாடல் என்பது டீ ப்ரேக்க்கு அல்ல.  ஒரு குழும உழைப்பாக இருக்கும்..போற போக்குல மச்சி பச்சின்னு இல்லாம,படத்தோட சூழல், கருப்பொருள் உள் வாங்கி,  உருப்பெற்றதாக இருக்கும்.. இந்தப் பாடலும் அவ்வகை சார்ந்ததே.. ஒரு காலத்தில காதலைச்சொல்லவே தயங்கி இருக்காங்க என்பது கூட,  வரும் காலத்தினருக்கு காமெடியாக இருக்கக்கூடும் .. ஆனால் இருந்தது .

பாடல் முழுக்க கவனிச்சுப் பாருங்க.. ஒரு தயக்கம் இழையோடும் இசையில்.. 4 நிமிடங்களும் , மழை சற்றே வெறித்த யாருமற்ற சாலையில் ,கைகளை உரசவா,வேணாவா என்ற தயக்கத்தின் ஊடே ,மயக்கத்துடன் மெலிதாக நடை போடும் இசை , காதலர்களின் மனம் உணர்ந்தார் போல .. 

கொடியிலே....மல்லியப் பூ...... மணக்குதே மானே...
எடுக்கவா....தொடுக்கவா...துடிக்கிறேன் நானே..
பறிக்கச் சொல்லித் தூண்டுதே... பவள மல்லித் தோட்டம்..
நெருங்க விட வில்லையே நெஞ்சுகுள்ளக் கூச்சம்..(இந்தக் கூச்சம் என்ற சொல்லைக் கூச்சத்துடன் உச்சரித்து இருப்பார்கள் பாடகர்கள் )

கவனிச்சுக் கேளுங்க..ஒவ்வொரு சொல்லின் ஊடேயும் இடைவெளி இருக்கும்..அதை ஆமோதித்து ,அடுத்துச் சொல்ல மெல்லத் தூண்டுவது போல இடையிசை..எப்பவுமே தயக்கத்தில் பேசுபவர்களைத்தடை செய்யக் கூடாது..அதுவும் பேசவே யோசிக்கின்ற விசயத்தில்..இசை அதை நன்கு உணர்ந்து எவ்விதத்திலும் உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன் என்பது போலச் சமர்த்தாக இருக்கும் ..எட்டி எட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டே  பயணிக்கும் உறுத்தலின்றி .. பாடல் முழுக்க mindvoice தான்...அதனால சத்தமாப் பாடக் கூடாதுன்னு சொல்லிருப்பாரு போல :) சின்ன வயசுல இந்தப் பாட்டை டிவியில முதல் முத பார்த்தப்ப, வாயே திறக்காம எப்படிப் பாடுறாங்க என வியந்து ,நானும் முயற்சி செய்ததில் ஒரு ம்காரம் மட்டுமே தொண்டையில் இருந்து வந்தது :( 

ஒரு நல்ல காரியம் என்றால் நல்ல சகுனம் வேணும் இல்லையா...46வது  விநாடியில வரும் பாருங்க ஒரு கோயில் மணி ஓசை..டிவைனு :) அதன் பின்னான வயலின் கூட அநியாயத்துக்கு அடக்கி வாசிக்கும்..அந்த குட்டி குய்குய்குய்  சன்னமாக ஒவ்வொரு சொற்களுக்கும் இடையில் வருவது பாடலுக்கு ராஜா செய்த அலங்காரம் :) 

மனசு தடம் மாறும் அது நினைச்சா இடம் மாறும்..
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்..

இப்படியாகச் செல்லும் மனவோட்டங்கள்...பாடலாசிரியர் பற்றிக் குறிப்பிடா விட்டால் அது பெரும் அநீதி.. வைரமுத்துவின் சிறப்பே இது போன்ற இயல்பான வரிகள் தான்.. வார்த்தை விளையாட்டு,தமிழை ஆழமாகப் பயன்படுத்தி அந்நியப்படுத்திவிடாமல்,ஒரு யதார்த்தமானவனின் குரலாகவே ஒலிப்பது..காதலிக்கும் எல்லாருக்கும் கவிநயமாகப் பேச வந்துவிடுவதில்லை என்பதே நிதர்சனம்.. அதே சமயம் காதலிக்கும் அனைவருக்குமே பொதுவான உணர்தல் என்ற ஒன்று இருக்கும்..அதை உள்ளது உள்ளபடி சொல்லும் பொழுது தானாகவே முன் வந்து மனதுக்கு நெருக்கமாக வந்தமர்ந்து கொள்கிறது மக்கள் பாடலாக :P

சொன்னால் தோற்றுவிடுவோமோ என்றஞ்சியே சொல்லாமலேத் தோற்ற காதல்கள் இம்மண்ணில் தான் எத்தனை..வெளிப்படுத்தப் படாத அன்பு முழுமை பெறாமலே போய்விடுகிறது..ஒருவேளை சொல்லி இருக்கலாமோ, ஒருவேளை சொல்லாமலே இருந்திருக்கலாமோ என்ற நுண் உணர்வுகளைக் கடக்காத காதல் மனம் மிகக் குறைவு..

ஜெயச்சந்திரனும் ஜானகியும் தயங்கித் தயங்கி ,காதலர்  மன ஓட்டங்களைப் பதிவு செய்திருப்பார்கள்.. ஆண் குரலே தயக்கத்துடன் வரும் பொழுது பெண் குரல் எப்படி இருக்கும்..வெளியேவே வராதே...அப்படியான குரல்.. பாறையில பூ முளைச்சு பார்த்தவுக யாரு...எனும் போது ஒரு மெலிதான வலி கொண்டும், அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு என சொல்ல மாட்டாமல் சொல்லும் அழகும், பொத்தி வச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல சொல்லத் தானே தெம்பு இல்ல ன்னு ஒரு இழு இழுப்பாங்க.. 


ஜானகியை ஓர் ஆகச் சிறந்த பாடகி என்பேன்.. சொல்வதைச் செய்யும் கிளிப்பிள்ளைகள் காண்பது எளிது.. பாடலின் அழகியலை உணர்ந்து அதை இன்னும் மெருகேற்றும் பாடகிகள் அரிது..அதிலே ஜானகி "அ.."
கடைசியில் கூட 
காலம் வரும் வேலையில 
காத்திருப்பேன் பொன் மயிலே 
தேரு வரும் உண்மையில 
சேதி சொல்வேன் கண்ணால " தான் முடிக்கிறாங்க :) 

நிறையப் பணம் செலவழித்து வெளிநாட்டு லொகேஷன் இல்ல ஒரு பாலத்தின் மீது பீர் பாட்டிலோடு நண்பர் குழுவோடு நடனம் என்றில்லாமல் , அழகான காட்சியமைப்பு ஒளிப்பதிவு  .  பாடலில் வரும் கடலைப் பாருங்கள் ஏதோ சொல்ல வந்து வந்து தயங்கி,  பின் செல்வது போன்றே தோன்றவில்லை? A to Z வரை எழுத்து ஒரு பக்கம் சத்யராஜ் மறுபக்கம் ரேகா...எதனால் தயக்கம் என்ற மொத்தக் கதையும் இறுதியாக வந்து நிற்கும்..பிரம்மாண்டம் என்பது இத்தகைய பாடல்கள்  உள் நுழைந்து நம் மனதில் காலம் கடந்து ,நம்மில் விரிந்து இசைந்து ஒன்றி விடுவதும் கூடத் தான் :) எளிமையின் பிரம்மாண்டம் இந்தப் பாடல் 


நமது திண்ணை என்ற தமிழ் மின்னிதழில் வந்த பதிவு இது..அதற்கான சுட்டி :) 

Tuesday, February 10, 2015

எனக்குப் பிடித்த டிவிட்டர்கள் பாகம் -3



எனக்குப் பிடித்த டிவிட்டர்கள் பாகம் -1 & பாகம் 2

கவிஞர் மகுடேஸ்வரன் தமிழ் இலக்கணத்தை எளிமையாகவும், சுவராசியமாகவும் சொல்லித் தரும் மெய்நிகர்  தமிழாசிரியர் ..ஆர்வம் உள்ளோர் அவரது முகநூல்ப் பக்கத்தில் தொடரலாம் . 

இந்த ஆண்டில் @saichithra வை நேரில் சந்தித்த அனுபவம் மறக்க முடியாதது.. தனிப்பட்ட முறையில் எவ்வளவு பெரிய பதவி , வெற்றிபெற்ற நபர் ஆனால் பழக இவ்வளவு எளிமையாக இருக்க முடியுமா என்ற பிரம்மிப்பு இப்போ வரை அகலவில்லை..  என்னைச் சந்தித்த மகிழ்ச்சியை அவர் அதிர்ஷ்டமாகப் பார்த்த பொழுது அது இன்னமும் அதிகமானது..  கொஞ்சம் காலர் தூக்கி விட்டுக்கற மொமென்ட் :)

பொதுவாக படம் பார்க்கும் முன் திரை விமர்சனங்கள் படிப்பதே கிடையாது.. ஏனெனில் அவை சுவராசியத்தைக் கெடுத்து விடும் . பெரும்பாலும் விமர்சனம் என்கிற பெயரில் கதை சொல்லிகள் கொஞ்சம் அழுத்திச் சொல்ல வேண்டுமானால் பல முந்திரிக் கொட்டைகளை உருவாக்கி இருக்கிறது இணையம்..  அவர்களிடம் இருந்து காத தூரம் ஓடி நான் தஞ்சம் புகும் இடம் @amas32 blog ... இயன்றவரை சார்பற்ற விமர்சனமும், கதை சொல்லி விடாமல் பிடித்த/ பிடிக்காதவற்றை விளக்கும் பாங்கும் , காயப்படுத்தாமல் எதிர்மறை விமர்சனம் செய்யத் தேர்ந்தெடுக்கும் சொற்களுமாக என்னைக் கவர்ந்திழுத்திருக்கிறார் :)


.இங்கே விவாதங்கள் எப்பொழுதும் இறுதியை எட்டுவதில்லை.அவரவர் அவரவர் சார்ந்த கருத்துக்களுடன் இனிப் பேசிப் பயனில்லை என விலகிச் செல்வதே உலக வழக்கம். ஆயினும் காரசார விவாதங்கள் ஒன்று சேற்றைப் பூசுபவனவாக இருக்கும் அல்லது தனி நபர் தாக்குதலாக இருக்கும்.   அவ்விரண்டும் அன்றி @amas32 -@kryes க்கும் இடையே நடந்த இந்த விவாதம் மிகப் பிடித்தமானது..   அமாஸ் அம்மாவின் தரப்பைத் தேடி இங்கு தர இயலவில்லை

பெண்களைப் பற்றிய மிகச் சிறப்பான புரிதலுக்கான எடுத்துக்காட்டாக இந்த ட்வீட் :)

ரஜினிக்கு ஆகச் சிறந்த சமர்ப்பணம் :) 
எனக்குப் பிடித்த ட்விட்டர் உரையாடல்கள் :)
ட்விட்குறள் 
பிசாசுகுட்டி-சுப்பிரமணி 

ஆகச் சிறந்த நகைச்சுவை போட்டோ அந்தாக்ஷரி by @Mrelani & Bubloo 
நான் ரசித்த பதிவுகள்
சில பதிவுகள் நம் அடி மனதின் ஆழம் வரைத் தாக்கி கண்ணில் நீராக வெளிப்படும்..அது போன்று ஒன்று இது..ஒவ்வொரு பெண்ணுக்குமான மன பிரதிபலிப்பு .

வெகு இலகுவான நகைச்சுவையில் கணவன் மனைவி உறவைப் பற்றிய பதிவு 

வயிறு வலிக்கச் சிரிக்க "தீனித் தின்னிகள் :)

நான் மிகவும் ரசித்த இன்னும் சொல்லப் போனால் அண்ணன் வெளிநாட்டில் இருப்பதால் ஆத்மார்த்தமாக உணர்ந்த சொற்களைக்  கொண்ட டிவிட்லான்கர் இது by @selvarocky 

போரடித்து மொபைலைத் திறக்க , பேருந்து நிலையம் எனப் பாராமல் வாய் விட்டுச் சிரிக்க வைத்த டிவிட்லான்கர்  இது :-)) by @MrElani 

நாடி நரம்பு எல்லாம் குறும்பும் , நகைச்சுவை உணர்வும் ஊறிப் போன ஒருத்தரால தான் ,  இப்படி பெண்கள் விலகிப் போற டாபிக்ல கூட,  நிறுத்திப் படிக்க வைத்து  வயிறு வலிக்கச் சிரிக்க வைக்க முடியும்  :-)) அது முத்தலிப்பின் இந்தப் பதிவு லிங்க் திறக்காமலே எதுவெனத் தெரிந்திருக்குமே :)

எத்தனையோ பிரபலங்கள் இந்த ஆண்டு இப்பூலகை விட்டுப் பயணித்திருந்தாலும் என் மனதில் ஆழப் பதிந்து போனவர் விகடன் ஆசிரியர் S.பாலசுப்பிரமணியன்  . அவரைப் பற்றி ஓரளவே முன்பு அறிந்திருந்தாலும் தற்பொழுது , அவரைப் பற்றிய கட்டுரைகள், பகிர்வுகள் படிக்கப் படிக்கப் பிரம்மிப்பு.. விகடனின் முன்பு உங்கள் மனம் கவர்ந்தவர்களைச் சந்தியுங்கள் என்று ஒரு நிகழ்ச்சி வைத்து அதில் நமக்குப் பிடித்தமான பிரபலங்களைச் சந்திக்க வைத்து , அதைக் கட்டுரையாக பிரசுரிப்பார்கள்.. இப்பொழுது மட்டும் எஸ் பி அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் , அப்படி ஒரு வாய்ப்பை அவருடன் எனக்கு வழங்குமாறு கேட்டிருந்திருப்பேன்.. அந்த அளவுக்கு என் மனதில் உயர்ந்து இருக்கிறார் . பல எழுத்தாளர்களை ஊக்குவித்த அந்த நல்லாசிரியருக்கு என் மனமார்ந்த அஞ்சலி!


நான் மிக மிக ரசித்தக் குறும்படம் எனைச் சாய்த்தாளே .. ஒரு நண்பரின் மூலம் அறிமுகம் ஆகி, அதை டைம் லைனில் பகிர்ந்த பின் , இப்போ மூஞ்சிபுக்ல பரவிகிட்டு இருக்கு வைரஸ் மாதிரி ..இந்தப் பெண்ணின் ஒவ்வொரு முகபாவமும் ரசிக்க வைக்கிறது . அட தமிழ் சினிமாவே   எப்படித் தவற விட்டாய் இப்படி ஒரு நாயகியை :-))


ராஜாவைப் பற்றி  பண்டிட் பாலேஷ்.. பத்திரப் படுத்த வேண்டிய ஒன்று 

சிவன் தருமிக்குக் கொடுத்த பாடல் அன்று ஒரு புலவர் தமிழுக்கு அளித்த குறுந்தொகை ..அதற்கான அருமையான விளக்கம் சொக்கன் குரலில்

மன்னிச்சூ ..மிக தாமத வெளியிடலுக்கு ..மனசுக்குப் பிடிச்ச விசயங்களை மட்டும் எடுத்துகிட்டா ட்விட்டர் ஓர் அருமையான பொழுதுபோக்குத் தளம்.. 
பலதரப்பட்ட மக்களைக் கையாளுவது எப்படி என்பதைப் பற்றி அனுபவப் பாடம் கொடுக்கும் இடமும் கூட :) நான் தொடராவிட்டாலும் எனைப் பின் தொடருபவருக்கு என் நன்றி :) பலரைப் பிடித்தும் பின் தொடராமல் இருக்கக் காரணம் அவர்களுக்கும் எனக்குமான wavelength முற்றிலும் வேறாக இருப்பதால் தான்..இயன்றவரை சகிக்கக் கூடிய , அல்லது கடக்கக்கூடிய நபர்களாகப் பார்த்தே தேர்ந்தெடுக்கிறேன்.. படக்கென அன்பாலோ வேண்டாம் எனத் தோன்றினால் mute போட்டுவிட்டு சகஜமாக இருக்க முடிகிறது.. ட்விட்டர் முழுதுமாய் வசப்பட்டு இருக்கிறது.. ட்விட்டர் விட்டு விலகி இருத்தலும் கூட ...என் எழுத்தை ரசிக்க,விமர்சிக்க என ஒரு நட்பு வட்டம் என்னை நன்கு செதுக்கவே செய்திருக்கிறது..அவர்களுக்கு என் சிறப்பு நன்றி :)

இனி எல்லாம் சுகமே.. :-)